Tuesday, January 10, 2023

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப்பாடுகளாகவும், எதார்த்தத்தின் மீது வீழும் சிறு அழுத்தமாகவும் தான் .இருக்க முடியும். இப்படி ஒரு பத்தியில் எழுதுவேன் என நினைத்து பார்த்ததில்லை.

2012'ல் மிச்சிகன் மாகாணத்தில் நான் கால் வைத்தபோது வெப்பநிலை கிட்டத்தட்ட நூறை (farenheit) தொட்டிருந்தது. என் உடல் வெயிலில் பிறந்தது. தகனத்தில் இருக்கும்படி விதிக்கப்பட்ட ஒரு இடம் தான் வேலூர். அங்கும் அதன் சுற்றத்திலும் இருக்கும் சிறுநகரங்களில் தான் என் சிறு வாழ்க்கை இருந்துகொண்டிருந்தது. அதன் அக்கம்பக்கமான சென்னையிலும் வெயில் சொல்ல வேண்டியதில்லை. அப்படி இருந்த உடலுக்கு மிச்சிகனின் முதல் மூன்று மாதங்கள் மிகச்சரியான ஒரு இடமாகவே பட்டது. ஆனாலும், உண்மை வேறுபட்டது. தெரிந்தது தான்.  குளிரை முதல் முறை சந்தித்தபோது ஆணவத்தில் எதிர்கொண்டேன். அதன் பின் அதன் ஆணவத்தில் தான் வாழ்க்கை ஓடியது. கிடைக்கும் நேரத்தில் எல்லாம் சூரியனை அணைத்துக்கொள்ளும் ஒரு வாழ்க்கை தான் தேவைப்பட்டது. பன்னிரண்டு மாதங்களில் மூன்றே மாதங்கள் வெயில் படலம். மற்ற மாதங்களில் குளிர்.

அப்படி ஒரு நிலப்பரப்பில், உள்ளிருப்பு வாழ்வு விதந்தோதி வாழப்படும். நான்கு சுவர்களும் அதற்குள் மனதிற்கினிய மக்களும் தான் இங்கே துடிப்புடன் வைத்திருக்கும். அதற்கேற்ப அன்றாடங்கள், வார இறுதிகள், திரைப்படங்கள், அரசியல் பேச்சுகள், அண்டை வீட்டினரின் புதிய வாகனங்கள், பிள்ளைகளின் கல்வி, என பேச்சுக்கச்சேரிகள் நிரம்பிய ஓரிடம். அங்கு சிறிய ஒரு ஓட்டை போட்டுக்கூட இலக்கியம் உள்ளே நுழையாது. ஓட்டை போட யாருக்கும் நேரமில்லை. ஆனால், வாசிப்பு ஒரு தனி மனித இயக்கம். தனித்தே இருப்பது, ஆனால் தனியர்கள் கூட்டுப்புழுக்கள் ஆக நேரம் எடுப்பதில்லை. தன்னைப்போல் இன்னொருவரும் அந்த புழு தான் என்பதை அறிவதில் தான் தயக்கம். தெரிந்த பின் கூட்டு சேர்வதில் குழப்பம் இல்லை.

அப்படி ஒரு குழுவில் இணைந்தபின் தான் குளிர் எங்கோ தள்ளிப்போனது. எனக்குள் இருந்த வாசிப்பு, இன்னொருவரின் வாசிப்பின் அருகாமையை ரசித்துக்கொண்டது. குழுவாக இணைந்து தேர் கட்டமைக்கப்பட்டது. தேர் ஒவ்வொரு சரியான நேரத்திலும் வலம் வருகிறது. சிறிய தேர் தான். இழுத்து வர பிஞ்சுக்கைகள் இருந்தாலும் சரி, பூத்துப்போன கைகளாக இருந்தாலும் சரி, அனைவரையும் தேர் தன்னோடு சேர்த்துக்கொண்டது. தமிழ் ஆர்வலர்கள் குழு என்ற தேரில், சிறிது வருடங்கள் குளிர் வடங்கள் இழுத்திருந்தேன் என்பது இப்போதும் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் பெருமை வார்த்தைகள்.

பல்கிப்பெருகி எழுந்த கலை, இலக்கிய செயல்பாடு எனக்கே புதிதானது. ஆனால் அந்த வேட்கையை அது கேட்கும். தெரியாதவரை தான் அது இருட்டு அறை. தெரிந்தபின் கைகொள்ளா சூரியன். கனன்று எரிந்தது. இங்கு நான் செய்திருந்த சில காரியங்கள் எப்போதும் மனதிற்கு இனிய நறுமணத்தை என்னுள் பரப்பிக்கொண்டே இருக்கும்.

  • கதைகள் சொல்வேன் என்பதை அறிந்தேன் 
  • வாசிப்பில் கல்கியையும், சுஜாதாவையும் தாண்டிய இலக்கிய மரபு உண்டு, அதைத் தொடரலாம் என்ற போக்கை ஒவ்வொரு முறையும் அறைகூவுவேன் என அறிந்தேன் 
  • என் வாசிப்பில் திரண்டெழுந்த மென்பிள்ளையென முளைத்த கதைகள் அச்சுக்கு செல்லும் என்பதை உணர்ந்தேன் 
  • இலக்கிய மரபில் மாண்புடன் படைப்புகளை எடுத்து முன் செல்லும் எழுத்தாளர்களிடம் நேரில் பேசினேன் 
  • என்னை வழிநடத்தவே நான்கு பேர் தேவை என்றிருக்கும் போது, கை விட்டு எண்ணும் அளவிற்கு நிகழ்வுகளை வழிநடத்தி இருந்திருக்கிறேன்
  • ஒரு மேடை நாடகத்தை திரைக்கதைக்காகவும், வசனத்திற்காகவும், சிறிய இணை இயக்கத்திற்காகவும் பயன்பட்டிருக்கிறேன்.
  • ஒரு சிறிய ஒளிப்படத்திற்கு எழுதி இருக்கிறேன் 
  • என்னிடம் இலக்கியம் பேசலாம் என்று எப்பெரும் கூட்டத்திலும் தேடி வரும் நண்பர்களை பெற்றிருக்கிறேன் 
  • மூன்று மின் புத்தகங்கள் என் பெயர் தாங்கி வந்ததில் இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன் 
  • எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கியத்திலும் அதன் மகத்துவத்திலும் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன் 
இவை அத்தனையையும் சேர்ந்தளித்த மிச்சிகனில் நான் இப்போது இல்லை. என் தாய் வெய்யில் தேடி இன்னொரு மாகாணத்திற்கு குடி புகுந்திருக்கிறேன்.

இலக்கியமும் என் பெரும் தந்தை சூரியனும் என்னை இன்னும் வழி நடத்தும் என்ற நம்பிக்கையுடன், இன்னும் வாசிப்பேன், இன்னும் எழுதுவேன்!!

Tuesday, December 20, 2022

வாழ்வை வாழ்ந்துகொண்டே
இருக்கிறேன்
அதற்கும் வேறு வேலை
இருப்பதாக தெரியவில்லை
சேரலாம்
சேராமலிருந்தால்

தலைப்பும் நானும்

என் குழுவில்
இப்போது யாருமில்லை
தலைப்பும் நானும்
அதன் அமைதியும்
மட்டும் தான்

கவிதை ஆவதில்லை

மூளை கவிதை எழுதினால்
இலக்கணம் அதிகம் ஆகிறது
இதயம் கவிதை எழுதினால்
சோகம் அதிகம் ஆகிறது
மூலாதாரங்கள் கவிதை எழுதினால்
காரம் அதிகம் ஆகிறது
எது எழுதினாலும்
கவிதை ஆவதில்லை

உப்புசம்

கவிதைகளின் இருண்ட துளை
எப்போதும் காலியாகத்தான் இருக்கும்
ஆனால் கவிகள் எப்போதும்
நிறைந்திருக்கிறார்கள்
உப்புசம் அதிகம் ஆகிறது
தாத்தா பாட்டி கதைகள்
இல்லா வாழ்க்கை
ஒன்றும் பிழையில்லை
பிழைத்திருப்பீர்கள்
எந்த சொல்லும்
இல்லாத ஒரு
கவிதை எழுத நினைக்கிறேன்
சொல் கவிதை
எழுதிய நேரங்கள் போக
பிறகெப்போதும் நான்
வாழ்ந்த வாழ்க்கை
அந்த சொல்லில்லா
கவிதைகள் தானாம்
முன்பே சொல்லியிருக்கலாம்
என்னுடைய எந்தக்கவிதை
கதைகள் எழுத வைக்கும்?
இது இல்லை என்று தெரிகிறது
கடவுளுக்கும் எனக்கும்
ஒரே ஒரு வித்தியாசம் தான்
அவனுக்கு வாழ கொடுத்துவைக்கவில்லை
எனக்கு வைத்திருக்கிறது

எது

நிலா இல்லாவிட்டாலும்
கவிதைகள் இருந்திருக்கும்
ரோஜா இல்லாவிட்டாலும்
இருந்திருக்கும்
நாம் இல்லாவிட்டாலும்
இருந்திருக்கும்
எது இருப்பதனால்
அது இருக்கிறது?

நாளைக்கான இரை

எழுதித்தான் சொல்ல வேண்டும்
என்பதில்லை
புறாக்களின் கூடுகளில்
எச்சங்கள் தாண்டி
அவை இரவில் சிந்தும்
சிறுதுளி கண்ணீரில்
நாளைக்கான இரை
கிடைக்கும் என்ற
நம்பிக்கை
கேட்டுக்கொள்கிறேன்
நீங்கள்
கேட்காததால்
நகுலனைப்போல
நானிருந்திருக்கிறேன்
நானிப்படி இருந்திருப்பேன்
என தெரிந்திருந்தால்
அவர் இன்னும்
சில நாள்
இருந்திருப்பார்
பூங்காவின் அழகிய
பூக்களில் தான்
எத்தனை வன்முறை!
என்னையும் அவளையும்
அவரையும் அதையும்
ஒரு சேர
முகர்ந்துகொண்டே
இருக்கிறது
சரி என்பதில்
தான்
தவறும் இருந்தது
எல்லா நாளும்
நல்ல நாள்தான்
ஆனால்
நேற்று ஏன்
அப்படி ஆனது?
என்ன செய்தேன்
என்பதில் எந்த
குழப்பமும் இல்லை
ஏன் என்பதில் தான்
அடங்கிப்போய்
கிடக்கிறது
உனைப்பிரிந்ததில் எனக்குத்தான்
உயிர் அழுத்தம்
எனைப்பிரிந்ததில் யாருக்குமே
அழுத்தமில்லை
அந்த இயற்கைக்கும்!!
ஏற்றுக்கொள்ளும் தூரத்தில்
தான் இருந்தாய்
ஆனாலும் ஏற்றுக்கொண்டால்
நான் மனிதனல்லவா?
அதுவல்லவே நான்
நாளைக்குள் நானும்
நேற்றைக்குள் நீயும்
இருந்ததில் தான்
பிளவு இருக்கிறது
எதிர்காற்றில் ஒரு நாள்
நான் இழந்தேன்
தேடியதில்
நீ தான்
கிடைத்தாய்
நான்
நீ
மறுமுறையும்
நான்
என்ன செய்தால்
நீ?

இயற்கை

இயற்கை பிறழ்ந்தபோது தான்
நான் பிறந்தேன்
நான் தெளிவாகத்தான் இருக்கிறேன்
பிறழ்ந்த இயற்கை தான்
பிறழ்ந்துகொண்டே இருக்கிறது
ஆனாலும் என் தாய் இயற்கையை
நன்றாகவே புரிந்துகொள்கிறேன்

நீ கவிதை

நான் கவிதைகள்
எழுதி நீயானேன்
நீ கவிதைகள்
எழுதும்போது 
நான் நானாகவே
இல்லை

நானாக நான்

அனைவராகவும் நான்
இருக்கும்போது தான்
நானாக நான்
இல்லாததை மறந்தேன்

இயல்பின் இயற்கை

வரண்ட தாள்கள்
இயல்பின் இயற்கை
இருப்பதே இல்லை
தாள் சில நேரம்
சருகாகிக் கிடக்கிறது
காற்று நகர்ந்தாலே
உடைந்து போகிறது
இவையெல்லாம்
என் கவிதைகள்
என்றால்
நம்பவா போகிறீர்கள்?

கவிப்பொருள்

பேச விட்டிருந்தால்
பேசித்தான் இருப்பான்
பேசுபொருளாக அவர்கள்
இருப்பதால் இவனுக்கு
கவிப்பொருள் தான்
சரிப்பட்டு வருகிறது
அது பேசினால்
பேசுபொருளெல்லாம்
என்னவாகும் என்பதில்
கவிதைக்கு ஒரு
பொருட்டும் இல்லை

நாற்பத்தி ஐந்து

என் மீது நாற்பத்தி ஐந்து
கிலோ எடை
அதன் மீது
மொத்த பிரபஞ்சமே
எடையாக இருந்தது
பிரபஞ்சம் இலேசாகத்தான் இருக்கிறது
நாற்பத்தி ஐந்து தான்
பஞ்சாகவே இருந்தாலும்
கனக்கிறது

ஒளி கக்கும் மிருகம்

எழுத்தாள நண்பர்களிடம்
கவிதைகள் கொடுப்பதில்லை
ஆப்பிரிக்காவில்
தங்கம் புதைந்திருக்கும்
போது பக்கத்தில் இருக்கும்
கருங்கல் தங்கத்தை
ஒளி கக்கும் மிருகமாகத்தான்
பார்த்திருக்கும்

எந்தக்கவிதை

தமிழ்க்கவிதை எழுதினால்
ஆங்கிலக்கவிதை தோள் மீதேறும்
ஸ்பானியக்கவிதை எழுதினால்
ஜப்பானியக்கவிதை தோள் மீதேறும்
எந்தக்கவிதை எழுதினால்
நானே தோள் மீதேறுவேன்!!

வக்காலத்து

எந்தவொரு கவிதையிலும்
ஒரே கேள்வி
இதெல்லாம் கவிதையா
கவிதை ஒவ்வொரு
முறையும்
வக்காலத்து வாங்கும்
நான் அதுவல்ல எனில்
நீயும் அதுவல்ல எனும்

தீர்ப்பு

அந்த பஞ்சாயத்தில்
சரியாகத்தான் பேசினேன்
அனைவரும் ஆமோதித்தனர்
ஆனாலும்
தீர்ப்பு எனக்கெதிராக!
அடுத்த முறை
அமைதியாக இருந்து
வாதாடினேன்
ஒரு வார்த்தையும் இல்லாமல்
அப்போதும்
தீர்ப்பு எனக்கெதிராக!
இன்னொருமுறை
நீதிபதியே எனக்காக
ஆனாலும்
தீர்ப்பு எனக்கெதிராக!
என் தீர்ப்பை
ஒவ்வொரு முறையும்
நானே எழுதி இருக்கிறேன்

புனைப்பெயர்

என் கவிதைகளுக்கு
நான் தான் பெயரிட்டிருக்கிறேன்
எனக்கு மட்டும்
நான் பெயரிடவில்லை
இதனால் நானே
ஒரு கவிதையென்றும்
பொருள்படாது
எனக்கு நானே
பெயரிட்டிருந்தால்
புனைப்பெயர் தேடி
ஓடியிருக்க மாட்டேன்

ஒர் இரவில் என் கவிதை

ஒர் இரவில்
என் கவிதை அனைத்தும்
கடலில் மிதந்தது
ஒரு கவிதை மட்டும்
சுவாசத்தை ஒவ்வொரு
மிடறாக உமிழ்ந்தது
அது ஒன்றில் தான்
நிலா அழகாய்
வர்ணிக்கப்பட்டிருந்தது
மற்ற கவிதைகளில்
எல்லாம்
மனித மனங்களின்
எச்சம் தான்
கடும் கனம்

நானே

எங்கு சென்றாலும்
நானே இருப்பதில்
எனக்கு மகிழ்ச்சி
முடிவிலும் நான் மட்டுமே
இருப்பது தான்
வருத்தம்

கல்லும் கலையும்

ஒரே ஒரு குறைதான்
எந்த ஓவியத்திற்கும்
எந்த சிலைக்கும்
வேர்ப்பதில்லை
அங்கு இருப்பதெல்லாம்
கல்லும் கலையும்
வேலையை பார்த்துக்கொண்டு
இருந்துகொள்ளலாம்

சிறு விதை

எப்படியாவது மீட்டுவிடுங்கள்
உங்களுக்கு ஒரு பெரும்கவி கிடைப்பான்
அல்லது
ஒரு மாபெரும் ஞானி
அல்லது
அறம் தோய்ந்த அரசியல்வாதி
அல்லது
அன்பே உருவான தாய்
சரி உங்களுக்கும் வேண்டாம்
எனக்கும் வேண்டாம்
ஒரு சிறு விதையாவது

எண்பது

ஒவ்வொரு சொல்லிலும்
ஒரு வருடம்
வசிக்கிறேன்
அப்படியானால்
பல மில்லியன் வருடங்கள்
ஆனால் எண்பதில்
இறந்தேன்
எண்பதில் எண்பதும்
என் என்பதுதான்
அடர்த்தி போல

சிலை

இங்கு தான் இருக்கிறேன்
இன்று இங்கு தான் இருக்கிறேன்
நேற்றும் இருந்திருக்கலாம்
நாளை இல்லாமலிருக்கலாம்
எப்போதும் ஓரிடத்தில்
ஒர் மனதில்
இருப்பது எப்படி
இந்த சிலைகளுக்கு
வாய்க்கிறது!!!

அவனின் ஒளி

நான் தேடிக்கொண்டிருந்த ஒளி
இன்று இப்போது என் முன்னே
சிலை போல நின்றது
அதனின் கைப்பிடியில் தான்
என் வாழ்வின் முதல் ஒளி
அதனுள் என் முப்பாட்டனும்
அவனின் ஒளியும்
சுவாசித்தது
என் ஒளி அவர்களிடம்
கடன் வாங்கி வந்தது
அவர்கள் கேட்கும்போது
கொடுத்தாக வேண்டும்
கேட்கக்கூடாதென
என்றும் எரியும்
சூரியன் கட்டளையிட்டான்

நான் கவிதை

நீ நீயாகவே இரு
நான் கவிஞனாகவே இருக்கிறேன்
இல்லாவிட்டால்
நீ நானாகி விடுகிறேன்
நான் யாராகிவிடுகிறேன்
என்பதில் குழம்பி
இன்னுமொரு கவிதை
எழுதுகிறேன்

வெளியே

கவிதைகளுக்குள்ளேயே என்னை இருக்க விடுங்கள்
வெளியே வந்தால் சகமனிதனாகவே இருக்கிறேன்

ஓரிலை

காட்டு வழியில் அவள்
தனித்தென்னை காட்டு மரத்தின்
நடுவே சேர்த்தனைக்கிறாள்
உச்சாணி மரக்கிளையில்
தொட்டனைத்து ஏறியது எங்கள் கிளர்ச்சி
கீழ் இறங்கியதும் அவள் ஓரிலையானாள்
என்னை வேராகச்சொன்னாள்
அவளைப்பார்த்துக்கொண்டே இருக்கும்
மண் படர்ந்த வேரானேன்
வருடங்கள் அலைந்தோடியது
கிழடு தட்டிய வேரானேன்
இளங்காற்று அசைத்ததில்
அவள் கால் இடறி
என் மேல் தான் விழுகிறாள்
வயது தட்டவில்லை
அதே கிளர்ச்சி
இதயம் தான் இல்லை

இசை

உடையும் பொழுதெல்லாம்
என் மேல் அவனின் இசையை கவிழ்த்துக்கொள்கிறேன்
அவனுக்கும் வேறு வேலையில்லை
எச்சில் இலையை கிருஸ்துவாக்குகிறான்
இன்னொரு இசை வந்தென்னை
பிரித்துச்செல்கிறது

சிதை

சிதைந்ததில் இருந்து தான் பிறந்தேன்
உருவாகிக்கொண்டு இருக்கும்பொழுதில் தான் இறந்துவிட்டேன்
என்னைத்தொகுத்தால் நான் இறக்கிறேன்
உடைத்தால் பிறக்கிறேன்
சேர்க்கும் விசையில்
யார் இருப்பார்?
யார் இருந்தாலும்
அதில் நான் இருப்பதாய் இல்லை

Wednesday, September 28, 2022

சாமி

ஒவ்வொரு கடவுளிடமும் 
ஒவ்வொரு வார்த்தையை 
காணிக்கை ஆக்குவது என் வழக்கம் 
நிறைய கோவில்கள் 
நிறைய சாமிகள் 
எல்லா வார்த்தைகளும் 
இப்போது சாமிகளின் வயிற்றில் 
கடைசி ஒரு வார்த்தை தான் இருந்தது 
எந்த சாமியும் மிச்சமில்லை 
எனக்கே காணிக்கை ஆக்கினேன் 
அனைத்து சாமிகளும் 
அத்தனை வார்த்தைகளையும் 
என் காலடியில் கொட்டினர் 
நான் சாமியானேன்

கூன்

கனமாய் இருந்தது 
நான் பேசிய ஒரு வார்த்தை 
இருவத்தியெட்டாம் வயதில் 
பேசினேன் 
இப்போது எண்பத்து ஒன்பது வயது 
ஆகிறது 
அந்த வார்த்தை பேசி இருக்க வேண்டாம் 
அது முதுகில் உட்கார்ந்து உட்கார்ந்து 
கூன் விழுந்ததுதான் மிச்சம் 

வார்த்தை இல்லை

நான் பிறந்தேன் 
அதிகம் பேசுவேன் 
என்றாள் பெற்றவள் 
பிறந்தபோது 
எவ்வளவு பேசினேன் என்றேன் 
அப்போது அழுதாய் 
வார்த்தை இல்லையென்ற 
அழுகை இல்லை 
இனி எவ்வளவு பேசி 
வாழ்வை வாழ வேண்டும் 
என்று அழுததாக 
அந்த அமைதித்தாய் 
சொன்னாள் 

நாக்கு

எப்படியும் பேசுவாள் 
என்று நானிருந்தேன் 
நான் பேசுவேன் 
என்று அவளிருந்தாள்
நடுவில் இருந்த அமைதி 
உயர் ரத்த அழுத்தத்தில் 
எங்களின் நாக்குகள்
வழியே இதயத்தில் 
இறங்கிக்கொண்டிருந்தது

மூக்கு நுனி

அடங்கிப்போன ஒவ்வொருவருக்கும் 
பேசும் ஆசை வந்தது 
மண் பிளந்தது 
நனைந்த சாம்பல் புகை கிளப்பியது 
தொண்டை செருமிக்கொண்டன 
அடங்கியவை இப்படி பேசின
இப்போதாவது குறையுங்கள்
நீங்கள் பேசும் பேச்செல்லாம் 
எங்களின் அமைதியை 
நோக்கி வருகின்றன 
நாங்கள் அமைதி இழந்தால் 
உங்களுக்கு வாரிசுகள் அமையாது 
அப்படியே அமைந்தாலும் அது 
பேரிரைச்சலோடு பிறக்கும் 
குறைவாக பேசுங்கள்
உங்கள் காலடி மண்ணில் இருக்கும் 
எங்களின் மூக்கு நுனி 
உங்களை எப்போதும் பாராட்டும்

அமைதி

குழந்தைக்கென ஒரு மொழி 
புலவனுக்கென ஒரு மொழி 
காதலுக்கென ஒரு மொழி 
அழுகைக்கென ஒரு மொழி 
பேசுபவனுக்கு ஒரே மொழி 
அமைதி

இன்னுமொரு புதிய நிலா

 ஒரு நாள் 
பூமியின் அத்தனை
மனிதரிடமிருந்தும் 
குரல்வளை பிடுங்கப்பட்டது 
ரோஜாக்கள் புதிதாய் பிறந்தன 
இன்னுமொரு புதிய நிலா தோன்றியது 
அலைகள் ஆலோலம் பாடின 
கிளிக்கூட்டம் வெட்டவெளியில் காதல் புரிந்தன
தாள்கள் எல்லாம் புதிய உலகை நோக்கின 
கவி என்று சொன்ன ஒவ்வொருவரும் 
கவிதைகள் எழுதுவதை மறந்தனர் 
இலக்கியம் செழித்து வளர்ந்தது

அவள்

பேசிக்கொண்டிருந்தால் போதும் 
இப்படியே இருந்துவிடுவேன் என்றாள் 
பேசாமல் இருந்தால்
கொன்றுவிடுவேன் என்றாள் 
உயிர்த்திருப்பதற்காக 
பேசிக்கொண்டிருக்கிறேன் 
அவள் இறந்த பின்னரும் 

ஈரம்

 பேசுதலின் நடுவே 
அவ்வப்போது அமைதி 
வந்து செல்லும் 
அமைதிக்கு பின் 
சொல்லும் செல்லும் 
கேட்டுக்கொண்டிருந்த காதுகள் 
அமைதியை நோக்கிச் செல்லும்
இதயங்கள் மட்டும் அங்கேயே 
அணைத்துக்கொண்டு 
மெழுகுவர்த்தியுடன் காத்துக்கொண்டிருக்கும் 
காத்துக்கொண்டிருப்பது 
அமைதிக்கல்ல 
சொல்லுக்கும் அல்ல 
வறண்ட காற்றுக்குள் 
கொஞ்சம் ஈரம் புக

Monday, August 08, 2022

விதி

கைகோர்த்துக்கொண்டே நடந்த 
கடற்கரையில் 
நீயும் நானும் 
பிறகென்ன 
மண் அதன் வேலையையும் 
அலை அதன் வேலையையும் 
காற்று அதன் வேலையையும்
பார்த்தது 
ஆனால் கவிக்கு தான் 
வேறெந்த வேலையும் இல்லை 
கவிதைகள் எழுதித் தள்ளிவிட்டான் 
ஆனாலும் அலைக்கு 
கோபமில்லை
அதற்கு செயல்படுவது தான் விதி 

எங்கோ
எப்படியோ 
இருந்திருக்க வேண்டியவன் நான் 
இப்போது 
எப்படியோ 
இருக்கிறேன்
இருந்திருக்கலாம் 
ரு எப்போதாவது ற வாக மாறும் 
காத்திருப்போம்

Monday, June 20, 2022

கவி வாழ்க்கை

நிறுத்தமில்லா பேருந்துகளில்
இருக்கும் பெட்ரோலென
கவி வாழ்க்கை
எரிந்துகொண்டேதானிருக்கும்
சேருமிடத்தில் ஓட்டுனருக்குத்தான்
புன்முறுவலும் கைகுலுக்கல்களும்
எரிந்த புகை
செவ்வானத்தில் இன்னொரு
கவி தேடி
செல்லும்

ஏப்பம்

கவிப்பெண்ணொருத்தி
எனக்காக கவிதை
சமைத்தாள்
சாப்பிட்டுவிட்டு
ஏப்பம் விட்டதில்
பல அமைதிகள்
விழுந்துகிடந்தன

மதிப்பு

கவிதை விற்பதில் சலனமுண்டு
யார் வாங்குவார்
வாங்கினால் மதிப்புண்டா
வான் கோவின்
உருளைக்கு உண்டான
மதிப்பு என் கவிதைக்கு இல்லை
வாங்கவேயில்லை
விற்றால்தானே
பின் தான் தெரிந்தது
நான் கவியில்லையென்று

கவி-பசி

எந்தக்கவிதையும்
ஆரம்பத்தில்
கிளர்ச்சி
மத்தியில்
குழப்பம்
முடிவில்
சன்னதம்
கவிக்கு
பசி

காற்றில்லாப் பை

சுவாசம் எனக்கென்றாள்
நான் எனக்கென்றேன்
தத்தெடுக்கவா என்றாள்
முடியாது, 
நொடிக்கொருதரம்
அது உள் சென்று
சூல் கொள்ளும்
பின் வருமொன்று
பிள்ளைகளோடு வரும்
அதில் எதை தத்தெடுப்பாய்?
அது தாயுடனே வரும்
அதை தத்தெடுக்கிறேன்
அந்த ஆதிசுவாசம்
எனக்கு வேண்டுமென்ற என் காதலி
இரண்டாண்டு காலம்
சுவாசத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தாள்
காற்றில்லாப் பையில்
காதல் அடைத்தாள்
பின் மறைந்தாள்
சுவாசமில்லாக் காதல்
இன்னுமொரு காதலிக்காக
காத்திருக்கவில்லை
உதடுகளுக்காக
காத்திருந்தது

கவிதை - II

அசைந்தாடும் நதி
எதிரே கவி
நடுவில் கவிதை
யாருக்கு சொந்தம்?

ரூமி

ரூமியிடம் கடன் கேட்டேன்
காதல் தரமாட்டேனென்றான்
மது கேட்டேன்
தீர்ந்து நூற்றாண்டுகள் ஆனதென்றான்
என்னதான் உண்டு
ஒன்றுமில்லை
என் கவிதைகள் உண்டு
அதைக்கொண்டு என் நாவைத்
தடவினேன்
கவிதைகள் புரண்டன
கவிப்புத்தகங்கள் திரண்டுழுந்தன
மொத்தமாய் விற்றுப்போயிற்று
ரூமி இமயமதிற சிரித்தான்
என் கவி உன் நாவில்
ஏறினால்
ஏன் இவ்வளவு பழுப்பேறியுள்ளது
ஒன்றிலும் காதலும் இல்லை
மதுவும் இல்லை
விசுக் விசுக்கென
நின்று நின்று ஓடும்
ஓணான் போல உள்ளதென்றான்
உன் கவிதைகளின் 
இண்டுகளில் சந்தம் சேர்த்தேனென்றேன்
அமைதி நிரப்ப முடியாத உன்னால்
சந்தம் தான் நிரப்ப முடியும்
இரைச்சலோடே இருந்துகொள்
இறந்தபின்னும் சந்தம்
உன்னை அழுத்தாமலிருந்தால்
சரி

புங்க மரம்

என் வீட்டின் புங்க மரம்
தூங்கிக்கொண்டிருக்கும்
எப்போதும்
பிள்ளைகள் வந்தால் விழிக்கும்
தொட்டுத்தொட்டு விளையாடும்
பிள்ளைகள் இன்னும் பிரசித்தம்
இரட்டை ஜடையின்
பெண் பிள்ளைகளிடம்
காதல் பெருத்தோடும்
ஜடைகளின் நுனியில் 
எப்படியாவது தன் கிளையை
மணம் முடித்துவிட திளைக்கும்
இன்று வரையில் மணம் முடியவில்லை
ஜடைகளுக்கு அவ்வளவு தடைகள்
ஓரிரவில் பெண்ணொருத்தி
முசுமுசுவென அழுதாள்
புங்கம் குறட்டை விட ஆரம்பித்தது
இரட்டை ஜடையின் தாய் என்றாள்
தூக்கம் கலைந்தது
நீ பிள்ளை இல்லை
ஆனால் உன் பிள்ளை
எனக்கு ஆதிக்காதலி
என்னவாயிற்று?
ஜடைகள் புதைக்கப்பட்டன
செய்தி விம்மல்களானது
புங்கம் மறுமுறை
தூங்கியது
மெல்லிய ரசக்கண்ணாடின்
உடைந்த துகள் போல
இன்னும் உடைபட ஏதுமில்லை
என்பது போல
இன்னொரு காதலுக்கு
காத்திராமல்
மண்ணுக்கடியில் ஒவ்வொரு
வேரையும் தற்கொலை
செய்துகொள்ளுங்கள் என
மன்றாடியது
வேர்களுக்கேது காதல்
விடாமல் வளர்ந்தது

ஒட்டுண்ணி

மீட்பதற்கு எதுவுமே இல்லை
நானும் இல்லை
அவளும் இல்லை
தனித்தனியே கலைந்து
விட்டிருந்த காதல் மட்டும்
ஒட்டுண்ணியாய்
இன்னொரு காதல் அணியிடம்
பிச்சை எடுத்துக்கொண்டிருந்தது

கவிதை

அலைந்து கொண்டிருக்கும்
உணர்வுக்குழம்பில்
சிறிது சிறிதாக
மாற்றம் ஆனது
புல்லாங்குழல் இசைக்க
கவிதை நின்று போனது

மகள்

எழுந்தெழும் காதலில்
பிறந்த மகள்
மடியினில் பூவாக
மலர்ந்து கிடந்தாள்
நாளை திறப்பு
அடுத்த நாள் உள்ளிருப்பு
பிறகு மடியினில் குளம்
நீரில் பிறப்பதுதானே
என் மகளின் குணம்

காது

எம்பிக்குதித்து அடித்ததில் 
இமயமலை இரண்டு துண்டானது 
அதில் இரு முனிகள் 
ஒருவருக்கு காது அறுந்திருந்தது
இன்னொருவருக்கு கை 
ஆனாலும் அத்தனை அன்பு 
அடித்துடைத்த என் கைக்கு 
கட்டு போட்டார்கள் 
பின் தவத்தை தொடர்ந்தார்கள் 
நான் கடவுளாக
இருக்க வேண்டுமா 
என யோசித்தேன்

Sunday, June 05, 2022

காயம்

என்னருகில் என் கவிதை
முதல் முறை
வெறுப்புடன் கூடிய பயம்
காதல் கவிதை தான் அது
என்னருகில் இருப்பதினால்
நான் ஒட்டியிருப்பதனால்
தூக்கி எறிந்தேன்
கவிதைக்கு பெரும் காயம்
காயத்தினில் சிறிது
காதல் காத்துக்கொண்டிருந்தது
நேரமில்லை
அடித்து கொன்றே ஆகவேண்டும்
ஒரே அடி
காதல் அலறி அடித்துக்கொண்டு
இன்னொரு கவி நோக்கி ஓடியது

காகிதப்புத்தகம்

புத்தகத்தின் அருகாமை
அப்பாவின் மூளை
போலத் தோன்றினாலும்
அது எங்கோ
தொலைந்துபோன
என் மூளையின்
சிண்டு

மாயம்

உற்று நோக்கினால்
மாயம் தெரியும்
மாறுகண்ணுடன் பார்த்தால்
இவ்வுலகம் மாயமில்லாமல்
இருக்கும்
தேமே என்றிருந்தால்
உலகம் தெள்ளத்தெளிவாக
புலப்படும்

தானம்

உங்களிடம் தர
என்னிடம் ஒன்றுமே இல்லை
நீங்கள் என்னிடம்
தந்ததைத் தவிர

தனிமை

ஆண்டாண்டு கால 
தனிமையின் முன் 
கால்கட்டி உட்கார்ந்திருந்தேன் 
அங்கே ஒரு பூ
மலரட்டுமா என 
மொட்டு வாய் திறந்தது 
என் தனிமையில் 
ஒரு பூவின் 
மகரந்தம் 
அடர்ந்த இருட்டை 
கவிழ்த்துவிடும் 
இரைச்சலுடன் இருக்கும் 
வேறொரு அறைக்கு 
என் நண்பனிடம் 
அனுப்பி வைத்தேன் 
மலர்ந்த பூ 
அவனுக்கு தியானம் 
சொல்லிக்கொடுத்தது 
தனிமையில் அவனும் 
கிடந்தது அவதிப்பட்டான்

சிறகு

வாத்தின் சிறகுகள் 
கோரப்பல்லின் புலிகள் 
அடர்ந்த நீச்சல் குளம் 
சிறகுக்கு வீரம் 
புலிக்கு பசி 
தண்ணீருக்கு அன்பு 
வாத்து அன்பில் 
திளைத்துக்கொண்டே இருந்தது

Core

எங்கிருந்தும் மழை
எனக்கான ஒரு துளி
அண்டத்தின் முதல் மவுனம்
தாயின் முதல் கரு

குப்பை

நான் எழுதிய அத்தனை
கவிதைகளும் சிறகடித்து
பறந்தன
ஒரு கவிதை மட்டும்
முடமாகி நின்றது
தினப்பொழுதெங்கும்
நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு
நாயாய் சேவகம் செய்தது
சில நாட்கள் சுகம் தான்
பின் பாரமானது
உனக்கு சிறகமைக்கிறேன் என
சொற்களை பிடுங்கி
மாற்றி அமைத்தேன்
நாய் பூனையானதே தவிர
சிறகுகள் வரவில்லை
இருக்கும் சொற்கள் தான் பிரச்சினை
ஒவ்வொன்றாக கழட்டி
குப்பைதொட்டியில் போட்டேன்
கடைசி சொல்
தூக்கி எரிய மனமில்லை
நீதான் இந்தக்கவிதையின் கனம்
உன்னைக்கொண்டு தான்
நான் விரித்தேன்
நீ மட்டும் ஒத்துழை
நான் தூக்கி எரியப்போவதில்லை
ஆனால் அது நீண்ட கால
சொல் நண்பர்களை
விட்டிருக்க முடியாமல்
கைநழுவி குப்பைக்குள்
விழுந்தது
வெறும் வெளி இப்போது
என் கண்ணில் மழை
யுகத்தின் ஏகாதிபத்திய
கவிதை பிறந்தது
அதுவே அனைத்தையும்
ஆண்டது

சலனம்

அரண்மனையில் ஒரே குழப்பம்
பரிசில் பெறப்போவது
எந்தக் கவிதை?
அனைத்திலும் சிறந்த கவிதை
பேசாமலேயே இருந்தது
மேலோட்டத்தில் இருந்த ஒன்று
சிறு சலனத்தை மட்டும் காட்டியது
ஒன்றுக்கும் உதவாத கவிதை ஒன்று
ஒவ்வொருவரின் காதுமடல் மயிரின்
மேலேறி கொருகொருவென
பேசிக்கொண்டே இருந்தது
மன்னன் மயிர்க்கவிதைக்கு
பரிசில் அளித்தான்
பிறகென்ன
நவீனக்கவிதை அந்த மன்னனின்
வாயினில் தினமும் கசந்தது!!!

பூ

தாமரைக்குளத்தினில்
ஒரு இட்லிக்கூட்டம்
கூட்டப்பட்டது
அனைத்திற்கும் ஒரே
குறை
மனுவில் இப்படி
இருந்தது
பூவாக நம்மை 
இருக்கச்சொல்வது சரி
ஆனால் பூவை
அரைத்து அரைத்து
மலமாக்கச்சொன்னது
சிலாக்கியமாக இல்லை
இனி பூவாக இருக்க வேண்டாம்
என முடிவெடுக்கப்பட்டது

அன்பு

மலரினும் மெல்லிய
திருக்குறளில்
மயங்கிக் கிடந்தேன்
அடி செருப்பால நாயே
என அன்பான குரல் கேட்க
நாயாகி மாறி
அன்பைச் சொறிந்தேன்

மன்னி

பழி வாங்குதலின்
முதல் படி
காந்திய நியதியில்
மன்னிப்பு
முதலில் பழி தீர்த்தேன்
பின் காந்திய வழியில்
என்னையே நான்
மன்னித்தேன்

கிழமை

எனக்கான ஒரு கிழமை
வேண்டி
கிழமைக்கடவுளிடம்
தபஸ் செய்துகொண்டிருந்தேன்
நாலாயிரம் வருடம் பொறுத்து
என் கண் முன்னே
பிரதிட்டை ஆனார்
கிழமைக்கடவுள்
எனக்கு கிழமைகளை
தானமாக கொடுத்துவிடுகிறேன் என்றார்
மற்றவர்களுக்கு என்ன செய்வீர்கள்
என்றேன்
அவர்களுக்கு கிழமைகள்
தேவையில்லை
அனைவரும் கருந்துளைகளுக்குள்
நிலவின் துணையுடன்
உறங்கிவிட்டனர்
நீ ஒருவன் தான் குகைக்குள்
மிச்சம்
எல்லாம் எடுத்துக்கொள்
என்றான்
இனிமேல் நானெடுத்து
என்ன செய்ய
கிழமைகள் குப்பைக்கு
போயின
நான் கிழமையில்லா
கிழவனானேன்…

காட்டினில்

பச்சை நிறக்காட்டினில்
தொலைந்துபோனேன்
கசந்து கசந்து
பச்சையமானேன்
புள்ளிமான் வேட்டையாடும்
ஒருவனின் கால்
பூட்ஸில் சிக்கி சிதிலமானேன்
சிவப்பாய் என் அன்பு மட்டும்
அவன் காலில் ஒட்டிக்கொண்டது

கடவுள்

என் கடவுளை ஒரு நாள்
கீழிறக்கினார்கள்
அவனுக்கு என் மொழி
புரியவில்லை
அவனுக்கு நான் பக்தன்
என்பதும் தெரியவில்லை
சரி இருந்துவிட்டு போகட்டும்
கொஞ்ச நாள் நம்பிவிட்டு
போகிறேன்
ஒரு நாள் நான் கடவுளாவேன்
நீ
பக்தனாய் மாறிப்போ
என்றதில் திடுக்கிட்டு
நானே கடவுளாய் இருக்கிறேன்
ததாஸ்து என்றான்…

சேர்க்கை

சேர்த்துக்கொண்டவன் இப்போது
விழித்துக்கொண்டான்
சேராதீர்கள் சேராதீர்கள்
என மண்டியிட்டு கேட்டுக்கொண்டான்
சேர்ந்த்தவர்கள் சும்மா இருப்பார்களா
இனி வேறு போக்கிடம் இல்லை
நீ வேண்டுமானால்
போய் சேர்ந்துகொள்
உன் பெயர் எங்களுக்கு போதும்
என அறிவித்தார்கள்

ஓலம்

அனைத்திற்கும் மவுனம் தான்
பதிலென முடிவெடுத்தேன்
அன்று இரவு
என் மவுனமூட்டை
திடுக்கிட்டு திறந்துகொண்டது
ஓலமோ ஓலம்
அப்படி ஒரு ஓலம்
அடக்க இருநூறு மவுன
மூட்டைகள் தேவைப்பட்டது
அதைத்தேடி கொண்டு
வருவதற்குள்
என் முதல் மவுனமூட்டை
எதிர்பார்த்தது போல
தற்கொலை செய்துகொண்டது
ஆனால் தற்கொலையின்
எச்சங்கள் எதுவுமில்லாத
மவுன மரணம் அது
இருநூறு மவுன மூட்டைகளும்
இப்போது என்ன செய்வதென
அறியாமல் பேந்தப்பேந்த
விழித்தன…

Thursday, February 03, 2022

இரவு

இரவுகளையே வெறுக்கிறேன் 
அங்கு தான் நான் என்பது 
வெளிப்படையாக இருக்கிறது 
உண்மைகள் வெண்ணிற பற்கள் 
கொண்டு இளிக்கின்றன 
முடிந்தால் இரவுகளை 
வென்று பகல்கள் மட்டும் 
கொண்ட ஒரு உலகத்தை 
ஆள விரும்புகிறேன் 
அங்கு கனவுகள் விற்கப்படும் 
உடல் உபாதைகள் 
பஞ்சு பொதிகளில் புதைத்து வைக்கப்படும் 
ஆனாலும் ஒன்று மட்டும் குறையும்

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...