Thursday, May 21, 2020

நான்

எழுத்தாளனாய் இது ஒரு புது அனுபவம். நான் எழுத நேர்ந்ததே ஒரு துர்கனவு என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், என் கனவில் ஒரு பத்து ஸ்குயர் இடம் கேட்டு ஒருவன் வந்திருந்தான்.

ஒரு காலம் இருந்தது, எழுத்தின் பின் அலைச்சலாய் அலைந்து, எழுதியவரை பார்த்துவிட்டு, அவர் வீட்டில் ஒரு இரண்டு மணி நேரம் அளவளாவி விட்டு வருவேன். அப்போது ஒரு இருபத்தி மூன்று வயது இருக்கும். கவி சுகுமாரன் அவர்களின் கவிதைகளை குறிப்பிட்டு, அது குப்பை எனவும், தான் எழுதியது தான் காலத்தின் அளவுகோல் என்பது போலவும் எழுதி இருந்தார். அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடித்து சேர்வதற்குள், நான்கைந்து அமாவாசைகள் கடந்திருந்தன. பட்டு நூல் போல் அவர் வீட்டில் தனியே படுத்திருந்தார். வயதானவர் தான். நான் இளவயது இருக்கும், என நினைத்தேன் நாக்கை பிடுங்கி நாலு முதல் நாற்பது கேள்விகள் கேட்பதே என் எண்ணம். கூடவே சுகுமாரன் அவர்களின் கவிதை தொகுப்பையும் கொண்டு சென்றிருந்தேன். அவருக்கு அடுத்த அமாவாசை முடிவதற்குள் சுகுமாரன் என்பவர் இவர் நினைத்ததை எட்ட இருந்து பார்த்து அதற்கும் ஒரு கவிதை எழுதுவார். அதுவும் உங்களுக்கு புரியாது என சொல்லலாம் என்று தான் இருந்தேன். ஆனால், வயதான மனிதர்.

சார், நீங்க தான் கவிமேகம் அப்படின்ற அடைமொழியில எழுதறவரா?

ஆமா, வாங்க வாங்க.

எப்படி படிச்சீங்க. எங்க படிச்சீங்க. மொதல்ல உக்காருங்க. தண்ணி கொண்டுவா, தனம்.

இருக்கட்டும்ங்க... உங்க அடைமொழி ரொம்ப இனிமையா இருக்கு. நீங்களே வெச்சிக்கிட்டதுங்களா

ஆமா தம்பி, ஆனா நிறைய பேரு சொல்லுவாங்க. உங்க கவிதை எல்லாம் மேகத்துல இருந்து விழற தண்ணியில ஒரு துளி போல அவ்ளோ தூய்மையா இருக்குன்னு.

அய்யா, அவங்க சொன்ன வரியில கூட ஒரு அழகு இருந்தது. ஆனா, உங்க கவிதைகள்ல அதுவும் இல்லையே. சரி, அது இல்லைன்னாலும் பரவாயில்ல, நீங்க ஏன் சுகுமாரனை அப்படி விமர்சனம் செஞ்சீங்க.

நீங்க ஆறாவது தம்பி.

என்னது, ஆறாவது?

ஏன் சுகுமாரனை விமர்சனம் செஞ்சீங்கன்னு கேக்கற ஆறாவது ஆள்.

அந்த அஞ்சு பேருக்கு என்ன பதில் சொன்னிங்க.

சுகுமாரன் நம்பரை கொடுத்துட்டேன். அதுதான் பதில்.

அது எப்படி பதில் ஆகும்?

அத எழுத சொன்னதே அவர் தான் தம்பி...

கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன்.

அவர் ஏன் அப்படி எழுத சொன்னார். அப்படி சொல்ற மனுஷன் இல்லையே.

நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்க.

அவரோட கவிதைகள் அப்படிங்க. யாதுமாகி நின்றாய் காளி, அப்படின்னு ஒரு கவிதை முடியும். அதை படிச்சுட்டு, நான் கொஞ்ச காலம் தூங்கல.

இதான் தம்பி பிரச்சினையே. பல பேரு, எழுத்தையும் அதை எழுதறவனையும் ஒன்னுன்னு நெனக்கறீங்க. அது வேற இது வேற. மண்ணுக்குள்ள அழுக்கை தான் கொட்டறோம், ஆனா அது கொடுக்குறது அழகான பூ. என்னைக்காச்சும் பூவோட அது இருந்த மண்ணையும் கையில வெச்சிகிட்டே அலையறோமா என்ன? அது தனி, இது தனி. நாதஸ்வரம் வாசிக்கறவனோட வாய மோந்து பாக்கற மாதிரி தான். அதை யாருமே பண்றதில்லையே. ஏன்னா, அதை பண்ணா என்ன நடக்கும்னு தெரியும்.

நீங்க சொல்றது புரியுது. ஆனா, இதுக்கும், நீங்க என்னை சுகுமாரன் கிட்ட பேச சொல்றதுக்கும் என்ன சம்மந்தம்.

நான் கொஞ்சம் மேகத்தை தொட்டு பேசினேன். அவரு உங்களுக்கு பிரபஞ்சத்தை தொட்டு விளக்கி இருப்பாரு. அத்தனையும் கேட்ட கெட்ட வார்த்தையா விழுந்திருக்கும்.

நீங்க என்ன தொழில் செஞ்சீங்க. எப்படி கவிதை. எப்படி கவிமேகம்.

எனக்கென்ன தம்பி, தொழில்னு ஒன்னும் பெருசா இல்ல. பலவேலை பாத்தேன். ஒரு கட்டத்துல, பானிபூரி கூட வித்தேன். அதுக்கு என்ன வரவேற்புன்னு நீங்க கேக்கணுமே. கூட்டம் ஈயா மொய்க்கும். அதையே கொஞ்சம் பெருசா செஞ்சு, துணைக்கு நாலு பேர வெச்சிகிட்டு, தொழில் ஒரு மாதிரி முன்னேறிச்சு. நான் அத ஆரம்பிச்ச கட்டத்துல, எங்க அப்பா அந்த காலத்துல போட்ட சமோசா தான் எனக்கு ஆதாரம். அத கொஞ்சம் இந்த காலத்துக்கு மாத்தி பஜ்ஜி, வேர்க்கடலைன்னு மாத்திக்கிட்டு போனேன். எல்லாமே ஒன்னு சேர்ந்து தான் நடந்துச்சு. இதுக்கு நடுவுல தான், அதே அப்பாவை பின்தொடர்ந்து, அவர் படிச்ச கவிதைகளை எல்லாம் நானும் படிச்சு, சின்ன வயசுலயே கடனெல்லாம் வாங்கி, நான் எழுதின கவிதைகளை, எங்க அப்பா பதிப்பிச்சாரு. ஆனா பாருங்க, பஜ்ஜி வித்த காசு கூட நெறய வந்துச்சு. கடைசியில, எழுதின கவிதை பேப்பர் எல்லாம் கடைசியில எங்க போயிருக்கும்னு உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல. பஜ்ஜியை நசுக்கி எண்ணையை பிழியறதுக்கு என்னோட கவிதை பொஸ்தகத்த தவிர வேற எதையும் கொடுத்த, அதையே குடுங்கன்னு கேட்டு வேற டிமாண்டு. அவன் எண்ணையை பிழியும் போதெல்லாம், நான் உள்ள இறங்கி முத்து மாதிரி எடுத்த வார்த்தை எல்லாம், என்னை கெட்ட வார்த்தையிலே திட்டி போட்டுட்டு, கடைசியில எண்ணெயில தற்கொலை பண்ணிக்கிற மாதிரி இருக்கும்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோங்க. ரொம்ப நேரம் பேசிகிட்டு இருக்கீங்க.

அதெல்லாம் இல்ல தம்பி. இது மாதிரி என்னை தேடி வந்து திட்டின அஞ்சு பேரு கிட்டயும் இந்த கதையை மொதல்ல இருந்து சொல்ல ஆரம்பிக்கும்போதே என்னை நிறுத்திட்டு, அவங்க என்ன பேச நெனச்சாங்களோ அத பேசிட்டு போய்கிட்டே இருந்தாங்க. நீங்க மட்டும் தான் என்னை நிறுத்தாம இருந்தீங்க.

இல்ல, ஆனாலும், எனக்கு கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்குங்க.

இருக்குறது தப்பில்ல. கொஞ்ச நாள் இன்னும் ஆழமா படிங்க. கசடெல்லாம் நீங்கும். தெளிவான ஊத்து தண்ணி ஊரும். அதுக்கப்புறம் எல்லாம் புரியும்.

அவரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பி வந்து இருவது வருடங்கள் ஆகி இருந்தன. தெளிந்து தான் இருந்தேன். தெளிந்ததின் உன்னதத்தையே பெற்றிருந்தேன். நானே எழுதுகிறேன். எழுதித்தள்ளுகிறேன். சரியோ தவறோ, எல்லாமே எழுதுகிறேன். ஆனால், நல்ல ஒரு தொழிலை எனக்காக கொண்டுவிட்டு, மீதி நேரத்தை என் கனவில் முதலீடு செய்திருந்தேன். அதன் பலனே, பல இடங்களில் என் எழுத்துக்கள் படிக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும், சில இடங்களில் அதற்கான அங்கீகாரத்தை பெற்றும் இருந்தன.

அப்படி ஒரு நேரத்தில் தான் அந்த பத்து ஸ்குயர் தம்பி என் வீட்டிற்கு வந்திருந்தான்.

அவன் என்னிடம் ஒரு கேள்விக்கு பதில் கேட்டு வந்திருந்தான். ஆனால், அதற்கு நான் பதில் சொல்வதற்கு திணற, அந்த இடைப்பட்ட காலவெளிக்குள், ஒரு நான்கு முறை இரவுகள் கடந்து சென்றிருந்தன. வீட்டிலேயே தங்க சொல்லி இருந்தேன். அதற்குள் பதில் தேடிக்கொண்டும் இருந்தேன்.

அவன் கேட்ட கேள்வி இது தான். நான் இல்லாமல், ஒரு படைப்பு சாத்தியமா?

எழுதும் நான் இல்லாமல், என் படைப்பு இருக்க முடியுமா? ஒரு கவிதையோ, கதையோ, நாவலோ, கட்டுரையோ, எப்போது எழுதினாலும் அதில் நான் தான் இருக்கிறேன். இல்லை என் எண்ணம் தான் இருக்கிறது. இல்லை, எங்கோ ஒரு நியாபகபள்ளத்தில் இருக்கும் மனிதர்களோ, அவர்களுடன் உண்டான சம்பவங்களோ, இல்லை பார்த்தவையோ, படித்தவையோ தான் இருக்கின்றன. அது இல்லாமல் எழுதுவது சாத்தியமா? நீங்கள் எழுதியதில் ஏதாவது ஒன்றில் நீங்கள் இல்லாமல் இருந்திருக்கீர்களா?

என் படைப்புகளை நான் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்தேன். எழுதிக்கிழித்தால் இது தான் நிலை. எனக்குள் தேங்கி இருக்கும் படைப்பு நியாபகங்கள் இப்போது குறைந்திருந்தன. அதனால், இந்த ஆழ்நிலை ஆதாரங்களை தேடுவது கடினமாகவே இருந்தது.

காலம், நேரம் கடந்து சென்றாலும், அதற்கான பதில் கொடுக்க முடியுமா என தெரியவில்லை.

அந்த பத்து ஸ்குயர் இளைஞன், கொஞ்சம் விஸ்தாரமாக என்னுள் விளைந்து கொண்டிருந்தான்.

Tuesday, May 19, 2020

கொலைப்பசி

நேற்று வரை இருந்த நிதானம் இப்போது இல்லை. வழமையாக பேசும் வார்த்தைகள் வரவில்லை. அப்பாவிடம் எப்போதும் போல் நடக்கும் சுகாதார கேள்விகள், பொதுநல விசாரிப்புகள், அதற்கப்புறம் என்ன பேசுவது என்றெல்லாம் தெரியாமல், அம்மாவிடம் கொடுக்க சொல்லி சொல்லும் நடைமுறை நேற்றோடு முடிந்து போனதாய் தெரிந்தது. அப்பா இன்றிலிருந்து நிறைய படிக்க ஆரம்பித்துவிட்டார். ஏன்தான் இந்த வலைப்பதிவு விஷயத்தை சொன்னோம் என்று இருந்தது. ஆனாலும், என்றோ ஒரு நாள் மடை திறந்திருக்க தான் வேண்டும். வயதான ஆலமரம் அவர். விழுதுகள் சொல்லிவிட்டு தான் தரை தொடவேண்டும். தரை தொட்டபின், விட்டகுறை தொட்டகுறை எல்லாம் இருந்தால் பேசிக்கொள்ளத்தான் வேண்டும்.

அப்பாவிற்கு மகன் மேல் கொள்ளைப்பிரியம். சொல்லிக்கொள்ளத்தான் மாட்டார். ஆனால், வெளியே சென்றால் கொட்டித்தீர்ப்பார். மழை மண்ணை நெருங்கும், ஆனால் நனைக்காது என்பது போல். நனைத்தால் தான் என்ன. அப்படியே ஆவியாகி விடும். ஒவ்வொரு துளிக்கும் ஒவ்வொரு தன்னிலை. அதனுள் போய் கண்டுபிடிப்பதற்குள், ஆவியாகவோ, இல்லை மண்ணோடு மண்ணாகவோ சென்றுவிடுகிறது. அப்பா அப்படித்தான், என்னவென்று கண்டுபிடிப்பதற்குள் அடுத்த விஷயத்திற்கு போயிருப்பார். இப்போது வயது ஆகி விட்டது. கொஞ்சம் நிதானம் தங்கி இருக்கிறது. பல காலம் தங்கி இருக்கும் என்றே நினைக்க தோன்றுகிறது.

நேற்றைக்கு தான், நான் எழுதுவேன் என்று சொன்னேன். என்ன எழுதற என்றெல்லாம் கேட்காமல், ஓ அப்படியா என கேட்டவர், அம்மா மூலமாக கேட்டு தெரிந்து கொண்டார். நேராக எந்த  கேள்வியும் வந்ததே இல்லை. அம்மா தபால் கொடுத்தும் வாங்கியுமே வயதாகி போனார். இருபது வருட வலைப்பதிவில், யாருக்கும் சொல்லிடாத பல தகவல்கள் இருந்தன. எழுத தொடங்கிய நாட்களில், எல்லாமும் அதில் இருந்தது. பக்கத்து கட்டிலில் தூங்கிய நண்பன் தன் காதலியை திட்டியது முதல் கொண்டு. ஒரு நாள், தோழியுடன் கடற்கரைக்கு சென்றதையும், திரும்ப வரும்போது முட்டாள்தனமாக அவள் உட்கார்ந்திருந்த மண்ணை பாண்ட் பாக்கட்டில் போட்டு வைத்திருந்தது எல்லாம் எழுதி வைத்திருந்தேன். இப்போது அந்த தோழி எங்கோ, எப்படியோ யார் வீட்டிலோ, நான் எடுத்த மணலெல்லாம் நியாபகம் இல்லாமல் தனித்திருக்க வாய்ப்புண்டு.

சாதா எழுத்து, ஸ்பெஷல் சாதாவாக மாறி, கவிதைகள், கட்டுரைகள், கோபங்கள், திட்டுகள் என பல மாறுதல்கள் தாண்டி எங்கெங்கோ சென்றிருந்தது. மொத்தமாக நான் பேச நினைத்ததை எல்லாம் அது பேசி இருந்தது. மனைவிக்கு எல்லாம் தெரியும். அவளும் அதில் கால்வாசி பதிவுகளில் இடம் பெற்றிருந்தாள். கல்யாணத்திற்கு முன்னரும் பின்னரும். இதெல்லாம் படித்தால் தான் என்ன? ஆமாம், படிக்கலாம் தான். ஆனால், அப்பா படிப்பதில் பல சிக்கல்கள் இருந்தன. அவரை விமர்சனம் செய்தும் பல பதிவுகள் இருந்தது. இதை எல்லாம் யாரோ அவரிடம் சொல்லி, என்னிடம் சமாதானம் பேச வருவார் என்று நினைப்பெல்லாம் இருந்திருக்கிறது. எழுத்தில் இருந்து தீர்மானம் வரும் என்றால், இந்நேரம், உலகில் அனைவரும் எழுதிக் கிழித்திருப்பார்கள். பேசவே வேண்டாம், நான் உனக்கு எழுதி வைக்கிறேன். அதை படித்து, உணர்ந்து, என்னிடம் சமாதானமாக போ என சொல்லி இருப்பார்கள். நல்ல வேளை, பேசியே எல்லாமும் நடக்கிறது. என் வீட்டில், பேச தயக்கம். சொல்ல தயக்கம். உணர்த்த தயக்கம். சண்டை போட தயக்கம். தயக்கமில்லாமல் வந்தது, எழுத்து மட்டுமே. எழுத்திக்கிழித்து விட்டேன். இன்னும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.

அப்பா கேட்டார், மீட்டிங் ஏதாச்சும் இருக்கா? கொஞ்ச நேரம் பேசலாமா?

இதெல்லாம் நடந்து பல வருடங்கள் ஆகி இருந்தது. என்னிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்ற வார்த்தை எல்லாம் அவரிடம் இருந்ததே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சரிப்பா பேசலாம்.

ரெண்டாயிரத்து நாலுல, நவம்பர் மாசம்...

மனது அடித்துக்கொண்டது. என்ன எழுதி வைத்திருக்கிறோம் என, சரசரவென மவுசை புரட்டினேன். நான்கு பதிவுகள் எழுதி இருக்கிறேன். ஒன்றில், கில்லி பற்றி பதிவு. திரிஷாவை ஜொள்ளி எழுதி இருந்தேன். சரி, அதை கேட்டால் சமாளித்து கொள்ளலாம் என்றால், கடைசி பதிவு, என் அப்போதைய காதலி (இப்போதைய மனைவி) பற்றி இருந்தது. மூளையின் அடுக்கில் எல்லாம் தேடுகிறேன். அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று. கிடைத்துவிட்டது. அந்த மாதத்தில் தான் நான் காதலை போட்டு உடைத்திருக்கிறேன். பிரகாஷ் ராஜின், செல்லம் என்ற வார்த்தை மனைவிக்கு சூட்டப்பட்டது வேறு மனதிற்கு வந்து போனது. அவர் அதைப்பற்றித்தான் கேட்பார் என நினைத்தேன்.

அப்பா கேட்டார், உனக்கு என் மருமவள அவ்ளோ பிடிச்சிருந்ததுன்னா, என் கிட்ட நேரா வந்து சொல்லி இருக்க வேண்டியது தானே. ஏன் சுத்தி வளைச்சு, வேண்டாததெல்லாம் இழுத்து, சண்டை போட்டு, ரெண்டு பேருக்கும் பெருசா மனஸ்தாபம் வந்து, தேவை இல்லாம நெறய காயப்படுத்திகிட்டோம். மன்னிச்சிடுப்பா என்றார்.

பரவாயில்லப்பா...

அப்பா கேட்டார், இன்னொன்னு எழுதி இருந்த..

எது?

ரெண்டாயித்து அஞ்சுல டிசம்பர் மாசம்.

அப்பா அப்போது தான் பணிவிடுப்பு பெற்று, ஒய்யாரமாக ஈஸி சேரில் உட்கார்ந்த நேரம்.

அப்பா கேட்டார், உனக்கு நான் ரிட்டையர் ஆனது இவ்ளோ பாதிச்சிருக்கா? ஒரு முறை கூட சொன்னதே இல்லையே. நானும் நீயும் என்னோட வேலை பத்தி பேசிக்கிட்டதே இல்ல. ஆனாலும், அவ்ளோ விஷயம் எழுதி இருக்க. அந்த பியூன் சண்முகம் என்ன ஏமாத்தினதும், அவனை நான் மன்னிச்சி விட்டதையும் கூட எழுதி இருந்த. அத உங்க அம்மா கிட்ட கூட சொன்னதில்ல. நான் திரும்ப வரும்போது, வண்டிய ஒட்டிக்கிட்டு வராம, தள்ளிகிட்டே வந்ததெல்லாம் எழுதி இருக்க. அப்போ நீ என் பக்கத்துலயே இல்ல. ஆனா, சரியாய் எழுதி இருந்த. எப்படி?

தெரியலப்பா. தோணுச்சு..

அப்புறம், தொன்னுத்து எட்டுல, மார்ச் மாசம்...

கருப்பு மாதம் அது. மூளையின் எல்லா அடுக்குகளிலும் அந்த மாதம் விட்டேத்தியாய் உட்கார்ந்திருந்தது. பிய்த்து எறிந்து போட்டபோதிலும், எங்கோ காற்றில் எனக்காகவே காத்திருந்து, திரும்ப வந்து ஒட்டிக்கொண்டிருந்தது.

அதெல்லாம் படிக்காதீங்கப்பா.

எல்லாத்தையும் படிச்சுட்டேன். பேசிடலாமே.

வேண்டாம்பா..

இல்லப்பா பேசிடலாம். இன்னைக்கோ நாளைக்கோ, நான் உனக்கு வெறும் நினைவுகளா தான் இருக்கப்போறேன். அதுல ஒரு நினைவு மட்டும், உனக்கா எனக்கான்னு சண்டை போட்டா எப்படி. தீத்துக்கலாம். நான் ஆலமரம்னு ஒரு இடத்துல எழுதி இருந்த. ஆனா, அந்த ஆணிவேர் எப்பவும் அதோட மண்ணை மட்டுமே தின்னு வாழ்ந்துட்டு இருந்து இருந்தா சரி, பக்கத்து வீட்டு மண்ணை இல்ல தின்னுச்சு. அப்போ, அது தப்பு தானே.

பேசி இப்போ ஒன்னும் நடக்க போறதில்லப்பா.

பேசணும்டா.. பேசியே ஆகணும். இத்தனை நாள் பண்ணல. பேசி இருந்திருக்கணும். எதோ ஒரு அகங்காரம் மனசுக்குள்ள, அப்பன்னா குரல் உசத்தியே பேசணும், எங்க அப்பா என்ன நடத்தின மாதிரி தான் உன்ன நடத்தணும்னு ஒரு அசரீரி கண்ணுக்குள்ள தெரிஞ்சிகிட்டே இருக்கும். அந்த காலத்தோட கெட்ட பழக்கம் அது. இப்போ தெரியுது. ஆனா தெரிஞ்சு ஒன்னும் ஆக போறதில்லன்னு நீ நினைக்கலாம். ஆனா, நீ இத எழுதி வைக்கிற அளவுக்கு இருந்திருக்குன்னா, நான் அத பத்தி சொல்லிடறது சரி தானே.

சொல்லிட்டாலும், ஒன்னும் மாறாதுப்பா..

இல்லைதான். மாத்த வேண்டாம். என்னோட பாவ மன்னிப்பா எடுத்துக்கலாமே...

பாவம் செஞ்ச காலத்துல தாம்பா அது பாவம்.. காலம் கடந்து போச்சுன்னா, அதுக்கு பேரு துரோகம். மன்னிச்சிடுங்கப்பா..

நீ சொல்லலாம். அதுக்கு தான் இந்த நேரம் அமைஞ்சிருக்கு. எதையும் நாம உருவாக்கிறது இல்ல. ஆனா, நேரம் நமக்கு உருவாக்குது. இந்த நேரம், நான் மன்னிப்பு கேக்கணும்னு சொல்லுது. கேட்டுடறேன்.

எனக்கு கேட்டு ஒன்னும் ஆகாதுப்பா..

சரி, கேக்க வேண்டிய இடத்துல கேக்கறேன். நீ சாப்பிட்டியா?

இல்லப்பா.

சரி, நீ சாப்பிடு. நாளைக்கு எல்லாம் தெளிவாகும்.

அடுத்த நாள் காலை, அம்மா எனக்கு அழைத்துக்கொண்டே இருந்தாள். திரும்ப அழைத்தேன்.

என்னடா பேசினீங்க ரெண்டு பேரும். அந்த மனுஷன் இப்படி நடந்து நான் பாத்ததே இல்ல. என்னைக்கும் இல்லாத திருநாளா, இன்னைக்கு வந்து மொதல்ல நீ சாப்பிடு. அதுக்கப்புறம் நான் சாப்பிடறேன்னு சொன்னார். இனிமேல, அவர் நான் சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் சாப்பிடுவாராம். எனக்கு வேற, இதெல்லாம் பழக்கம் இல்ல. அவர் திட்டவே ஆரம்பிச்சுட்டார். வேற வழி இல்லாம, முன்னாடியே சாப்பிட்டுட்டேன். ஜீரணமே ஆகல...

Monday, May 18, 2020

மூக்கு

வீட்டின் முன் இருக்கும் அறையில், பிணம் இருப்பது இப்போது தான் முதல் முறை. அந்த அறையில் தான் இரண்டு சைக்கிள்களும், தட்டுமுட்டு சாமான்களும் வாசம் செய்யும். வீட்டு உரிமையாளர், அந்த அறையை ஏன் கட்டச்சொல்லி கேட்டார் என நிறைய கேள்விகள் வரும். தேவைக்கு கொஞ்சம் கூட பக்கம் வராத ஒரு குட்டி அறை. ஆனால், அதை தாண்டி தான் வீட்டில் சில உயிர்கள் இருக்கும் என தெரியும். அதை பெரியதாக கட்டி இருந்தால் இப்போது, பிணமாக இருந்த மாமாவை கட்டி அழ நிறைய பேர் உட்கார்ந்திருக்க முடியும். மிகப்பெரிய இட்டுக்கட்டு.

பம்பரமாக சுற்றிக்கொண்டிருந்த அப்பா முகத்தில் கவலை அவ்வப்போது வந்து சென்றது. இப்பொழுது தான் மாமா மூச்சற்றவராக கொண்டு வரப்பட்டார். அதற்கு முன் வரையிலும், கிட்டத்தட்ட எட்டு வார மருத்துவமனை வாசம். காசநோய், அவரை பாடாய் படுத்தி இருந்தது. என்னன்னவோ வைத்தியம் பார்த்தும் கேட்கவில்லை. கடைசியில், அப்பா தான் தன் தங்கையை இங்கு இருக்கும் காசநோய்க்கென இருக்கும் பிரத்தியேக மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று கூட்டி வந்தார். வந்த நேரமோ என்னமோ, மாமாவுக்கு ஒன்றும் சரிபட்டுவரவில்லை. மருத்துவமனையிலேயே வாசம். அத்தை மட்டும், பாதி நேரம் இங்கே, பாதி நேரம் அங்கே என குதிரையாக ஓடிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், அன்பு இழந்து, கோபமே மீதி இருந்தது. அவளுக்கென்று ஒரு குரல், அண்ணன் மகனென்றால், கூட ஒரு இன்ச் புன்னகை பெருக்கும். ஆயிரம் தான் தகராறுகள் இருந்தாலும், அன்பாக பேசும் குரலை எப்போதும் உள்ளுக்குள் தேக்கி வைத்துக்கொண்டு தான் இருந்தாள்.

இப்படி ஆகி இருக்க வேண்டாம் தான். அவஸ்தையிலும் அவஸ்தை. இந்த வீட்டிற்கு வாடகை வந்து, இரண்டு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் ஒரு  சாவு. இந்த கதை சொல்பவனுக்கும் அந்த வயதில் இதெல்லாம் புதிது. மாமா உடல் வரும்போதே, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியுடன், நெற்றியில் ஈரம் காயாத விபூதி. செத்தபின் செய்யவேண்டிய காரியமெல்லாம் எப்படி நொடிப்பொழுதில் அரங்கேறுகிறது என்பதெல்லாம் ஆச்சரியம். சேராத கைகள் சேரும், கூடாத நட்பு கூடும், பார்க்காத கண்கள் பார்த்துக்கொள்ளும். இத்தனைக்கும் நடுவில், சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவைக்க அத்தனை சாங்கியங்கள். மூச்சு முட்டும்.

அத்தைக்கும் சரி, அப்பாவுக்கும் சரி, முகத்தில் ஒரே ஒரு கவலை. எப்படி சமாளிப்பது என்று. இன்னும் சொல்லிவிட்டவர்கள் வர நேரமாகும். காசநோய் பாதித்த உடம்பு என்பதால், நிறைய நேரம் வைத்திருப்பது சரியில்ல. எண்பதுகளின் மத்தியில், ஒரு நடுத்தர குடும்பத்தில், குளிர்பதன பேட்டி என்பது, எம்ஜிஆருக்கு மட்டுமே உரித்தானது. மற்றவர்கள் எல்லோரும், சுதந்திரமாக மூச்சு விட்டு சாகலாம். மாமாவின் முகம் மூடப்பட்டிருந்தது. கண்களுக்கு கீழ் மேல்கன்னம் வரை மட்டுமே பார்க்க முடிந்தது. அதற்கு பின் வெள்ளைத்துணியில் மூடியிருந்தது.

அண்ணா, எப்படி சமாளிக்கிறது?

பாத்துக்கலாம்மா..

எப்படி?

என்ன சொல்றதுன்னு யோசி. நானும் யோசிக்கறேன். அதுக்குள்ள, பாடை செய்ய சொல்லிவிட்டிருந்தேன் இல்லையா, அத என்னன்னு பாத்துட்டு வந்துடறேன்.

அப்பா இப்போதைக்கு சில மணி நேரங்களை கடன் வாங்கி வெளியே சென்றார். ஆனால், அவருக்கும் அந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம். இன்னும் சில மணி நேரங்களில் இந்த குட்டி அறையும், நான்கு நான்கு பேராகவே நிற்க முடிந்த தாழ்வாரமும் நிரம்ப போகிறது.

சில மணி நேரமெல்லாம் எடுக்க அவகாசம் கொடுக்காமல், சல்லிசான விலைக்கே மாமாவின் கடைசி வண்டி செய்துவிடப்பட்டு இருந்தது. பூக்கள் மட்டும் தான் வாங்கி கொடுக்க வேண்டும். அதையும், அப்பாவின் நண்பர் பார்த்துக்கொண்டார். எல்லாம் சேர்ந்து, அவருக்கு சொன்ன ஒரே விஷயம், அந்த கேள்விக்கு பதில் என்ன. யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.

அம்மா எதிர்பட்டாள்.

உங்க தங்கச்சிக்கு ஏதாச்சும் பதில் சொல்லுங்க. நம்ம எல்லாரும் சேர்ந்து ஒரே பதில் சொன்னாத்தான் சரியா இருக்கும். நீங்க எதுவும் சொல்ல மாட்டேன்கிறீங்க. இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு.

என்ன செய்யணும்னு எனக்கும் தெரியல. கொடுத்த காசுக்கு அவனுங்க சரியா வேலை செஞ்சிருந்தா, இப்போ இந்த நிலைமை இல்ல. எல்லாத்துலயும் எல்லாருக்கும் ஒரு அலட்சியம். அந்த அலட்சியம், இப்போ நம்மள அலைக்கழிக்குது.

சரி, அவங்ககிட்டயே என்ன பண்ணலாம்னு கேட்டிங்களா?

கேட்டேன். அப்படியே நமக்கு உதவரா மாதிரியே பேசிட போறாங்க... தெரிஞ்ச விஷயம் தானே... எங்களால ஒன்னும் பண்ண முடியாது. நீங்க பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டாங்க... இவ்ளோ படிச்சும், கொஞ்சமாச்சும் அறிவு இருந்தா சரி..

இப்படியே பேசிகிட்டு இருந்தா ஒன்னும் பண்ண முடியாது...

சரி, நடந்தத அப்படியே சொல்லிடலாம்..

அண்ணா, அது எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல...

எப்படி வேணா எடுத்துக்கட்டும்மா. இது தானே நிஜம். வரவங்களும் தெரிஞ்சிக்கட்டும்.

சரி, எப்படியோ ஒன்னு. என்னோட புருஷன் இறந்ததை நெனச்சு அழறதா, இப்படி ஒரு நிலைமையை நமக்கு ஆண்டவன் குடுத்துட்டானேன்னு அழறதா, ஒன்னும் புரியல.

இப்போதைக்கு எல்லாத்தையும் விட்டு தள்ளும்மா.. நமக்கு நிறைய வேலை இருக்கு.. நீ யோசிக்க வேண்டியதெல்லாம், இதுக்கப்புறம் நீ வாழ போற வாழ்க்கை.. அது தான் இப்போதைக்கு தேவை. மச்சானை நல்லபடியா அனுப்பிவைப்போம்.

சரிண்ணா..

இப்படியெல்லாம் பேசிவிட்டாலும், அவருக்கு உள்ளுக்குள் அவஸ்தை அடங்கவில்லை. அந்த முதல் கேள்வியை எதிர்கொள்வதற்கு தான் தைரியம் தேவை. அதற்கு பின் ஒன்றும் இல்லை. அது திரும்ப திரும்ப சொல்லப்படும். அதற்கு பின் பிறருக்கே அது அவல் ஆகிப்போகும். தான் தன்னுடைய வேலையை பார்த்துக்கொள்ளலாம்.

முதலில் வந்து இறங்கியது, இரண்டாவது இளைய அத்தை.

அக்காவை கட்டிக்கொண்டு அழுகிறாள். அழுது தீர்க்கிறாள். ஆசுவாசமாகிறாள்.

அப்பாவிடம் வந்து,

என்னண்ணா, ஏன் முகத்தை இப்படி மூடி வெச்சிருக்கீங்க. வர்றவங்க எல்லாம் பாக்கபோறதே முகத்தை தானே. அதை ஏன் மறைச்சு வெறும் கண்ணும் மட்டும் தெரியற மாதிரி வெச்சிருக்கீங்க.

மச்சானோட மூக்கை ஆஸ்பத்திரியிலேயே, நாம போய் எடுக்குறதுக்குள்ளயே, எலி சாப்பிட்டுச்சும்மா... படுபாவி டாக்டருங்க, உங்க அக்கா வந்து போன அந்த ஆறு மணி நேரத்துக்குள்ள, அவர் இறந்து,  மார்ச்சுவரியில வெச்சு, அங்க இந்த அநியாமெல்லாம் நடந்து, ரொம்ப அசிங்கப்படுத்திட்டாங்க...

அப்பாவுக்கு இப்பொழுது தான் அப்பப்பா என்று இருந்தது.

எலி வேறு வேலை பார்க்க சென்று கொண்டிருந்தது.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...