Tuesday, December 20, 2022

எது

நிலா இல்லாவிட்டாலும்
கவிதைகள் இருந்திருக்கும்
ரோஜா இல்லாவிட்டாலும்
இருந்திருக்கும்
நாம் இல்லாவிட்டாலும்
இருந்திருக்கும்
எது இருப்பதனால்
அது இருக்கிறது?

நாளைக்கான இரை

எழுதித்தான் சொல்ல வேண்டும்
என்பதில்லை
புறாக்களின் கூடுகளில்
எச்சங்கள் தாண்டி
அவை இரவில் சிந்தும்
சிறுதுளி கண்ணீரில்
நாளைக்கான இரை
கிடைக்கும் என்ற
நம்பிக்கை
கேட்டுக்கொள்கிறேன்
நீங்கள்
கேட்காததால்
நகுலனைப்போல
நானிருந்திருக்கிறேன்
நானிப்படி இருந்திருப்பேன்
என தெரிந்திருந்தால்
அவர் இன்னும்
சில நாள்
இருந்திருப்பார்
பூங்காவின் அழகிய
பூக்களில் தான்
எத்தனை வன்முறை!
என்னையும் அவளையும்
அவரையும் அதையும்
ஒரு சேர
முகர்ந்துகொண்டே
இருக்கிறது
சரி என்பதில்
தான்
தவறும் இருந்தது
எல்லா நாளும்
நல்ல நாள்தான்
ஆனால்
நேற்று ஏன்
அப்படி ஆனது?
என்ன செய்தேன்
என்பதில் எந்த
குழப்பமும் இல்லை
ஏன் என்பதில் தான்
அடங்கிப்போய்
கிடக்கிறது
உனைப்பிரிந்ததில் எனக்குத்தான்
உயிர் அழுத்தம்
எனைப்பிரிந்ததில் யாருக்குமே
அழுத்தமில்லை
அந்த இயற்கைக்கும்!!
ஏற்றுக்கொள்ளும் தூரத்தில்
தான் இருந்தாய்
ஆனாலும் ஏற்றுக்கொண்டால்
நான் மனிதனல்லவா?
அதுவல்லவே நான்
நாளைக்குள் நானும்
நேற்றைக்குள் நீயும்
இருந்ததில் தான்
பிளவு இருக்கிறது
எதிர்காற்றில் ஒரு நாள்
நான் இழந்தேன்
தேடியதில்
நீ தான்
கிடைத்தாய்
நான்
நீ
மறுமுறையும்
நான்
என்ன செய்தால்
நீ?

இயற்கை

இயற்கை பிறழ்ந்தபோது தான்
நான் பிறந்தேன்
நான் தெளிவாகத்தான் இருக்கிறேன்
பிறழ்ந்த இயற்கை தான்
பிறழ்ந்துகொண்டே இருக்கிறது
ஆனாலும் என் தாய் இயற்கையை
நன்றாகவே புரிந்துகொள்கிறேன்

நீ கவிதை

நான் கவிதைகள்
எழுதி நீயானேன்
நீ கவிதைகள்
எழுதும்போது 
நான் நானாகவே
இல்லை

நானாக நான்

அனைவராகவும் நான்
இருக்கும்போது தான்
நானாக நான்
இல்லாததை மறந்தேன்

இயல்பின் இயற்கை

வரண்ட தாள்கள்
இயல்பின் இயற்கை
இருப்பதே இல்லை
தாள் சில நேரம்
சருகாகிக் கிடக்கிறது
காற்று நகர்ந்தாலே
உடைந்து போகிறது
இவையெல்லாம்
என் கவிதைகள்
என்றால்
நம்பவா போகிறீர்கள்?

கவிப்பொருள்

பேச விட்டிருந்தால்
பேசித்தான் இருப்பான்
பேசுபொருளாக அவர்கள்
இருப்பதால் இவனுக்கு
கவிப்பொருள் தான்
சரிப்பட்டு வருகிறது
அது பேசினால்
பேசுபொருளெல்லாம்
என்னவாகும் என்பதில்
கவிதைக்கு ஒரு
பொருட்டும் இல்லை

நாற்பத்தி ஐந்து

என் மீது நாற்பத்தி ஐந்து
கிலோ எடை
அதன் மீது
மொத்த பிரபஞ்சமே
எடையாக இருந்தது
பிரபஞ்சம் இலேசாகத்தான் இருக்கிறது
நாற்பத்தி ஐந்து தான்
பஞ்சாகவே இருந்தாலும்
கனக்கிறது

ஒளி கக்கும் மிருகம்

எழுத்தாள நண்பர்களிடம்
கவிதைகள் கொடுப்பதில்லை
ஆப்பிரிக்காவில்
தங்கம் புதைந்திருக்கும்
போது பக்கத்தில் இருக்கும்
கருங்கல் தங்கத்தை
ஒளி கக்கும் மிருகமாகத்தான்
பார்த்திருக்கும்

எந்தக்கவிதை

தமிழ்க்கவிதை எழுதினால்
ஆங்கிலக்கவிதை தோள் மீதேறும்
ஸ்பானியக்கவிதை எழுதினால்
ஜப்பானியக்கவிதை தோள் மீதேறும்
எந்தக்கவிதை எழுதினால்
நானே தோள் மீதேறுவேன்!!

வக்காலத்து

எந்தவொரு கவிதையிலும்
ஒரே கேள்வி
இதெல்லாம் கவிதையா
கவிதை ஒவ்வொரு
முறையும்
வக்காலத்து வாங்கும்
நான் அதுவல்ல எனில்
நீயும் அதுவல்ல எனும்

தீர்ப்பு

அந்த பஞ்சாயத்தில்
சரியாகத்தான் பேசினேன்
அனைவரும் ஆமோதித்தனர்
ஆனாலும்
தீர்ப்பு எனக்கெதிராக!
அடுத்த முறை
அமைதியாக இருந்து
வாதாடினேன்
ஒரு வார்த்தையும் இல்லாமல்
அப்போதும்
தீர்ப்பு எனக்கெதிராக!
இன்னொருமுறை
நீதிபதியே எனக்காக
ஆனாலும்
தீர்ப்பு எனக்கெதிராக!
என் தீர்ப்பை
ஒவ்வொரு முறையும்
நானே எழுதி இருக்கிறேன்

புனைப்பெயர்

என் கவிதைகளுக்கு
நான் தான் பெயரிட்டிருக்கிறேன்
எனக்கு மட்டும்
நான் பெயரிடவில்லை
இதனால் நானே
ஒரு கவிதையென்றும்
பொருள்படாது
எனக்கு நானே
பெயரிட்டிருந்தால்
புனைப்பெயர் தேடி
ஓடியிருக்க மாட்டேன்

ஒர் இரவில் என் கவிதை

ஒர் இரவில்
என் கவிதை அனைத்தும்
கடலில் மிதந்தது
ஒரு கவிதை மட்டும்
சுவாசத்தை ஒவ்வொரு
மிடறாக உமிழ்ந்தது
அது ஒன்றில் தான்
நிலா அழகாய்
வர்ணிக்கப்பட்டிருந்தது
மற்ற கவிதைகளில்
எல்லாம்
மனித மனங்களின்
எச்சம் தான்
கடும் கனம்

நானே

எங்கு சென்றாலும்
நானே இருப்பதில்
எனக்கு மகிழ்ச்சி
முடிவிலும் நான் மட்டுமே
இருப்பது தான்
வருத்தம்

கல்லும் கலையும்

ஒரே ஒரு குறைதான்
எந்த ஓவியத்திற்கும்
எந்த சிலைக்கும்
வேர்ப்பதில்லை
அங்கு இருப்பதெல்லாம்
கல்லும் கலையும்
வேலையை பார்த்துக்கொண்டு
இருந்துகொள்ளலாம்

சிறு விதை

எப்படியாவது மீட்டுவிடுங்கள்
உங்களுக்கு ஒரு பெரும்கவி கிடைப்பான்
அல்லது
ஒரு மாபெரும் ஞானி
அல்லது
அறம் தோய்ந்த அரசியல்வாதி
அல்லது
அன்பே உருவான தாய்
சரி உங்களுக்கும் வேண்டாம்
எனக்கும் வேண்டாம்
ஒரு சிறு விதையாவது

எண்பது

ஒவ்வொரு சொல்லிலும்
ஒரு வருடம்
வசிக்கிறேன்
அப்படியானால்
பல மில்லியன் வருடங்கள்
ஆனால் எண்பதில்
இறந்தேன்
எண்பதில் எண்பதும்
என் என்பதுதான்
அடர்த்தி போல

சிலை

இங்கு தான் இருக்கிறேன்
இன்று இங்கு தான் இருக்கிறேன்
நேற்றும் இருந்திருக்கலாம்
நாளை இல்லாமலிருக்கலாம்
எப்போதும் ஓரிடத்தில்
ஒர் மனதில்
இருப்பது எப்படி
இந்த சிலைகளுக்கு
வாய்க்கிறது!!!

அவனின் ஒளி

நான் தேடிக்கொண்டிருந்த ஒளி
இன்று இப்போது என் முன்னே
சிலை போல நின்றது
அதனின் கைப்பிடியில் தான்
என் வாழ்வின் முதல் ஒளி
அதனுள் என் முப்பாட்டனும்
அவனின் ஒளியும்
சுவாசித்தது
என் ஒளி அவர்களிடம்
கடன் வாங்கி வந்தது
அவர்கள் கேட்கும்போது
கொடுத்தாக வேண்டும்
கேட்கக்கூடாதென
என்றும் எரியும்
சூரியன் கட்டளையிட்டான்

நான் கவிதை

நீ நீயாகவே இரு
நான் கவிஞனாகவே இருக்கிறேன்
இல்லாவிட்டால்
நீ நானாகி விடுகிறேன்
நான் யாராகிவிடுகிறேன்
என்பதில் குழம்பி
இன்னுமொரு கவிதை
எழுதுகிறேன்

வெளியே

கவிதைகளுக்குள்ளேயே என்னை இருக்க விடுங்கள்
வெளியே வந்தால் சகமனிதனாகவே இருக்கிறேன்

ஓரிலை

காட்டு வழியில் அவள்
தனித்தென்னை காட்டு மரத்தின்
நடுவே சேர்த்தனைக்கிறாள்
உச்சாணி மரக்கிளையில்
தொட்டனைத்து ஏறியது எங்கள் கிளர்ச்சி
கீழ் இறங்கியதும் அவள் ஓரிலையானாள்
என்னை வேராகச்சொன்னாள்
அவளைப்பார்த்துக்கொண்டே இருக்கும்
மண் படர்ந்த வேரானேன்
வருடங்கள் அலைந்தோடியது
கிழடு தட்டிய வேரானேன்
இளங்காற்று அசைத்ததில்
அவள் கால் இடறி
என் மேல் தான் விழுகிறாள்
வயது தட்டவில்லை
அதே கிளர்ச்சி
இதயம் தான் இல்லை

இசை

உடையும் பொழுதெல்லாம்
என் மேல் அவனின் இசையை கவிழ்த்துக்கொள்கிறேன்
அவனுக்கும் வேறு வேலையில்லை
எச்சில் இலையை கிருஸ்துவாக்குகிறான்
இன்னொரு இசை வந்தென்னை
பிரித்துச்செல்கிறது

சிதை

சிதைந்ததில் இருந்து தான் பிறந்தேன்
உருவாகிக்கொண்டு இருக்கும்பொழுதில் தான் இறந்துவிட்டேன்
என்னைத்தொகுத்தால் நான் இறக்கிறேன்
உடைத்தால் பிறக்கிறேன்
சேர்க்கும் விசையில்
யார் இருப்பார்?
யார் இருந்தாலும்
அதில் நான் இருப்பதாய் இல்லை

Wednesday, September 28, 2022

சாமி

ஒவ்வொரு கடவுளிடமும் 
ஒவ்வொரு வார்த்தையை 
காணிக்கை ஆக்குவது என் வழக்கம் 
நிறைய கோவில்கள் 
நிறைய சாமிகள் 
எல்லா வார்த்தைகளும் 
இப்போது சாமிகளின் வயிற்றில் 
கடைசி ஒரு வார்த்தை தான் இருந்தது 
எந்த சாமியும் மிச்சமில்லை 
எனக்கே காணிக்கை ஆக்கினேன் 
அனைத்து சாமிகளும் 
அத்தனை வார்த்தைகளையும் 
என் காலடியில் கொட்டினர் 
நான் சாமியானேன்

கூன்

கனமாய் இருந்தது 
நான் பேசிய ஒரு வார்த்தை 
இருவத்தியெட்டாம் வயதில் 
பேசினேன் 
இப்போது எண்பத்து ஒன்பது வயது 
ஆகிறது 
அந்த வார்த்தை பேசி இருக்க வேண்டாம் 
அது முதுகில் உட்கார்ந்து உட்கார்ந்து 
கூன் விழுந்ததுதான் மிச்சம் 

வார்த்தை இல்லை

நான் பிறந்தேன் 
அதிகம் பேசுவேன் 
என்றாள் பெற்றவள் 
பிறந்தபோது 
எவ்வளவு பேசினேன் என்றேன் 
அப்போது அழுதாய் 
வார்த்தை இல்லையென்ற 
அழுகை இல்லை 
இனி எவ்வளவு பேசி 
வாழ்வை வாழ வேண்டும் 
என்று அழுததாக 
அந்த அமைதித்தாய் 
சொன்னாள் 

நாக்கு

எப்படியும் பேசுவாள் 
என்று நானிருந்தேன் 
நான் பேசுவேன் 
என்று அவளிருந்தாள்
நடுவில் இருந்த அமைதி 
உயர் ரத்த அழுத்தத்தில் 
எங்களின் நாக்குகள்
வழியே இதயத்தில் 
இறங்கிக்கொண்டிருந்தது

மூக்கு நுனி

அடங்கிப்போன ஒவ்வொருவருக்கும் 
பேசும் ஆசை வந்தது 
மண் பிளந்தது 
நனைந்த சாம்பல் புகை கிளப்பியது 
தொண்டை செருமிக்கொண்டன 
அடங்கியவை இப்படி பேசின
இப்போதாவது குறையுங்கள்
நீங்கள் பேசும் பேச்செல்லாம் 
எங்களின் அமைதியை 
நோக்கி வருகின்றன 
நாங்கள் அமைதி இழந்தால் 
உங்களுக்கு வாரிசுகள் அமையாது 
அப்படியே அமைந்தாலும் அது 
பேரிரைச்சலோடு பிறக்கும் 
குறைவாக பேசுங்கள்
உங்கள் காலடி மண்ணில் இருக்கும் 
எங்களின் மூக்கு நுனி 
உங்களை எப்போதும் பாராட்டும்

அமைதி

குழந்தைக்கென ஒரு மொழி 
புலவனுக்கென ஒரு மொழி 
காதலுக்கென ஒரு மொழி 
அழுகைக்கென ஒரு மொழி 
பேசுபவனுக்கு ஒரே மொழி 
அமைதி

இன்னுமொரு புதிய நிலா

 ஒரு நாள் 
பூமியின் அத்தனை
மனிதரிடமிருந்தும் 
குரல்வளை பிடுங்கப்பட்டது 
ரோஜாக்கள் புதிதாய் பிறந்தன 
இன்னுமொரு புதிய நிலா தோன்றியது 
அலைகள் ஆலோலம் பாடின 
கிளிக்கூட்டம் வெட்டவெளியில் காதல் புரிந்தன
தாள்கள் எல்லாம் புதிய உலகை நோக்கின 
கவி என்று சொன்ன ஒவ்வொருவரும் 
கவிதைகள் எழுதுவதை மறந்தனர் 
இலக்கியம் செழித்து வளர்ந்தது

அவள்

பேசிக்கொண்டிருந்தால் போதும் 
இப்படியே இருந்துவிடுவேன் என்றாள் 
பேசாமல் இருந்தால்
கொன்றுவிடுவேன் என்றாள் 
உயிர்த்திருப்பதற்காக 
பேசிக்கொண்டிருக்கிறேன் 
அவள் இறந்த பின்னரும் 

ஈரம்

 பேசுதலின் நடுவே 
அவ்வப்போது அமைதி 
வந்து செல்லும் 
அமைதிக்கு பின் 
சொல்லும் செல்லும் 
கேட்டுக்கொண்டிருந்த காதுகள் 
அமைதியை நோக்கிச் செல்லும்
இதயங்கள் மட்டும் அங்கேயே 
அணைத்துக்கொண்டு 
மெழுகுவர்த்தியுடன் காத்துக்கொண்டிருக்கும் 
காத்துக்கொண்டிருப்பது 
அமைதிக்கல்ல 
சொல்லுக்கும் அல்ல 
வறண்ட காற்றுக்குள் 
கொஞ்சம் ஈரம் புக

Monday, August 08, 2022

விதி

கைகோர்த்துக்கொண்டே நடந்த 
கடற்கரையில் 
நீயும் நானும் 
பிறகென்ன 
மண் அதன் வேலையையும் 
அலை அதன் வேலையையும் 
காற்று அதன் வேலையையும்
பார்த்தது 
ஆனால் கவிக்கு தான் 
வேறெந்த வேலையும் இல்லை 
கவிதைகள் எழுதித் தள்ளிவிட்டான் 
ஆனாலும் அலைக்கு 
கோபமில்லை
அதற்கு செயல்படுவது தான் விதி 

எங்கோ
எப்படியோ 
இருந்திருக்க வேண்டியவன் நான் 
இப்போது 
எப்படியோ 
இருக்கிறேன்
இருந்திருக்கலாம் 
ரு எப்போதாவது ற வாக மாறும் 
காத்திருப்போம்

Monday, June 20, 2022

கவி வாழ்க்கை

நிறுத்தமில்லா பேருந்துகளில்
இருக்கும் பெட்ரோலென
கவி வாழ்க்கை
எரிந்துகொண்டேதானிருக்கும்
சேருமிடத்தில் ஓட்டுனருக்குத்தான்
புன்முறுவலும் கைகுலுக்கல்களும்
எரிந்த புகை
செவ்வானத்தில் இன்னொரு
கவி தேடி
செல்லும்

ஏப்பம்

கவிப்பெண்ணொருத்தி
எனக்காக கவிதை
சமைத்தாள்
சாப்பிட்டுவிட்டு
ஏப்பம் விட்டதில்
பல அமைதிகள்
விழுந்துகிடந்தன

மதிப்பு

கவிதை விற்பதில் சலனமுண்டு
யார் வாங்குவார்
வாங்கினால் மதிப்புண்டா
வான் கோவின்
உருளைக்கு உண்டான
மதிப்பு என் கவிதைக்கு இல்லை
வாங்கவேயில்லை
விற்றால்தானே
பின் தான் தெரிந்தது
நான் கவியில்லையென்று

கவி-பசி

எந்தக்கவிதையும்
ஆரம்பத்தில்
கிளர்ச்சி
மத்தியில்
குழப்பம்
முடிவில்
சன்னதம்
கவிக்கு
பசி

காற்றில்லாப் பை

சுவாசம் எனக்கென்றாள்
நான் எனக்கென்றேன்
தத்தெடுக்கவா என்றாள்
முடியாது, 
நொடிக்கொருதரம்
அது உள் சென்று
சூல் கொள்ளும்
பின் வருமொன்று
பிள்ளைகளோடு வரும்
அதில் எதை தத்தெடுப்பாய்?
அது தாயுடனே வரும்
அதை தத்தெடுக்கிறேன்
அந்த ஆதிசுவாசம்
எனக்கு வேண்டுமென்ற என் காதலி
இரண்டாண்டு காலம்
சுவாசத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தாள்
காற்றில்லாப் பையில்
காதல் அடைத்தாள்
பின் மறைந்தாள்
சுவாசமில்லாக் காதல்
இன்னுமொரு காதலிக்காக
காத்திருக்கவில்லை
உதடுகளுக்காக
காத்திருந்தது

கவிதை - II

அசைந்தாடும் நதி
எதிரே கவி
நடுவில் கவிதை
யாருக்கு சொந்தம்?

ரூமி

ரூமியிடம் கடன் கேட்டேன்
காதல் தரமாட்டேனென்றான்
மது கேட்டேன்
தீர்ந்து நூற்றாண்டுகள் ஆனதென்றான்
என்னதான் உண்டு
ஒன்றுமில்லை
என் கவிதைகள் உண்டு
அதைக்கொண்டு என் நாவைத்
தடவினேன்
கவிதைகள் புரண்டன
கவிப்புத்தகங்கள் திரண்டுழுந்தன
மொத்தமாய் விற்றுப்போயிற்று
ரூமி இமயமதிற சிரித்தான்
என் கவி உன் நாவில்
ஏறினால்
ஏன் இவ்வளவு பழுப்பேறியுள்ளது
ஒன்றிலும் காதலும் இல்லை
மதுவும் இல்லை
விசுக் விசுக்கென
நின்று நின்று ஓடும்
ஓணான் போல உள்ளதென்றான்
உன் கவிதைகளின் 
இண்டுகளில் சந்தம் சேர்த்தேனென்றேன்
அமைதி நிரப்ப முடியாத உன்னால்
சந்தம் தான் நிரப்ப முடியும்
இரைச்சலோடே இருந்துகொள்
இறந்தபின்னும் சந்தம்
உன்னை அழுத்தாமலிருந்தால்
சரி

புங்க மரம்

என் வீட்டின் புங்க மரம்
தூங்கிக்கொண்டிருக்கும்
எப்போதும்
பிள்ளைகள் வந்தால் விழிக்கும்
தொட்டுத்தொட்டு விளையாடும்
பிள்ளைகள் இன்னும் பிரசித்தம்
இரட்டை ஜடையின்
பெண் பிள்ளைகளிடம்
காதல் பெருத்தோடும்
ஜடைகளின் நுனியில் 
எப்படியாவது தன் கிளையை
மணம் முடித்துவிட திளைக்கும்
இன்று வரையில் மணம் முடியவில்லை
ஜடைகளுக்கு அவ்வளவு தடைகள்
ஓரிரவில் பெண்ணொருத்தி
முசுமுசுவென அழுதாள்
புங்கம் குறட்டை விட ஆரம்பித்தது
இரட்டை ஜடையின் தாய் என்றாள்
தூக்கம் கலைந்தது
நீ பிள்ளை இல்லை
ஆனால் உன் பிள்ளை
எனக்கு ஆதிக்காதலி
என்னவாயிற்று?
ஜடைகள் புதைக்கப்பட்டன
செய்தி விம்மல்களானது
புங்கம் மறுமுறை
தூங்கியது
மெல்லிய ரசக்கண்ணாடின்
உடைந்த துகள் போல
இன்னும் உடைபட ஏதுமில்லை
என்பது போல
இன்னொரு காதலுக்கு
காத்திராமல்
மண்ணுக்கடியில் ஒவ்வொரு
வேரையும் தற்கொலை
செய்துகொள்ளுங்கள் என
மன்றாடியது
வேர்களுக்கேது காதல்
விடாமல் வளர்ந்தது

ஒட்டுண்ணி

மீட்பதற்கு எதுவுமே இல்லை
நானும் இல்லை
அவளும் இல்லை
தனித்தனியே கலைந்து
விட்டிருந்த காதல் மட்டும்
ஒட்டுண்ணியாய்
இன்னொரு காதல் அணியிடம்
பிச்சை எடுத்துக்கொண்டிருந்தது

கவிதை

அலைந்து கொண்டிருக்கும்
உணர்வுக்குழம்பில்
சிறிது சிறிதாக
மாற்றம் ஆனது
புல்லாங்குழல் இசைக்க
கவிதை நின்று போனது

மகள்

எழுந்தெழும் காதலில்
பிறந்த மகள்
மடியினில் பூவாக
மலர்ந்து கிடந்தாள்
நாளை திறப்பு
அடுத்த நாள் உள்ளிருப்பு
பிறகு மடியினில் குளம்
நீரில் பிறப்பதுதானே
என் மகளின் குணம்

காது

எம்பிக்குதித்து அடித்ததில் 
இமயமலை இரண்டு துண்டானது 
அதில் இரு முனிகள் 
ஒருவருக்கு காது அறுந்திருந்தது
இன்னொருவருக்கு கை 
ஆனாலும் அத்தனை அன்பு 
அடித்துடைத்த என் கைக்கு 
கட்டு போட்டார்கள் 
பின் தவத்தை தொடர்ந்தார்கள் 
நான் கடவுளாக
இருக்க வேண்டுமா 
என யோசித்தேன்

Sunday, June 05, 2022

காயம்

என்னருகில் என் கவிதை
முதல் முறை
வெறுப்புடன் கூடிய பயம்
காதல் கவிதை தான் அது
என்னருகில் இருப்பதினால்
நான் ஒட்டியிருப்பதனால்
தூக்கி எறிந்தேன்
கவிதைக்கு பெரும் காயம்
காயத்தினில் சிறிது
காதல் காத்துக்கொண்டிருந்தது
நேரமில்லை
அடித்து கொன்றே ஆகவேண்டும்
ஒரே அடி
காதல் அலறி அடித்துக்கொண்டு
இன்னொரு கவி நோக்கி ஓடியது

காகிதப்புத்தகம்

புத்தகத்தின் அருகாமை
அப்பாவின் மூளை
போலத் தோன்றினாலும்
அது எங்கோ
தொலைந்துபோன
என் மூளையின்
சிண்டு

மாயம்

உற்று நோக்கினால்
மாயம் தெரியும்
மாறுகண்ணுடன் பார்த்தால்
இவ்வுலகம் மாயமில்லாமல்
இருக்கும்
தேமே என்றிருந்தால்
உலகம் தெள்ளத்தெளிவாக
புலப்படும்

தானம்

உங்களிடம் தர
என்னிடம் ஒன்றுமே இல்லை
நீங்கள் என்னிடம்
தந்ததைத் தவிர

தனிமை

ஆண்டாண்டு கால 
தனிமையின் முன் 
கால்கட்டி உட்கார்ந்திருந்தேன் 
அங்கே ஒரு பூ
மலரட்டுமா என 
மொட்டு வாய் திறந்தது 
என் தனிமையில் 
ஒரு பூவின் 
மகரந்தம் 
அடர்ந்த இருட்டை 
கவிழ்த்துவிடும் 
இரைச்சலுடன் இருக்கும் 
வேறொரு அறைக்கு 
என் நண்பனிடம் 
அனுப்பி வைத்தேன் 
மலர்ந்த பூ 
அவனுக்கு தியானம் 
சொல்லிக்கொடுத்தது 
தனிமையில் அவனும் 
கிடந்தது அவதிப்பட்டான்

சிறகு

வாத்தின் சிறகுகள் 
கோரப்பல்லின் புலிகள் 
அடர்ந்த நீச்சல் குளம் 
சிறகுக்கு வீரம் 
புலிக்கு பசி 
தண்ணீருக்கு அன்பு 
வாத்து அன்பில் 
திளைத்துக்கொண்டே இருந்தது

Core

எங்கிருந்தும் மழை
எனக்கான ஒரு துளி
அண்டத்தின் முதல் மவுனம்
தாயின் முதல் கரு

குப்பை

நான் எழுதிய அத்தனை
கவிதைகளும் சிறகடித்து
பறந்தன
ஒரு கவிதை மட்டும்
முடமாகி நின்றது
தினப்பொழுதெங்கும்
நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு
நாயாய் சேவகம் செய்தது
சில நாட்கள் சுகம் தான்
பின் பாரமானது
உனக்கு சிறகமைக்கிறேன் என
சொற்களை பிடுங்கி
மாற்றி அமைத்தேன்
நாய் பூனையானதே தவிர
சிறகுகள் வரவில்லை
இருக்கும் சொற்கள் தான் பிரச்சினை
ஒவ்வொன்றாக கழட்டி
குப்பைதொட்டியில் போட்டேன்
கடைசி சொல்
தூக்கி எரிய மனமில்லை
நீதான் இந்தக்கவிதையின் கனம்
உன்னைக்கொண்டு தான்
நான் விரித்தேன்
நீ மட்டும் ஒத்துழை
நான் தூக்கி எரியப்போவதில்லை
ஆனால் அது நீண்ட கால
சொல் நண்பர்களை
விட்டிருக்க முடியாமல்
கைநழுவி குப்பைக்குள்
விழுந்தது
வெறும் வெளி இப்போது
என் கண்ணில் மழை
யுகத்தின் ஏகாதிபத்திய
கவிதை பிறந்தது
அதுவே அனைத்தையும்
ஆண்டது

சலனம்

அரண்மனையில் ஒரே குழப்பம்
பரிசில் பெறப்போவது
எந்தக் கவிதை?
அனைத்திலும் சிறந்த கவிதை
பேசாமலேயே இருந்தது
மேலோட்டத்தில் இருந்த ஒன்று
சிறு சலனத்தை மட்டும் காட்டியது
ஒன்றுக்கும் உதவாத கவிதை ஒன்று
ஒவ்வொருவரின் காதுமடல் மயிரின்
மேலேறி கொருகொருவென
பேசிக்கொண்டே இருந்தது
மன்னன் மயிர்க்கவிதைக்கு
பரிசில் அளித்தான்
பிறகென்ன
நவீனக்கவிதை அந்த மன்னனின்
வாயினில் தினமும் கசந்தது!!!

பூ

தாமரைக்குளத்தினில்
ஒரு இட்லிக்கூட்டம்
கூட்டப்பட்டது
அனைத்திற்கும் ஒரே
குறை
மனுவில் இப்படி
இருந்தது
பூவாக நம்மை 
இருக்கச்சொல்வது சரி
ஆனால் பூவை
அரைத்து அரைத்து
மலமாக்கச்சொன்னது
சிலாக்கியமாக இல்லை
இனி பூவாக இருக்க வேண்டாம்
என முடிவெடுக்கப்பட்டது

அன்பு

மலரினும் மெல்லிய
திருக்குறளில்
மயங்கிக் கிடந்தேன்
அடி செருப்பால நாயே
என அன்பான குரல் கேட்க
நாயாகி மாறி
அன்பைச் சொறிந்தேன்

மன்னி

பழி வாங்குதலின்
முதல் படி
காந்திய நியதியில்
மன்னிப்பு
முதலில் பழி தீர்த்தேன்
பின் காந்திய வழியில்
என்னையே நான்
மன்னித்தேன்

கிழமை

எனக்கான ஒரு கிழமை
வேண்டி
கிழமைக்கடவுளிடம்
தபஸ் செய்துகொண்டிருந்தேன்
நாலாயிரம் வருடம் பொறுத்து
என் கண் முன்னே
பிரதிட்டை ஆனார்
கிழமைக்கடவுள்
எனக்கு கிழமைகளை
தானமாக கொடுத்துவிடுகிறேன் என்றார்
மற்றவர்களுக்கு என்ன செய்வீர்கள்
என்றேன்
அவர்களுக்கு கிழமைகள்
தேவையில்லை
அனைவரும் கருந்துளைகளுக்குள்
நிலவின் துணையுடன்
உறங்கிவிட்டனர்
நீ ஒருவன் தான் குகைக்குள்
மிச்சம்
எல்லாம் எடுத்துக்கொள்
என்றான்
இனிமேல் நானெடுத்து
என்ன செய்ய
கிழமைகள் குப்பைக்கு
போயின
நான் கிழமையில்லா
கிழவனானேன்…

காட்டினில்

பச்சை நிறக்காட்டினில்
தொலைந்துபோனேன்
கசந்து கசந்து
பச்சையமானேன்
புள்ளிமான் வேட்டையாடும்
ஒருவனின் கால்
பூட்ஸில் சிக்கி சிதிலமானேன்
சிவப்பாய் என் அன்பு மட்டும்
அவன் காலில் ஒட்டிக்கொண்டது

கடவுள்

என் கடவுளை ஒரு நாள்
கீழிறக்கினார்கள்
அவனுக்கு என் மொழி
புரியவில்லை
அவனுக்கு நான் பக்தன்
என்பதும் தெரியவில்லை
சரி இருந்துவிட்டு போகட்டும்
கொஞ்ச நாள் நம்பிவிட்டு
போகிறேன்
ஒரு நாள் நான் கடவுளாவேன்
நீ
பக்தனாய் மாறிப்போ
என்றதில் திடுக்கிட்டு
நானே கடவுளாய் இருக்கிறேன்
ததாஸ்து என்றான்…

சேர்க்கை

சேர்த்துக்கொண்டவன் இப்போது
விழித்துக்கொண்டான்
சேராதீர்கள் சேராதீர்கள்
என மண்டியிட்டு கேட்டுக்கொண்டான்
சேர்ந்த்தவர்கள் சும்மா இருப்பார்களா
இனி வேறு போக்கிடம் இல்லை
நீ வேண்டுமானால்
போய் சேர்ந்துகொள்
உன் பெயர் எங்களுக்கு போதும்
என அறிவித்தார்கள்

ஓலம்

அனைத்திற்கும் மவுனம் தான்
பதிலென முடிவெடுத்தேன்
அன்று இரவு
என் மவுனமூட்டை
திடுக்கிட்டு திறந்துகொண்டது
ஓலமோ ஓலம்
அப்படி ஒரு ஓலம்
அடக்க இருநூறு மவுன
மூட்டைகள் தேவைப்பட்டது
அதைத்தேடி கொண்டு
வருவதற்குள்
என் முதல் மவுனமூட்டை
எதிர்பார்த்தது போல
தற்கொலை செய்துகொண்டது
ஆனால் தற்கொலையின்
எச்சங்கள் எதுவுமில்லாத
மவுன மரணம் அது
இருநூறு மவுன மூட்டைகளும்
இப்போது என்ன செய்வதென
அறியாமல் பேந்தப்பேந்த
விழித்தன…

Thursday, February 03, 2022

இரவு

இரவுகளையே வெறுக்கிறேன் 
அங்கு தான் நான் என்பது 
வெளிப்படையாக இருக்கிறது 
உண்மைகள் வெண்ணிற பற்கள் 
கொண்டு இளிக்கின்றன 
முடிந்தால் இரவுகளை 
வென்று பகல்கள் மட்டும் 
கொண்ட ஒரு உலகத்தை 
ஆள விரும்புகிறேன் 
அங்கு கனவுகள் விற்கப்படும் 
உடல் உபாதைகள் 
பஞ்சு பொதிகளில் புதைத்து வைக்கப்படும் 
ஆனாலும் ஒன்று மட்டும் குறையும்

Wednesday, January 19, 2022

என் ஒரு சூரியன்

தகிக்கும் இளமை
சிறு அண்டத்தின் முப்பாட்டன்
ஒரு நாள் என்னிடம் பேசி
ஒரு நாள் சூரியனாக இருக்கச்சொன்னான்
தகித்தேன்
உடலொன்றும் புண்ணாகவில்லை
பேரண்டத்தின் சூட்டுக்கு முன்
நான் மிகக்குளுமை என
பக்கத்து வீட்டு சூரியன் சொன்னான்
வந்துவிட்டான் என் நேற்றைய சூரியன்
நானே இருக்கிறேன் என்றேன்
இல்லை, தொண்டு கிழம் ஒன்று
துணை சென்றபின்
என்னையே துணை என்று
உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறான்
அவனுக்கு உயிர் உள்ளவரை
நானே இருக்கிறேன்
அவன் போனபின் இன்னும் பல
மில்லியன் கிழங்கள் வரும்
அவர்களுக்கு நீ தகப்பனாய்
இருந்துவிட்டுப்போ
என்றது
-
நிலவுக்கும் சூரியனுக்கும்
கட்டுப்படுத்த முடியா காதலுண்டு
அந்த காதலில் நானுமுண்டு
ஒரு நாள் நிலவாவேன்
மறு நாள் சூரியனாவேன்
குளிரும் வெயிலும்
என்னைத் தேய்த்து தேய்த்து
குழந்தை ஆக்கியது
அதனினும் தாண்டி ஒரு நாள்
சிறு புள்ளியும் ஆக்கியது
பேரண்டத்தின் பெரு வெடிப்பின்
முதல் துகளானேன்
சூரியனின் தகப்பனாகவும் ஆனேன்
-
சூரியனுக்கு பல வேண்டுதல்கள்
ஒரு மரம் மட்டும் வேண்டாது
அது நிலவினால் வளரும்
குளிரொளி வேர்களில் தென்படும்
சூரியன் வந்தால் இருண்டு கொள்ளும்
தகிக்கும் ஒரு சூரிய நாளில்
முகில் பறவை ஒன்று
குளிரொளியை திருடிக்கொண்டது
நிலவின் பிள்ளை மரம்
வலம் வந்த சூரியன் உமிழ்ந்த
வெயிலெச்சத்தில் சாம்பலாகிப் போன குழந்தை
விதையாய் மாறி கண் சிமிட்டும்
நட்சத்திரமானது
-
சூரியனில் ஒரு நாள் தண்ணீர்
வைக்க தலைப்பட்டேன்
தண்ணீர் தங்காது என சொல்லப்பட்டது
கிட்டே கூட செல்லாது
பொசுங்கி விடும்
பொல்லாப்பேச்சுகள்
அறிவியலின் அறிவிலிகள்
முன் நான் சாந்தியானேன்
சூரியனில் தண்ணீரை
பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது
என் முப்பாட்டனின்
முதல் விந்து
-
உடலின் எந்தப்பகுதியிலும்
சூரியனைப் பொருத்தலாம் என வரம் கிடைத்தது
இதயத்தில் வைத்தேன்
கண்டவர்களை எல்லாம் பொசுக்கி
என்னை பொறுக்கி ஆக்கியது
மூளையில் வைத்தேன்
பணம் கொள்ளை கொள்ளையாய்
சம்பாரித்தேன்
கண்ணின் மணியில் வைத்தேன்
காதலிகளின் மடியில்
மன்மத மலையானேன்
கால் பாதத்தில் வைத்தேன்
பூமி ஒவ்வொரு அடியிலும்
கருந்துளை ஆனது
மூக்கின் நுனியில் வைத்தேன்
எதிரில் வருபவரின் முகமெல்லாம்
கருக்கி முண்டமானது
எங்கு வைத்தாலும் நிம்மதி இல்லை
எரிகின்ற மெழுகின் வசம் ஒப்படைத்தேன்
அது மொத்தமாக விழுங்கி
அதன் ஒரு துளி அலகில் 
எப்போதும் சூரியனை
பரப்பிக்கொண்டே இருந்தது
-
கவிதைகளால் வடித்த நிலா
ஒரு நாள் காய்ந்து போனது
சூரியன் கடலுடன் காதல்
கொண்டு இன்னொரு நிலவை
பெற்றெடுத்தது
அந்த நிலவுக்கு குளிர் தரும்
குணமில்லை
நெருப்பை அடிவயிற்றில்
சேர்த்துக்கொண்டே இருந்தது
நிலாக்கவிஞன் எழுதினான்
சூரியநிலா எப்போது தான்
குளிரத்தொடங்குவாய்
என் கவிதைகள் எல்லாம்
வேரில்லா இலைகளை
கடைசி மூச்சுடன்
புதுக்குளிருக்காக
காத்துக்கொண்டிருக்கிறது

மனிதன்

கடவுளாகும் வரம் கிடைக்கவில்லை
மனிதனாகிப்போனேன்
வாழ்வின் பாதியில் உணர்ந்தேன்
கடவுள் வேலை சுலபம்
மறுமுறை கடவுளானேன்
இப்போதிருக்கும் கடவுளுக்கு
நெஞ்செரிச்சல்
என்னை சொர்கத்திற்கு அனுப்பினான்
வஞ்சகன்
நரகத்திற்கு அனுப்பி இருக்கலாம்!!!

வெளியேற்றம்

 மனிதப்பிறவி வெளியேறும்
வசதி கொண்டது
பிறக்கும் பொழுதின் வெளியேற்றம்
கொண்டாட்ட வாழ்க்கையின்
முதல் சிறகடிப்பு
பெற்றோர் விட்டு வெளியேற்றம்
மிச்சமுள்ள வாழ்வின்
முதல் கல்
உடல் விட்டு உடல் வெளியேற்றம்
தனக்கு பிறகான தன்னின்
குழந்தைக் களியாட்டம்
நோய் விட்டு உடல் வெளியேற்றம்
முற்றும் முடிந்த ஒரு ஆற்றின்
கடல் சேரும் சம்பவ கூச்சல்
ஒவ்வொன்றிலும் வெளியேற்றம்
உள் சென்றது எப்போது
சிப்பியின் முத்து
சிரித்தது!!!

காதலியின் தந்தை

கவிகள் அனைவரும் நரகம் சென்றனர்
வயிறு முட்ட முட்ட மீல்ஸ் பரிமாரப்பட்டது
ஒவ்வொருவராக கை கழுவினர்
எழுதிய கவி அனைத்தும்
மேகம் வழியே கீழிறங்கி
மழையாய் பொழிந்து
ஒரு காதலனின் காதில் ஒரு சொட்டாய் இறங்கியது
அவன் கவியானான்
அன்பே! உன் பெயருக்கு முன் இனிசியல் வேண்டாம்
பூ என்று வைத்துக்கொள்
அதற்கு பிறந்தவள் தான்
நீ
என முடித்தான்
காதலியின் தந்தை
இந்த கவியையும்
முடித்தான்
மேல் சென்றவன் கைகளும் கழுவப்பட்டது

அமுக்குணி

கவிதைக்குள் எவரோ ஒருவர் பேசிக்கொண்டே இருக்கின்றனர்
பேசாக்கவிதை உண்டாவென மகாகவியிடம் கேட்டேன்
உண்டென்றான்
என்ன உத்தியில் உழைப்பது?
புத்தியை குப்பையில் போட்டுவிடு
இதயத்தை கழட்டி கோட் ஸ்டாண்டில் கவிழ்த்துவிடு
ஏதும் இல்லா முண்டமான கவியாக இரு
பேசாக்கவிதை பிறக்குமென்றான்
அப்படி ஒரு கவிதையில் சுரத்தே இருக்காதே
ஆனால் அது தான் இந்தக்கால கவிதை
பேசாக்கவிதைகள்
அவனிடமும் பேசாது
இவனிடமும் பேசாது
தன்னிடமும் பேசாது
அமுக்குணியாக உட்கார்ந்திருக்கும்
கேள்வி கேட்டால் அழுகிச்
செத்துவிடும்
மான மரிக்கொழுந்து
அதிகமுள்ளவை அவை

அகாலத் தீண்டல்

எங்கோ ஒரு தீண்டலில் விழித்துக்கொள்கிறேன்
இரவை குழிக்குள் தள்ளிவிட்டு
இன்பத்தை நிரப்பிக்கொள்கிறேன்
இன்பமும் தீண்டலும்
தேடவியலா ஒரு முடிவிலியாக
கண்கள் கணம் தாங்க இயலாமல்
இரண்டையும் அகால குழிக்குள்
தள்ளி மண் அள்ளி பூமிக்குள் புதைத்தது
ஏதும் இல்லா தத்துவார்த்தியாக அலைந்தேன்
இரண்டு நாள் பொறுத்து அங்கு ஒரு பூ முளைத்தது
நான் தீண்டலின் பிள்ளை என பிரமாண்டமாய் சிரித்துக்கொண்டது

Thursday, January 13, 2022

என் ஒரு பறவை

 பறந்திளைத்தபின் தரை தொட்டது
பல கனவுகளைச் சுமந்த அந்த பறவை
கனவுகளைத்தின்ற பறவை அது
கனவுகள் உள்ளே சென்றால்
கனவுகள் தான் வெளி வரும்
அதன் பின் பல மிருகங்கள்
சுருண்ட வயிறுடன் சுற்றும்
கனவின் மென் பக்கங்களை
களவாட வேண்டி
அதன் பாதம் வருடும்
கனவுப்பறவை காறி உமிழ்ந்து
உனக்கெல்லாம் என் கனவு
தேவை இல்லை
என் எச்சம் கொண்டு வாழ்ந்துவிடு
அதுவே உன்னை
இன்னொரு பறவையாக்கும்
நான் கடவுள்
என்னைக்கொன்று தின்ன
நீ ஒன்றும் மனிதன் அல்ல…

-

ஒவ்வொரு நாளும் ஒரு பறவையின் கனவு
செவ்வந்தி நிறத்தின் பறவை
இதயத்தின் தேகம் கொண்ட இன்னொரு பறவை
ஆங்காரம் கொண்ட இன்னொன்று
மருதாணி மணம் கொண்ட இன்னொன்று
தினம் ஒரு கனவு
பறந்து பறந்து கனா கண்டேன்
இரவுகளின் காதலில் பறவை
பிள்ளை கண்டது
கனவுப்பிள்ளை
ஒரு நாள் கனவுகள் நின்றன
பறவைகள் பஞ்சத்தில்
தற்கொலை செய்து கொண்டன
என் காலைகள் மனிதர்களுடன்
இரவுகள் இன்னும் அடுத்த
பறவைக்காக
அது வரை இரவுகள்
அனைத்திலும்
கனவுகள் அண்டா
கோட்டையில் கூகையாய்
விழித்திருப்பேன்!!

-

பறவையின் அலகுகள்
போல் வாழ்க்கை
கூராகவும்
ரத்தம் தோய்ந்ததும்
சதைகளின் நார்களின் கவுச்சியும்
உலர்ந்த பழங்களின் நாற்றமும்
கொண்டதாகி இருந்தது
ஒரு மடப்பயலும் சொல்லவில்லை
எனக்கும் புலப்படவில்லை
அந்த அலகு தான்
மென்சதையை மிருது
குலையாமல் ஈரப்படுத்துக்கொண்டே இருக்கிறதென்று
வாழ்வு இனிக்கிறது
ஆனாலும்
அலகின் வன்முறை
இல்லாமலிருந்தால்
இன்னும் மிருதுவாக இருந்திருக்கும்

-

பறவைக்கும் எனக்கும்
ஒரே கூடு
அது வெண்ணிற குச்சிகள்
அடங்கிய பகுதியில்
உறங்கும்
நான் சாக்கடையில்
அள்ளிய குச்சியின்
பக்கம்
அதற்கு இரக்கமே இல்லை
என் வாய் திறக்க
சொல்லித்தரவில்லை
வாய் திறந்தாலும்
அதன் இரையை
எனக்கு ஈந்ததில்லை
எதற்கு இப்படி ஒரு வாழ்வு
ஒரு நாள் நான்
பறவையாக முடிவெடுத்தேன்
சொன்னேன்
வேண்டாம் என்றது
உன் இரக்கத்தில்
வயிறு பிறழ்ந்து
சாவதை விட
லாரி முன் அடிபட்டு
சாவது மிக நன்று
பறந்தேன்
லாரிகள் வந்தன சென்றன
ஒரு சிறுவன் வந்தான்
கொள்ளை அடித்தான்
என்னை காதலர் பறவை என்றான்
கூண்டில் அடைத்தான்
காதல் செய் என்றான்
இதற்கு சாக்கடை குச்சி
எவ்வளவோ தேவலாம்

-

பறவைக்கு மனித வாழ்வு கிட்டியது
காலை திருநீறு இட்டுக்கொண்டது
இட்டிலி சாப்பிட்டது
தலை மயிரை வண்ணம் அடித்துக்கொண்டது
அலுவலகம் சென்றது
சக ஊழியர்களை திட்டித்தீர்த்தது
இரவில் உடல் நனைய காதலித்தது
அடுத்த நாள்
அதே இட்டிலி
அதே வண்ணம்
அதே காதல்
மீண்டும் பறவையாகவே மாறிப்போனது
பக்கத்தில் இருந்த
இன்னொரு மனிதனாய் இருந்த
பறவை சொன்னது
இது முடிவல்ல
நீ மறுமுறையும் மனிதனாவாய்
திரும்பி பறவையாவாய்
திருந்த முடியாது
மனிதனுக்கு அமிலம் சூழ் நெஞ்சு
அவன் பொசுங்கிப்போனாலும்
அந்த நெருப்பில் தான் மறுமுறை
சிறுநீர் கழிப்பான்..

-

கிழட்டுப்பறவை ஒன்று
வேண்டுமென்றே வம்பிழுக்கும்
வழியில் செல்லும்
இளம்பெண் பறவையை
காதலுக்கு அழைக்கும்
அது வராது
இன்னொரு கிழடு
அதன் கூட்டில் இருமிக்கொண்டிருக்கும்
அதற்கு வாய்முத்தம்
கொண்டு சென்று கொடுக்கும்
நிர்வாணத்தை மட்டுமே
நம்பி இருக்கும் பறவை
இனத்திற்கு
ஜிகினா உடை அணிவித்து
கெக் கெக் என சிரிக்கும்
எல்லாம் ஒரு நாள்
முடிந்தது
கடைசி மூச்சு
இன்னும் என்ன உண்டு வாழ்வில்
தன் இறகில் ஒன்றை
பிய்த்து கீழே விளையாடும்
குட்டிப்பெண்ணிடத்தில்
கொடுத்து
புத்தகத்தில் வை
என் மகன் பிறப்பான்
அவனை கூண்டில்
மட்டும் அடைக்காதே
எனச்சொல்லி வானம் பார்த்து
கடையை சாத்திக்கொண்டது

-

மேகம் தான் தன் கூடு
என ஒரே சண்டை
கூட்டுக்கிளி 
தனிக்கிளி ஆகும் போது
தான் இந்த சண்டை
மேகத்தில் உன் குச்சி
நிற்காது
எனக்கு நிற்க வேண்டிய
அவசியம் இல்லை
அதுவே என் கூடு
அங்கே உறக்கம் வராது
அது தேவை இல்லை
நான் கனவு காணப்போகிறேன்
உறங்கப்போவதில்லை
உயிர் பிரிந்துவிடும்
போனால் போகட்டும்
அம்மா போ சொல்லிவிட்டது

Friday, September 17, 2021

மணம்

எப்பாடு பட்டாவது 
திருமணம் செய்து கொண்டுவிடு 
என்றான் நண்பன் 
ஏனென்று கேட்டால் 
தற்கொலையிலிருந்து 
விடுபடுவாய் 
ஆனால் 
கொலை செய்யப்பட 
வாய்ப்புண்டு
என்றான் 

இறை

 கடவுளின் தொல்லை தாளாமல் 
ஒரு நாள் அவனை 
இருட்டறையில் அடைத்து வைத்தேன்
அந்த நாள் 
இரவெல்லாம் 
ஒரே அழுகை 
அறையே நீரில் 
மூழ்கியது 
அடுத்த நாள் 
மக்கிப்போன வாசம் வந்தது 
திறந்து பார்த்தால் 
இறைவன் எரிந்து கொண்டிருந்தான் 
நேற்றைய தண்ணீரை 
நெருப்பாய் மாற்றி இருப்பான் 
ஆனாலும் வெளியே 
அனுப்ப மனமில்லை 
அனுப்பினால் நடக்கும் 
விபரீதங்கங்களுக்கு 
அவனும் பொறுப்பேற்க 
மாட்டேன் என்கிறான் 
என்னையும் விட்டு விலக 
மாட்டேன் என்கிறான் 
அடுத்த நாள் இரவு 
அங்கிருந்த புகை 
அடங்கிப்போனது 
உள்ளே நறுமணம்
இறைவன் வாசமாகி 
உள்ளேயே நிறைத்து வைத்தான் 
ஆனாலும் வெளியே 
அனுப்ப மனமில்லை 
வெளியே நான் மட்டும் 
சென்றேன் 
சுத்தமாக மிக இலகுவாக 
இருந்தேன் 
அன்றைய இரவு 
அவன் மக்கிப்போன 
குப்பையாகிப் போனான் 
மொத்தத்தில் 
அவனுக்கு பைத்தியம் 
பிடித்துவிட்டது என 
அறிந்து கொண்டேன் 
இனி வெளியே விட்டுவிடலாம் 
குப்பையை யார் 
கண்டுகொள்ளப்போகிறார்கள் 
கொட்டிவிட்டேன் 
ஒரு துறவி தூக்கிச்சுமந்தான்
இமயமலையில் 
கொட்டிவிடுவானாம்
இத்தனை நடந்தும் 
ஒரு வார்த்தை அவன் பேசவில்லை 
இறைவனுக்கு வாய் பேச
வராது என நினைக்கிறேன்.

Tuesday, September 14, 2021

மடி

இறந்த பின் 
நான் முன்பிருந்த 
இடத்திற்கெல்லாம் 
சென்று வரலாம் 
என்றொரு வரம் 
கிடைத்தது
ஒவ்வொருவர் மடியிலும் 
ஒரு முறை கிடந்து வந்தேன் 
மனைவியின் மடியில் 
இன்னும் என் வாசம் 
சுற்றிக்கொண்டு இருந்தது 
மகனின் மடியில் 
என் ஒற்றை 
நரை முடி தள்ளாடிக்கொண்டிருந்தது 
தந்தையின் மடியில் 
என் எச்சில் 
உலர்ந்து கிடந்தது 
தாயின் மடியை 
தேடித்தேடி 
அலைந்தேன் 
இன்னொருவன் சொன்னான் 
தாயின் மடி எப்போதும் கிடைக்காது 
அவளுக்கு நிரந்தர வரம் உண்டு 
மகவுகளுக்கு பின் 
திரிந்தலையும் வரம்
உன் பின்னால் தான் இருக்கிறாள் 
பின் பார்த்தால் 
உனக்கு நிறைய நரை முடி 
தலைக்கு எண்ணெய் வெச்சிட்டே இரு 
என்றாள்

கங்கு

 எங்கெங்கு காணினும்
என்னைத் தேடியலைந்தேன்.
கருவில் என்னைக் கேட்டேன்
அது நான் இல்லை
இந்தப்பெண்ணின் ஆங்காரம்
என்றது
பள்ளியில் என்னைக் கேட்டேன்
புத்தக அடுக்கில்
நீ ஒரு காகிதம் என்றது
மணத்தில் என்னைக் கேட்டேன்
காதலின் ஒரு தேய்பிறைத்துளி
என்றது
அலுவலில் என்னைக் கேட்டேன்
முதல் போட்டவனுக்கு
அடிமையானவன் நீ
என்றது
முதுமையில் கேட்டேன்
அமிழ்ந்து கொண்டிருக்கும் 
ஒரு துளி
என்றது
இன்னும் எப்போது தான் நான்
எனக் கேட்டேன்
காத்திரு
என்றது
சிதையில் சிதையும்
முன் கேட்டேன்
உன்னைப் பற்றிய
முதல் கங்கு தான்
நீ
என்றது!!!

நாம்

நான் நீ 
நீ நானா 
எனக்கேட்டபோது 
நீ நான் 
ஆனால் 
நான் நாம் 
என்றாள்!!

Monday, August 30, 2021

40

நரம்புகளின் மீட்டலில் 
இப்போது 
வேறொரு தீண்டல்
வருடுதலும் 
வாசனைகளும் 
அழுத்தங்களும் 
வெவ்வேறு
சுற்றமும் வேறு 
பெரிது பெரிதானது 
இளம் பச்சைகள்
எல்லாம் 
கொதிக்கும்
ரத்தமானது
ஒருத்தி மட்டும்
கண்ணில் மலரையும் 
உதட்டில் துடிப்பையும் 
மனதில் கொண்டாட்டத்தையும் 
கொண்டாள்
உயிர் பிரிந்தது 
கொண்டாட்டமாகும் 
இங்கு மட்டும்.

Thursday, August 26, 2021

கலாகாரன்

 எப்பொழுதும் உம்மென்று
இருக்கும் வாய் அவனுக்கு!
இரவின் காதலன்
உரித்துக்கொண்டு 
வெளிவருவான்
நகரத்துக்கே வெளிச்சம் 
பாய்ச்சுவான் 
முகங்களை எல்லாம் 
தன் முகம் கொண்டு 
தழுவுவான் 
விடிவதற்குள் ஒரு அவசரம் 
அசுரனின் வேகத்தில் 
இரவை பருகி முடிப்பான். 
விடியும்.
சாந்தமாகி பலரின் 
காலில் படாமல் இருக்க 
பகலின் இருட்டு தளங்களில் 
உறங்கிக்கிடப்பான். 

Tuesday, August 24, 2021

அமைதி

 பழைய நினைவுகளின் மேய்ப்பன் 
சொன்னான், 
அப்போதெல்லாம் ஒரே நினைவு 
ஒன்றைத்தாண்டிய பின் 
தான் இன்னொரு நினைவு 
பின் செல்லும் 
ஒவ்வொன்றுக்கும் இரை உண்டு 
நின்று நிதானமாக 
புசிக்கும்.
பின் வரும் நினைவுக்கும்
முகமன் கூறும்.

புதிய நினைவுகளின் மேய்ப்பன் 
சொன்னான், 
நான் அத்தனை நினைவுகளையும் 
ஒரு அறைக்குள் அடைப்பேன் 
அவை பெரும் ஓலம் போடும் 
ஒன்றின் ஓலம் இன்னொன்றுக்கு 
தற்கொலை எண்ணம் கொடுக்கும்.
ஒரு கட்டத்தில் 
அனைத்துமே மூர்ச்சை ஆகி 
மரித்துவிடும்.
நான் அடுத்த நினைவு
மாநாட்டுக்கான வேலைகளை 
பார்த்துவிடுவேன்.

பழைய மேய்ப்பன் புதிய மேய்ப்பனிடம் 
சொன்னான்,
உன் கூட்டத்தில் 
என்னையும் சேர்த்துக்கொள்ளேன்.
நினைவுகளின் அமைதி என்னை 
பித்தனாக்குகிறது. 

Monday, August 23, 2021

யாதெனின்

எழுத்தாளன் எனப்படுவான்
இவனெல்லாம்
ஆளன் என்ற விளி உண்டு 
ஆனால் 
இலகுவான வாழ்க்கையை 
வாழத்தகுதி 
இல்லாதவனாக இருப்பான்.
அவனுக்கு இஸ்திரி 
போடக்கூட இந்திரியங்கள் 
உதவாது.

விழிப்பில் கனவில் 
எழுத்தும் வாசிப்பும் 
இருப்பவனுக்கு 
கண் முன் என்ன தெரிந்துவிடும்?

அவனுக்கு தனிக்குணங்கள் உண்டு.

அச்சமில்லாதவன் 
கூக்குரல் எழுப்புவான் 
நினைத்த பொழுது அழுவான் 
சில நிமிடங்கள் 
உள்ளிருக்கும் இதயத்தை 
வெளியெடுத்து ரசிப்பான்
இன்னொரு மனிதனை 
பொறுத்துப்போவான்.
ஆனால் இவை அனைத்தையும் 
மசித்து குழைத்து 
சூடாக்கிய தாளில் 
மட்டும் தான் செய்வான்.

வெளி வாழ்க்கையில் 
அவன் மற்றவனைவரைப் 
போலத்தான்.

வெந்து தணிந்த இட்லிக்குள்
மாவு அப்படியே கிடந்தால் 
தட்டை தூக்கி எறிந்து 
அறம் புரிவான்!!

நிழல்

நிழலுக்கும் நிழலுக்கும்
நிழல் யுத்தம் 
நிழலோடு ஒருவன் இருந்தான் 
நிழல் இழந்தவன் ஒருவன் இருந்தான் 
ஒருவனுக்கு அது பாரம்
இன்னொருவனுக்கு அது பலம் 
நேரம் கடந்த பயணத்தில் 
நிழலுக்கு மனிதன் 
பாரமானான் 
நிழல் பிரிந்தது 
நிழல் இல்லாத முண்ட மனிதன் 
இனி சண்டை போட 
ஏதுமில்லை
நம் வழி நாம் பார்ப்போம் 
என பிரிந்தார்கள்! 

Monday, August 16, 2021

குப்பை

 எவ்வளவு கிறுக்கினாலும் 
கவிதை வரவில்லை 
இதயத்தில் கீறு 
என ஒரு அசரீரி வந்தது
கீறினால் நானே 
வெளிவந்தேன்
வந்தவன் சொன்னான்.. 
வலித்தால் அது கவிதை 
வருடினால் அது மக்கும் 
குப்பை!!!

சண்டை

 தனி அறையில் 
எனக்குள் நான் 
விளையாடிக்கொண்டிருந்தேன் 
அவள் வந்தாள் 
அவளும் எனக்குள் அவனும் 
விளையாடிக்கொண்டிருந்தனர் 
நான் எட்டநின்று 
பார்த்துக்கொண்டிருந்தேன்!!
சண்டை போட்டனர்
நான் தான் காரணம் என்றனர்.

புள்ளி

 பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் நான் 
இருந்தேன் 
புள்ளி எனப்பட்டேன்
விரிந்தேன் 
அண்டம் எனப்பட்டேன் 
இன்னும் விரிந்தேன் 
உலகம் எனப்பட்டேன் 
இன்னும் விரிந்தேன் 
வீடு எனப்பட்டேன் 
விரிந்து கொண்டே இருந்தேன் 
புள்ளி ஆகிவிட்டாய் என்றான் ஒரு குரு 
அது தான் எனக்கு தெரிந்தாகிவிட்டதே 
விரிதலும் சுருங்குதலும் 
தான் வாழ்வு 
மற்றதெல்லாம் எதுவுமாகாத
மகா ஜடங்கள்!!!

Friday, April 16, 2021

விட்டகுறை

 அங்கே தான் முன்னோருமுறை 
சொல் வெளியிட்டு இருந்தேன் 
இப்போது தேடிச்சென்றேன் 
அங்கே இருக்கவில்லை 
எங்கும் போயிருக்க 
வாய்ப்பில்லை 
பிறர் கொள்ளை 
அடித்திருக்கவும் 
வாய்ப்பில்லை 
அவ்வளவு சுரத்தான 
ஒன்றும் இல்லை!!
விட்டது விட்டது தான் 
இனிமேல் சொல்ல ஒன்றுமில்லை 
என்று தான் அவள் 
அந்த இடத்தில் 
சொல்லி விடைபெற்றாள்.
ஒரு சித்தன் தான் 
விடைசொன்னான்.
விட்ட சொல் 
அவளுடையதானது.
இன்னும் ஏந்திக்கொண்டிருக்கிறாள்.

இறையொளி

 வீடு பார்த்தேன் 
அழுதேன் 
பிறர் சிரித்தனர் 
சந்தியா ராகம் பார்த்தேன் 
அழுதேன் 
பிறர் சிரித்தனர் 
மூன்றாம் பிறை பார்த்தேன் 
அதே கதை 
ஒரு நாள் சிதையில்  இருந்தார் 
பிறர் அழுதனர் 
நான் அமைதியாய் இருந்தேன்!!!

Tuesday, April 13, 2021

சுதந்திரம்

 அந்த அம்மாளுக்கு ஒரு வினோத பழக்கம் உண்டு. சிறிய ஊசியை வைத்துக்கொள்ள அனுமதி இருந்தது. அதன் மூலம் ஒரு சிறிய வலியை அவள் மற்றவர்களுக்கு கடத்திக்கொண்டே இருந்தாள். அவருக்கு மட்டும் எதற்கு இந்த விபரீத வசதி என்று கேட்டுப்பார்த்தாகி விட்டது. ஆனால், இந்த நிறுவனத்தின் டீன் அதற்கு பதில் சொல்லாமலே நகர்ந்து விடுவார். ஆனால், அதற்கான வழிமுறைகளையும், விதிமீறல்களை பற்றி விரிவாக அந்த நிறுவனத்தின் நிறுவனர்களிடம் தெரிவித்து அதற்கான சம்மதத்தையும் வாங்கி விட்டேன் என்று கூறுவார். எப்படி இருந்தாலும், அந்த நடவடிக்கை பலரை முகம் சுளிக்க வைத்தது.

அது ஒரு மனநல காப்பகம். எங்கு சென்றாலும் எனக்கு மனநல காப்பகங்களுக்கு  சென்று வருவது வாடிக்கை. அங்கே தான் மனிதர்கள் இருப்பதாகவும், வெளியே இருப்பவர்கள் திணிக்கப்பட்டவர்கள். திணிக்கப்பட்டு, உப்பிப்போய், என்ன வாழ்க்கை இது என்று எச்சில் துப்பி அந்த எச்சிலிலேயே உட்கார்ந்து சேவகம் செய்பவர்கள் என்று அடிக்கடி நண்பர்களிடம் கூறுவதுண்டு. இதை எல்லாம் சொல்லும்போது, நண்பன் சொல்லுவான், நீ அங்க இருக்க வேண்டியவன் தான். இங்க தான் நீ மனநிலை பாதிச்சு போய் இருக்க, அங்க போனா சுத்தமா மொழுவிட்டு வந்துடலாம்..

அவளுக்கு என் மேல் தனிப்பிரியம் என்று நினைக்கிறேன். எப்போது போனாலும் வாஞ்சையாக தடவிக்கொடுத்து பேசுவாள். பெரும்பாலும் அவளிடம் நெருங்கிப்பேச நிறைய பேர் வருவதில்லை. அவளின் சக உறைவிட நண்பர்களும் கூட பேசுவதில்லை. ஒரு மூன்று வாரங்களுக்கு பின்பு தான் அதற்கான காரணம் தெரிய வந்தது. அதுவும் அவள் கூறித்தான் தெரிந்தது. காப்பகங்களில் மூன்று வகையான மனிதர்கள் உண்டு. இதில் ஒரு வகையினர் குணமடைந்துவிட்ட, ஆனாலும், திரும்ப அழைத்துச்செல்ல இயலாத அல்லது திரும்ப அழைத்துக்கொள்ளப்படாமல் இருப்பவர்கள்.  அவள் அப்படித்தான். அவளுக்கு இரு மகன்கள் உண்டு. ஒருவனும் சீண்டுவதில்லை. விட்ட காலத்தில் கொடுத்த காசும், முறைத்த முறைப்பும் தான் அவர்களின் கடைசிப்பாசம். ஆனால், குறை சொல்ல ஒன்றுமில்லாமல் தான் இருந்தது. அந்த இரு மகன்களுக்கும் அப்படி ஒரு சம்பவ அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த நாள், வழக்கம் போல ஒரு சனிக்கிழமை. அவளின் அறை மட்டும் எப்போதும் மரக்கிளைகள் தொட்டு உரசிக்கொண்டிருக்கும் படி இருந்தது. அங்கு அவர்களுக்கு தனி அறை என்பது ஒரு சின்ன வன்முறை மட்டுமே. சேர்த்து வைத்திருந்தால் கூட சரியாகி இருப்பார்களோ என்னவோ. அந்த அறைக்கு கடைசியாக போய் உட்கார்ந்து பேசிவிட்டு வருவது தான் வாடிக்கை. அன்று அவளின் அறைக்கு செல்வதற்கு மதியம் போல் ஆகி விட்டது. சூடான வெய்யில் மழை போல பேய்ந்து கொண்டிருந்தது. அவள் அறைக்குள், அவளும் அவளின் மதிய உணவும். அந்த உணவு காய்ந்து போக இன்னும் நான்கு மணி நேரம் இருந்தது. அவள் மரக்கிளையில் ஒரு புழுவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

வாடா, இன்னைக்கு வர மாட்டேன்னு நெனச்சேன்.

இல்லையே, கண்டிப்பா வருவேன்னு உங்களுக்கு தெரியுமே.

தெரியும், ஆனாலும், சந்தேகம் இருந்துகிட்டே தான் இருக்கு. இல்லைன்னா, எல்லாம் தெளிவாகி இருக்குமே. எல்லாரும் தெளிவாவே இருந்துட்டா எதுக்கு பிரச்சினை வரப்போகுது.

சரி, நீங்க ஏன் சாப்பிடல?

இன்னைக்கு வேண்டாம். பசிக்கல. அது எனக்கு செஞ்சு வெச்சிருந்த சாப்பாடு இல்ல. வேற யாருக்கோ. எனக்கு எப்போ செஞ்சிருக்கோ, அப்போ சாப்பிடறேன்.

உங்க டீன் உங்களுக்காக தனியாவே தானே சமையல் செய்ய சொல்றாரு. அப்புறமென்ன..

அது மட்டும் போதுமா? சாப்பாடு தனியா செஞ்சிட்டா, அது நமக்கானது ஆகிடுமா.

சரி விடுங்க, இப்போ சாப்பிடுங்க. இல்லைன்னா, உங்களுக்கு தூக்கம் வராது. 

வராமயே இருக்கட்டும். ஒன்னும் குத்தமில்ல.

அவளுக்கு புரிந்தே தான் இந்த நடவடிக்கைகள் நடக்கிறது. அவள் இதை வேண்டுமென்றே தான் பதிய வைக்கிறாள். அவளுக்கு இன்றைய இரவு முக்கியம். அந்த விடுதலை முக்கியம். அதற்கு இந்த உணவு பெரும் தடைக்கல். இது எனக்கு புரிந்தே தான் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களில் அவளை நான் புரிந்து கொண்டது எவ்வளவோ, ஆனால், இந்த விஷயத்தை எனக்கு முதல் ஆறு மாதங்களிலேயே புரிய வைத்துவிட்டாள். மற்றவர்களும் புரிய வைத்துவிட்டார்கள். எப்போது குமுறும் என்று தெரியாத எரிமலைகள் எத்தனையோ உண்டென்பது போல, அவள் எப்போதெல்லாம் தன்னைவிட்டு விலகி இருப்பாள், எப்போதெல்லாம் தன்னுடனே தங்கி இருப்பாள் என்பதெல்லாம் உணவில் தான் ஆரம்பிக்கும். அவள் உணவு உண்ண மறுக்கும் பொழுதெல்லாம், ஒரு பெரிய பாரத்தை தாங்கிக்கொண்டு இருக்கிறாள் என்று டீன் சொல்வார். அது ஒரு இரண்டு நாட்களாவது தொடரும். மூன்றாவது நாள், அவளின் மலைகள் வெடிக்கும். அவள் பெண்ணாகவே இருக்க மாட்டாள். எரியும் தீ உடை போட்டுக்கொண்டா இருக்கும். அன்று அவளின் அறை இரண்டு பூட்டுக்கள் போடப்பட்டு, பின் சில மரப்பலகைகள் கொண்டு அடைக்கப்பட்டிருக்கும். தீயின் ஜுவாலைகள் அந்த மரப்பலகைகள் தாண்டி கனன்று கொண்டு வெளி வரும். காதுக்கும் மனதுக்குமான தீ. அவள் உண்ணாத உணவிலிருந்து புறப்பட்டு வரும். தீர்க்காத பசியிலிருந்து வரும். அந்த சொற்களையும், வசவுகளை கூர் தீட்டிய வெளியே அனுப்புவாள். அதை பொறுக்கி எடுத்து, விவாதித்தால் கூட அது சரியாகத்தான் இருக்கும். ஆனால், அதை கேட்கும் பக்குவம் அங்கு யாருக்கும் இருக்காது என்பார் டீன்.

இன்று இரவு அதற்காகத்தான் தயாராகிறாளோ என்று பயம் வந்தது. இது மாதத்திற்கு ஒரு முறை நடப்பது என்றாலும், அதை அனைவரும் கடந்து போய்விட பக்குவம் பெற்றிருந்தாலும், அவளின் உடலையும் நரம்புகளையும் அந்த இரவுகள் பதம் பார்த்திருந்தன. அதை தவிர்த்துவிடவே நினைத்தேன். பல முறை அதில் வெற்றி பெறுவேன். சில முறை பெறுவதில்லை. அந்த தோல்வி தருணங்களில், அவளின் தீ ஜுவாலைகளில் நான் கூட வந்து செல்வேன் என்று சிலர் சொல்வார்கள். சரியாகவே இருக்கும், எனக்கான வசவுகளை, பெட்டி போட்டு, உச்ச ஸ்தாயியில் சொல்வாள் என்பார்கள்.

நீங்க சாப்பிட்டா நல்லது.

அதான் சொன்னேனே. இது எனக்கானது இல்ல.

நான் வேணா உங்களுக்கு ஒரு டீ போட்டு கொண்டு வரவா?

உன்ன இங்க இருக்கிற சமையல் அறையில உள்ள விட மாட்டாங்க, தெரியுமில்ல.

அதெல்லாம் டீன் கிட்ட சொல்லிக்கலாம்.

என்ன சொன்னாலும், அதுக்குள்ள போக அனுமதி குடுக்க மாட்டாங்க.

சரி, நீங்களும் வாங்க, உங்களையும் கூட்டிகிட்டு போறேன். நீங்க எனக்கு சமைச்சு குடுங்க. ரெண்டு பெரும் சாப்பிடலாம்.

அவள் முகம் விரிந்தது. உதடுகளுக்குள் மெல்லிய பூ ஒன்று பூத்து அடங்கியது. அதன் பின்னர் ஒரு சேர ஒரு வசவும் வந்து இறங்கியது. 

அங்க போக எனக்கு இஷ்டம் இல்ல.

நீங்க இங்க வர்றத்துக்கு முன்னாடி, நிறைய நேரம் கிச்சன்ல தான் இருப்பீங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். உங்களோட குறிப்புல எழுதி இருந்தது.

அது செத்தவங்களோட நினைவுக்குறிப்பு மாதிரி. அங்க தான் நான் இருந்தேன், அங்க தான் நான் இறக்கவும் செஞ்சேன்.

ஏன் இப்படி பேசுறீங்க. உங்களுக்கு அப்படி என்ன கோவம். 

இந்த நேரத்தில் கேட்டு விடுவதே உத்தமம் என்று நினைத்தேன்.

உங்களுக்கு உடம்புல என்ன பிரச்சினை இருக்குன்னு தெரியும் இல்லையா. அதுக்கு காரணம் என்ன, உங்களோட கோபம். அது யாரு மேல வேணாலும் இருக்கட்டும், ஆனா அதை ஏன் உங்க மேலயே காட்டிக்கறீங்க. உங்க கோபம் உங்களைத்தான் பலி கேக்குது. 

சில நிமிட மௌனங்கள். அவள் இதன் பின் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இப்போது நான் செய்து கொண்டிருப்பது தேவையற்றது. இதனால் அவளின் கோபம் இரண்டாகலாம், இல்லை ஒன்றுமில்லாமல் போகலாம். 

பேச ஆரம்பித்தாள்.

எனக்கு எத்தனை பசங்கன்னு உனக்கு தெரியும் தானே?

ஆமா 

அவங்க என்னை கொண்டு வந்து விட்டாங்கன்னும் தெரியும் தானே?

ஆமா 

எதுக்குன்னு தெரியுமா?

தெரியல 

அவங்க அப்பாவை நான் கொன்னுட்டேன்னு அவங்களுக்கு கோபம்.

சில நிமிட மௌனங்களை நான் தயார் செய்து கொண்டிருந்தேன். அதனுள் ஆச்சரியங்களையும் கோர்த்துக்கொண்டேன். கொஞ்சம் பயமும் சேர்ந்து கொண்டது. ஆனாலும், வயதுக்கேற்ற பலம் இருந்தது. 

நீங்களா? ஏன் அப்படி செஞ்சீங்க.

எனக்கு சமையல் அறை அவ்வளவு பிடிக்கும். அங்க தான் பொறந்துட்டமோ அப்படின்னு கூட யோசிப்பேன். அங்க தான் உறுதியா நான் நானாவே இருப்பேன்னு ஒரு சத்தியம் எனக்குள்ள இருந்தது. என்னோட அம்மா எனக்கு அவளோட சந்தோஷத்தையும், சோகத்தையும், எனக்கான பாடத்தையும் அங்க தான் சொல்லித்தந்தா. அங்கேயே இருன்னு சொல்லவே இல்ல, ஆனா அவ அங்க தான் இருந்தா. அதுனாலயே என்னவோ எனக்கு அங்க இருந்தாலே போதும் அப்படின்னு இருக்கும். அதுக்காக வேலை செஞ்சிகிட்டே இருப்பேன்னு அர்த்தம் இல்ல. சமைக்க பிடிக்கும், அதையும் தாண்டி அந்த அறையில ஓடுற ஈர்ப்பு விசைக்கு நான் அடிமையா இருந்தேன். ஒவ்வொரு வீட்டுக்கும் சமையல் அறை அப்படித்தான் இருக்கும். அங்க தான் உதிக்கும், அங்க தான் அஸ்தமிக்கும். வீட்டுக்கு யாராச்சும் வந்தா கூட, ஒரு நிமிஷம் பேசிட்டு, இதோ இருங்க வந்துடறேன்னு சொல்லிட்டு எதையாச்சும் உருட்டிகிட்டு இருந்தா, வீட்டுக்கு வந்தவங்களும் அங்க வந்து பேசிகிட்டு இருப்பாங்க. ஒரு வகையில அதை நானே டிசைன் செஞ்சிக்கிட்ட கூண்டு. பிடிச்சுதான் இருப்பேன். 

அப்புறமென்ன, அந்த அறைக்கு மேல இவ்வளவு கோபம்.

அங்க தான் எனக்கு காதல் வந்தது. அவருக்கு என் மேல காதல் வரணும்னா, அவர் எனக்கு காதல் வர்ற இடத்துல இருக்கணும்னு நல்லாவே தெரிஞ்சு வெச்சிருந்தார். ஆனா அங்க தான் அவனோட கடைசி நிமிஷமும் இருந்தது.

அவரிலிருந்து அவன் மாறியதில் தான் எல்லா கோலங்களும் வரையப்பட்டிருந்தன. 

ஏன் அப்படி செஞ்சீங்க?

சுதந்திரம் கிடைச்சப்புறமும் கூட நான் போய் வெள்ளைக்காரனை குத்தி கொன்னு போடறேன்னு சொன்னா எப்படி இருக்கும்?

புரியலையே 

வெள்ளைக்காரன் தப்பு பண்ணான். அவனை எதிர்த்து போராடினோம். அதுல பல துக்கமான சம்பவங்கள் இருந்தது. ஆனா ஒரு ராத்திரி, எல்லாம் சரிதான் நான் கெளம்பறேன்னு கிளம்பிட்டான் இல்லையா. அதோட அவனுக்கு புரிஞ்சது. போராடின போராட்டமெல்லாம் அதோட நின்னுடுச்சு. அதுக்கு பிறகும், தீடிர் தீடிர்னு ராத்திரி எழுந்திருச்சு நீ எதுக்கு அப்படி பண்ண, உன்ன சும்மா விடமாட்டேன் அப்படின்னு கிளம்பினா அந்த வெள்ளைக்காரன் உன்ன பைத்தியக்காரன்னு நினைக்க மாட்டானா..

ஆமாம், நினைப்பான்.

அது தான் அங்க நடந்துச்சு.

தப்பு ஒன்னு நடந்தது, பல வருஷம் முன்னாடி. அது கடைசியில வடிஞ்சு, சுத்தமா மன்னிப்பெல்லாம் கேட்டு, மறந்து போச்சுன்னு நெனச்சா, அதையே ஆறு மாசத்துக்கு ஒரு முறை கிளறினா என்ன நடக்கும்?

கோபம் வரும்.

அம்பது வருஷத்துக்கும் அதையே பண்ணா?

கசப்பா தான் இருக்கும்.

ஒரு நாள், அதே சமையல் அறையில தான், முப்பதாயிரத்து முறையா அந்த பிரச்சினை வந்தது. திரும்ப பேசினேன். முதல் முறையா எதிர்த்து பேசினேன்.

மூண்ட தீயை என் முன்னே மூட்டி அந்த வெளிச்சத்தை எனக்கும் வெளிப்படுத்தினாள்.

எல்லாம் புரிந்தது. 

அதன் பின் தான் அவளை இழந்துவிட்டிருந்தாள். ஆனாலும் அவளை அந்த சமையல் அறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என தோன்றியது.

டீன் என்னிடம் பேசினார். இது தேவை இல்லாதது என்றார். இல்லை, அவளுக்கு அங்கே ஒரு விடிவு இருக்க வாய்ப்புண்டு என்றேன்.

கையையும், காலையும் கட்டி வைத்து, அவளை சக்கர நாற்காலியில் தான் கொண்டு சென்றோம். அங்கு சென்றபின் அவளுக்கு சிறிது உதறல் எடுத்து. அவளின் அறையை விட, இந்த அறை பெரியது. ஆனாலும், அவளின் நடுக்கம் குறையவே இல்லை.

ஒரு இரண்டு மணி நேரம் இருந்திருப்போம். சிறிது அமைதியானாள்.

முடிவு செய்தபடி, அவரின் மகனிடம் தொலைபேசியில் பேசி, அவளுக்கு பிடித்த (அவளின் முறைப்படியே) வண்ணமில்லாத கேசரியை கிண்டி வைத்திருந்தோம்.

ஒவ்வொரு கரண்டியாக கொடுத்தோம். தளர்ந்து கொண்டே இருந்தாள். இயக்கம் தடைப்பட்டது போல இருந்தது. திரும்ப அறைக்கு சென்று படுத்தாள்.

அடுத்த நாள், அவள் கொண்டிருந்த சிறிய ஊசியை அவளின் தொண்டைக்குழியில் அவளே செலுத்திக்கொண்டு இறந்திருந்தாள்.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...