Thursday, May 07, 2009

தேர்தல்...

எங்கெங்கும் தேர்தல் வாசனை
முடிந்தவரை சுவர்களில்
வெள்ளுடைகள் அடங்கிய
சுவரொட்டிகள்...

தெரு முக்கிலெல்லாம்
கைகூப்பி நிற்கிறார்கள்...

தொலைபேசியில் அழைத்து
குசலம் விசாரித்து
கூப்பாடு போடுகிறார்கள்...

எப்பாடு பட்டினும்
வாக்களித்து விடுங்கள்..
இல்லையேல்,
மறுபடியும் பேச
ஆரம்பித்து விடுவார்கள்...
இன்னொரு ஈழம்
கிடைக்காதாவென
தேட ஆரம்பித்துவிடுவார்கள்...

49-0 எல்லாம் வேண்டாம்
எந்த பட்டனை
அழுத்தினாலும் விடை
ஒன்று தான்...

Friday, February 27, 2009

.... சுஜாதா ஓராண்டுக்கு பிறகும்

எல்லாவற்றையும் காலம் வெகுவேகமாக பின்னுக்கு தள்ளுகிறது. காலமா, இல்லை அதற்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மை வேகப்படுத்துகின்றனவா தெரியவில்லை.

எதேச்சையாக கடந்த நான்கைந்து நாட்களாக சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ஐந்தாம் பாகம் பிட்டு பிட்டாக படித்தேன். அவ்வப்போது உலாவும் பதிவுகளில் பார்த்தால் சுஜாதா பதிவுகள். பின்புதான் மரமண்டைக்கு உறைத்தது. அவர் காலமடைந்து ஒரு வருடமாகிறது. சுப்புடு, தேசிகன், நாராயணன் இவர்களின் பதிவுகள் ஓராண்டை கனத்துடன் நினைவுபடுத்தின.

தேசிகனின் பதிவு என்னமோ செய்தது. கண் முன்னே காலமெல்லாம் ரசித்த மகானுபாவர் மூச்சிழக்கும் நிமிடங்களை உள்வாங்கிகொள்ள அசாத்திய பலம் வேண்டும்.

சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் சென்றிருந்தோம். அரங்கனையும் தாண்டி, நீண்டு உயர்ந்த கோபுரத்தையும் தாண்டி சுஜாதா மனதிற்குள் சலனமானார்.

இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். ஆனால், சமீபத்தில் என் நோயுற்ற 94 வயது தாத்தாவின் மரணம் சொன்ன விஷயம், வலி நீடித்திறா வாழ்க்கை நம் கடைசிகளை ரணம் கம்மியாய் வைத்திருக்கும்.

எந்த கணத்தையும் உணர்வையும் casual paint அடிக்கும் இவர், மரணத்தையும் just like that தள்ளியிருப்பாராக.

Tuesday, February 24, 2009

A.R. ரஹ்மானும் கடவுளும்

வார இறுதியில் மூன்று படம் என சினிமா பித்து பிடித்து அலைந்தேன். நான் கடவுளில் ஆரம்பித்து, சிவா மனசுல சக்தியில் நொந்து, வெண்ணிலா கபடி குழுவில் முடித்தேன். நான் கடவுளை தவிர மற்ற இரண்டும் (எனக்கு) சோபிக்கவில்லை.

நான் கடவுளும் ரொம்ப பிடித்துபோன பகுதியில் இல்லை. 3 வருட உழைப்பு, ஆர்யாவின் மெனக்கெடல், பாலாவின் விரைப்பான இயக்கம், இவற்றையெல்லாம் மீறி என்னை இழுத்தது இளையராஜாவும் சில நிமிடங்களே வந்து போகும் காசியும்.

இளையராஜாவின் இசை இண்டு இடுக்குகளில் புகுந்து கிளர்ந்துள்ளது. பல காட்சிகளை கண்ணை மூடிக்கொண்டே பார்த்தேன். அவரின் தாண்டவத்தை மொத்தமாக உள்வாங்க ஒரே வழி இது, இல்லையெனில் காட்சிப்படுத்தலில் இருக்கும் பாலாவின் தனித்தன்மை இசையுடன் போட்டி போடும். ஓம் சிவோஹம் பாடலில் இவரின் தனி ஆவர்த்தனம், absolute Ilayaraja Brand.

ஆர்யா அல்ல, அஜித்தாக இருந்திருந்தாலும் வியக்க வைத்திருப்பார். இது முற்றிலும் பாலா படம். ருத்ரன் பாலாவின் நாயகன். முற்றிலும் சேர்ந்தமைந்த directorial film இது.

நான் எப்போதும் வியக்கும் பாலா factor இதிலும் தவறாமல் இருந்தது. பல படங்களில் hero மட்டுமே rugged ஆக இருப்பார், மிஞ்சி போனால் வில்லன். ஆனால் பாலாவின் படம் முழுவதுமே (நகைச்சுவை தவிர) rugged ஆக இருக்கும். நான் கடவுளில் இது வழக்கம்போல் கைவிடப்படவில்லை.

பூஜா தேவைதானா என மட்டுமே தோன்றியது. வியத்தகு நடிப்பு என்றெல்லாம் சொல்லிவிட முடியவில்லை. மெத்த உழைத்திருக்கிறார். ஆனால் தேவையில்லாத உழைப்பு பெரும்பாலும் எடுபடாது. அப்படி அப்படியே இருந்துள்ள பலரின் நடுவில், இவர் மட்டும் சினிமாத்தனமாய்/புகுத்தபட்ட குறைபாடுகளுடன் (வெள்ளை லென்ஸ் வகையறா) இருந்ததாக எனக்கு பட்டது.
. . .
A.R. ரஹ்மான். ஆஸ்கார் இவருக்கு கிடைத்த மிகப்பெரும் commercial வெற்றி. வாழ்த்துக்கள். சிலர் சொன்னதுபோல், Slumdog Millionare இவரின் ஆகப்பெரிய படைப்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் எந்த விதத்திலேயும் entertainment richness குறைந்த பாடல்களல்ல. ரஹ்மானின் இரவு உழைப்பில் உருவான மற்றுமொறு நல்ல படைப்பு. கொசுக்கடிக்கு மத்தியில் DTS இல்லாமல் திருடா திருடாவில் “வீரபாண்டி கோட்டையிலே” கேட்ட அனுபவத்திற்கு Jai Ho எந்த விதத்திலும் ஈடு கொடுக்கமுடியவில்லை என்பதே என் கருத்து. ஆஸ்காரையும் தாண்டி போகக்கூடிய திறமை உள்ளவர். இவருக்கு ஆஸ்கார் மற்றுமொறு விருது, அவ்வளவே.
Kodak Theater. இங்கு செல்லும் வாய்ப்பு நான் Los Angeles செல்லும்போது கிடைத்தது. உள்ளே விடவில்லை, முழுவதாய் பார்க்கவும் முடியவில்லை. ஆனாலும் பல மகானுபாவர்கள் கால்பட்ட இடம், நம்மில் ஒருவன் எப்போது மிதிக்கபோகிறானோ என்ற நினைப்பு அப்போதிருந்தது. இப்போதில்லை.
நிலை உயரும்போது சிரம் தாழும் இவரின் குணமும் இசையும் எந்த நாளும் மாறாதிருக்க எல்லா புகழும் சேர்ந்த இறைவன் அருள் புரியட்டும்.

Tuesday, January 20, 2009

ஒபாமா ...
Rosa sat so Martin could walk; Martin walked so Obama could run; Obama is running so our children can fly

Saturday, January 10, 2009

சென்னை புத்தக கண்காட்சி - 2009

கடந்த இரண்டு வருடங்களாக புத்தக கண்காட்சிக்கு போக முடியவில்லை. இப்போதைக்கு சென்னை தான் ஜாகை என்பதால், திறந்த மூன்றாவது நாள் சென்றிருந்தேன். இதற்கு முன் காயிதே மில்லத்தில் நடந்தது. இப்போதெல்லாம் செயிண்ட் ஜியார்ஜ் ஆங்லோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. முன்னதற்கும் இதற்கும் கட்டமைப்பு ஒன்றாகவே பட்டது. உள்ளே நுழையும் பாதையின் இரு பக்கத்திலும் இடைவெளியில்லாமல் பேனர்கள். நல்ல விஷயமாக ஒவ்வொரு பேனரிலும் எந்த ஸ்டால் எண் என்று போட்டிருந்தார்கள். மொத்தமாக ஒரு லே-அவுட் பேனர் வெளியே போட்டிருந்தால், குறித்துக் கொண்டு போக வசதியாக இருந்திருக்கும். பலர் எந்த பதிப்பகம் எங்கே இருக்கிறது என்று கேட்டு கேட்டு அலைந்து கடைசியில் கேண்டீனில் தஞ்சம் புகுந்தார்கள்.

கண்காட்சி நடக்கும் அத்தனை நாட்களின் மாலைகளிலும் யாராவது பேசுவதோ இல்லை நிகழ்ச்சி நடப்பதோ வழக்கம். நிகழ்ச்சி பட்டியல் கண்ணில் படும் வகையில் வைத்திருந்தார்கள். நான் போன நாள் வைரமுத்து வார்த்தை உதிர்ப்பதாக போட்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சி பட்டியல் BAPASI வலைப்பக்கத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருந்திருந்தால் பலருக்கு உபயோகப்படும்.

நான் பார்த்து புத்தகம் வாங்க உத்தேசப்பட்டது நான்கு பதிப்பகங்கள் மட்டும். காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு மற்றும் விகடன். மற்றவை எல்லாம் உள்ளே நுழைந்து ஒரு கழுகு பார்வை விட்டதோடு சரி. மற்றதில் என்னை கவர்ந்தது தீம்தரிகிட, நக்கீரன். தீம்தரிகிட ஒற்றை இலக்கத்திலேயே புத்தகங்கள் வைத்திருந்தார்கள். கூடவே வழக்கம் போல் poll. ஞானி கைவண்ணம். ஞானி உட்கார்ந்திருந்தால், பார்த்து ஏன் சார் இப்படி என்று கேட்க உத்தேசித்திருந்தேன்.

உயிர்மையில் நல்ல கூட்டம். எந்த பக்கம் நகர்ந்தாலும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிக்கொண்டோ இல்லை சிபாரிசு செய்துகொண்டோ இருந்தார்கள். நீக்கமற நிறைந்திருந்தவர்கள் சுஜாதா, சாரு மற்றும் எஸ். ராமகிருஷ்ணன். சாரு கொஞ்சம் நிறையவே இருந்தார். பல பேர், எச்ஸிச்டென்ஷியலும் ஃபேன்சி பனியனும் பார்த்தபடிக்கு இருந்தார்கள். நான் ராஸலீலா வாங்க நினைத்தேன். ஆனால், என்னமோ மறு எண்ணம். அதை வாங்குவதற்கு, என் மண்டைக்கு புரியும் நான்கு குட்டி புத்தகங்கள் வாங்க முடிவெடுத்தேன். ஜீரோ டிகிரி படித்த பாதிப்பு. பில் போடுபவரின் பக்கத்து சேரில் எஸ். ராமகிருஷ்ணன் நான்கைந்து பேருடன் என்னவோ பேசிக்கொண்டிருந்தார். அப்படியே புத்தகம் நீட்டுபவர்களிடம் கையெழுத்தும் போட்டுக்கொண்டிருந்தார். நானும் அவரின் சிறுகதை தொகுப்பை நீட்டி ஒப்பம் வாங்கி கொண்டேன். கொஞ்சம் தள்ளி மனுஷ்யபுத்திரன் மேற்பார்வையிட்டபடி இருந்தார். அவர் பக்கத்தில் யாருமில்லை. வாங்கிய சுஜாதாவின் நிலா நிழல் புத்தகத்தில் கையெழுத்து கேட்டு, என்னை அறிமுகபடுத்திக்கொண்டேன்.

கிழக்கு இந்த முறை அதன் குட்டி பதிப்பகங்களுடன் தனிதனியாக ஸ்டால்கள் போட்டிருந்தார்கள். நலம், வரம், ப்ராடிஜி, ஆடியோ புத்தகங்கள் இதெல்லாம் தனிதனி ஸ்டால்கள். நல்ல உத்தி. கூட்டத்தை குறைக்கும். கிழக்கில் நுழைந்தால், எதிர்பார்த்தபடி, தள்ளுமுள்ளு கூட்டம். இருந்தாலும் நுழைந்தேன். வழக்கமாய் இருக்கும் சுவாரசியம் எனக்கு இந்த முறை கொஞ்சம் குறைவாக இருந்தது. நிறைய அறிமுகமான புத்தகங்கள் (படிக்காவிட்டாலும்) இருந்த காரணமாக இருக்கலாம். ஆனால், அத்தனை புத்தகங்களும் பளிச் பளிச். அம்பானி புத்தகத்தை வாங்க அல்லோலகல்லோலபட வேண்டிய அவசியமில்லை. சோம வள்ளியப்பனின் அள்ள அள்ள பணம் மூன்று பாகங்களும் ராஜமரியாதையுடன் நீக்கமற நிறைந்திருந்தது. ஸ்டாக் மார்க்கெட் பக்கம் ஒதுங்கினால் அலுவலகத்தில் பஞ்சப்படி கேட்கும் இந்த நிலைமையிலும், அவரின் புத்தகங்கள் வாங்க பல பேர் இருந்தார்கள். இன்றைக்கு இல்லையேல் நாளை உயர்ந்தே தீரும் என்ற எப்போதும் போல் நம்பிக்கை. கிழக்கின் miniMAX ஒரு நல்ல அறிமுகம். புத்தங்களை சல்லிசாக 25 ருபாய்க்கு வாங்க பிரியப்படும் சரியான பொருளாதார நேரம். ஆயில்ரேகை தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. கேட்டால், இதோ கொண்டுவருகிறேன் என்று இரண்டுக்கும் மேற்பட்டோர் கால் தெறிக்க ஓடினார்கள். மற்ற பதிப்பகத்தில் குறைந்த ஒரு விஷயம் பாங்கான customer support. அது கிழக்கில் அள்ள அள்ள கிடைக்கிறது. எத்தனை தேடியும் ஆயில் ரேகை கிடைக்கவில்லை. சாரி சார், உங்க அட்ரஸ் குடுங்க, நாங்களே வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் என்றார்கள். வேண்டாமென்று, நாளைக்கு வருவதாய் சொல்லிவிட்டு, முஷாரஃப்பின் புத்தகம் வாங்கி கொண்டு என் இடத்தை காலி செய்து கொடுத்தேன்.

விகடனில் வழக்கம் போல் பிளாஸ்டிக் கவர் மினுமினுங்க அத்தனை புத்தகங்களையும் அடுக்கிவைத்திருந்தார்கள். விகடன் கொஞ்சம் வாரபத்திரிக்கை பேப்பரில் புத்தகங்கள் அச்சிடுவதை மாற்றிக்கொண்டால் உசிதமாய் இருக்கும். நாள்பட நாள்பட தாள்கள் வெளியே வர, கடைசியில் வீட்டில் கோலப்பொடி கொட்டிவைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அங்கே வைகோ எழுதிய ஒபாமா புத்தகத்தை வாங்கி நகர்ந்தேன்.

பெரும்பாலான பதிப்பகங்களில் காணக்கிடைத்த ஒரு விஷயம், அங்கே salesல் இருப்பவர்கள் பலருக்கு புத்தகங்கள் பற்றி தெரிந்திருக்கவில்லை. தன் பதிப்பகத்தில் இருக்கும் புத்தகங்கள் பற்றி அடுத்த பதிப்பகத்தின் இருக்கும் ஒரு விஷயம் தெரிந்த படிப்பாளியிடம் கேட்க சொல்லி சொன்ன ஒருவரை பார்த்தபோது திக்கென்று இருந்தது.

வெளியே வந்தபோது வெள்ளையும் சொள்ளையுமாக கவிப்பேரரசு விரைப்பாக தமிழ் பேசிக்கொண்டிருந்தார். ஆறு மணி விழாவிற்கு ஆறு மணிக்கே வந்தற்கான காரணத்தை சொன்னார். அடுத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சி துவக்க விழாவில் கலைஞரின் பேச்சை கேட்க போக வேண்டுமென்றார். அதற்கடுத்து அவரின் வழக்கமான உரையாடல். அந்தளவுக்கு சுவாரசியமில்லாததால் வண்டியெடுக்க நகர்ந்தேன்.

எதிர்ப்பார்த்த அளவுக்கு கூட்டமில்லை. ஆனாலும் வருடாவருடம் இந்த கூட்டம் வருவதே ஆரோக்கியம். நிறைய குழந்தைகளும் அங்குமிங்கும் அப்பா அம்மாவிற்கு தொல்லை கொடுத்தபடிக்கே ஓடிக்கொண்டிருந்தனர். அது இன்னுமொறு ஆரோக்கியம். படிக்கிறார்களோ இல்லையோ, உள்ளே சில நேரங்கள் பிடிவாதம் பிடிக்காமல் இருப்பதே போதும். புதிய புத்தக வாசனை என்னவெல்லாமோ பண்ணும். தானாகவே ஈர்க்கும். ஈர்க்கப்படட்டும். அறிவாகட்டும்.

கிளம்பும் போது பார்த்தால், கண்ணதாசன் பதிப்பகத்தில் கடும் கூட்டம். கூட்டத்தை பார்த்தால் புத்தகம் வாங்கும் கூட்டமாக தெரியவில்லை. கொஞ்சம் எட்டி பார்த்ததில், ராமதாஸ் நின்று கொண்டிருந்தார். ஜி.கே. மணியுடன். எதற்கு வந்தார்களோ தெரியவில்லை. வந்த வேகத்தில் கிளம்பியும் விட்டார்கள்.



சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...