Thursday, December 05, 2019

தவமாய் தவமிருந்து

சில நேரங்களில் தமிழ் சினிமாவின் மீதுள்ள அதீத காதல் பெரும் சங்கடமாய் போய்விடுவதும் உண்டு. சங்கடமாய் போய்விடுவது என்பதை விட, சங்கடப்படுத்தி பார்த்து விடுவது என்பதே சரியாக இருக்கும். தமிழ் சினிமாவின் சில படங்களை நான் ரசித்தேன் என சொல்வதோ, இந்த இயக்குனரின் ரசிகன் என சொல்வதோ, மற்றவர்களுக்கு கேலியாக தோன்றும். இத்தனைக்கும் நான் சொல்லும் அனைத்தும் ஆழ்மனதில் இருந்து எழுந்த படைப்புகள், சினிமாவை திரையில் தோன்றும் வண்ணங்களாக மட்டும் பார்க்காமல், அதை கனவு கடத்தியதாக பார்க்கும் அறிவார்ந்த படைப்பாளிகள், திரைப்படத்தை வியாபாரமாக மட்டும் பார்க்காதவர்கள், உள்ளிட்ட இன்னும் பல பேர்.

தவமாய் தவமிருந்து அப்படி ஒரு திரைப்படமாகவே இருந்தது. நான் இன்று வரை ஒரு படத்தை பார்க்கும் முன் தயாராகிறேன் என்றால் அது இந்த திரைப்படம் மட்டுமே. அதென்ன, தயாராவது என்றால், உள்ளதை இழந்து ஒரு கவலை குழிக்குள் தள்ளிவிடப்படும் செயலை ஒவ்வொரு முறையும் செய்யும் இந்த படைப்பு. பயந்தே பார்ப்பேன். பார்த்த அடுத்த நாள் வரை தங்கி விட்டு போகும் கவலைகள். ஆனால் கவலை மட்டுமா சொல்கிறது இந்த படைப்பு. ஒரு மனிதனின் வரலாறு, அதனினும் பெரிதாக அவனின் சின்ன வாழ்க்கை. அதனுள் இருக்கும் மெல்லிய மனத்தின் மக்கள்.

எந்த ஒரு படைப்பும், சாகாவரம் பெறுவது, பார்க்கும் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு வடிவத்தை கட்டமைப்பது. 2005ல் இந்த படம் வந்த போது கொடுத்த அழுத்தம், இப்போது 2019ல் வேறு ஒரு அழுத்தத்தை கொடுக்கிறது.

அப்பா, இன்று வரை தமிழ் சினிமாவில் கைவிடப்பட்ட முயற்சி, தவமாய் தவமிருந்து தவிர. எவ்வளவோ வந்திருக்கிறதே, அப்பா என்று பெயர் கொண்ட திரைப்படமே வந்திருக்கிறதே என்றெல்லாம் சொல் வரும். ஆனால், அப்பனை, அனைத்துமாய் இருப்பவனை, அள்ளி அனைத்து பார்க்காமல், கண்களாலேயே வாழ்க்கை நடத்துபவனை, சிறுக சிறுக மண் சேர்த்து கட்டிய கோட்டை இந்த திரைப்படம்.

சரியாய் சொல்லப்போனால், பெரும்பாலான அப்பன்சாமிகள் கடைசியில் தவித்துக்கொண்டு தான் இறக்கிறார்கள். என்ன தவிப்பு என்பதிலேயே வித்தியாசம் உண்டு. அம்மாக்களுக்கு இல்லையா என்றால், இருக்கும். ஆனால், அம்மா பேசிவிடுவாள். வாழ்வின் பெரும்பாலான நொடிகளை பேசியே அவள் வாழ்ந்திருப்பாள், அதில் சோகமும் அடக்கம், சகலமும் அடக்கம். 2000த்தின் அப்பாக்கள் வித்தியாசமாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால், என் காலத்து அப்பா, ராஜ்கிரண் போலவே. அப்படி மிகைநடிப்பில் ஒருவரும் இருப்பதில்லை என வாதாடலாம். அழுத்தம் கொடுக்கும் வாழ்க்கையிடம், ஒவ்வொருவரும் மிகை முகத்தை காட்டியே இருக்கிறோம். சரியென ஒத்துக்கொள்ள மாட்டோம். அதே போல, இல்லாத ஒன்றை உருவகப்படுத்த சேரன் ஒன்றும் வேற்று கிரகத்தவர் இல்லை.

ஒரு பேட்டியில், கதை சொல்லும்போது, ஹீரோ பிரஸ் வெச்சிருக்காரு. ஹீரோ கடன் தொல்லையில மாட்டிகிட்டு, இக்கட்டான சூழ்நிலையில பசங்க முன்னாடியே அவமானப்படறாரு. ஹீரோ, இளையமகனோட ஏற்ற இறக்கத்தை இப்படித்தான் சரி செஞ்சாரு, என்றெல்லாம் சொன்னரென்றும், ஹீரோ யாரென்று கேட்டால் அது ராஜ்கிரண், அவர் தான் அப்பா என்றாராம். சந்திரமுகி, சச்சின், கஜினி, சிவகாசி, சண்டக்கோழி எல்லாம் வந்த 2005ல் இப்படி ஒரு கதை எடுக்கப்பட்டிருந்தது என்றால், சேரன் என்றொரு மனிதனின் அசாத்திய நம்பிக்கை மட்டுமே. இந்த கதை தோற்கும் என்று அவர் கண்டிப்பாக கணக்கிட்டு இருப்பார். ஆனால், அவரின் வெற்றி, என் போன்ற சிலர் மனதினில் இன்று வரை, 15 ஆண்டுகள் கழித்தும் இந்த திரைப்படம் கொடுக்கும் அதிர்வுகள்.

நான் முதலில் சொன்ன சங்கடத்தை சொல்கிறேன். ஒரு இயக்குனராக சேரனை பிடிக்கும் என்று சொன்ன போதும், தவமாய் தவமிருந்து பிடிக்கும், ஆட்டோகிராப் பிடிக்கும் என்று சொன்னபோதும், எனக்கு வந்த விமர்சனங்கள் அவரை மட்டுமில்லாமல், அவரின் படைப்பை மட்டுமில்லாமல், என் ரசனையையும் கேலியாக்கியது. நான் மட்டுமல்ல, நிறைய பேர் இந்த அனுபவத்தை அடைந்திருக்கலாம். அதற்காக, சேரனின் ரசிகன் என சொல்லாமல் இருக்கும் பல பேர் உண்டு. தவமாய் தவமிருந்து எல்லாம் ஒரு படமா, இவ்வளவு நீண்ட 2000த்தின் பாசமலரை எல்லாம் யார் பார்ப்பார்கள், நீ வேண்டுமானால் பார்க்கலாம் என்றவர்கள் பல பேர் உண்டு. இத்தனையும் உடைக்கும் ஒரு காட்சி, இளைய மகன் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடி போய், அலைக்கழிக்கும் வாழ்க்கையின் இடையில், அப்பா வீட்டின் மத்தியில் உட்கார்ந்திருக்கிறார். எதிர்பார்க்காத மகன், அழுது தீர்க்கிறான். அப்பா, ஒரு சொட்டு கண்ணீர் விடாமல், உனக்கு நான் செய்யவேண்டிய கடமையை என்றும் ஒரு அப்பனாக, உன் காப்பனாக, ஒரு போதும் செய்யாமல் விடமாட்டேன் என்பதை கண்ணாடியின் பின் இருக்கும் கண் வழியே மட்டுமே சொன்ன அந்த அப்பன் போதும். என் கண்களில் அந்த காட்சிக்காக, எப்போதும், ஒரு துளி கண்ணீர், இறக்கும் வரை இருக்கும்.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...