Monday, May 25, 2020

வேர்

ஊரில் இருந்து வீட்டுக்கு வரும் ஒவ்வொரு தருணமும் அம்மா எனக்காக என்ன செய்தி வைத்திருக்கிறார் என்பதிலேயே இருக்கும். எல்லா வார இறுதி நாட்களும், அவளின் கதைகளிலே ஓடி விடும். அத்தனை கதைகளிலும் இயற்கை அங்கிங்கெனாதபடி பரவி இருக்கும். அவளுக்கு அதை விட்டால் வேறு கதியே இல்லை என்பது. அப்பா கூட ஒரு நாள் சொன்னார், அவளுக்கு மாடியில ஒரு தோட்டம் வெச்சு கொடுத்துட்டா, அங்கேயே சமையல் செஞ்சு, அங்கேயே குடும்பம் நடத்திடுவா. இங்க இருக்குற, பத்துக்கு பத்து இடத்துல அவ பண்ற அராஜகம் இருக்கே, அப்பப்பா சொல்லி மாளலே. இத்தனைக்கும் அம்மா பண்ணும் ஒரே அராஜகம், அங்கேயே தன்னை மறந்து நிற்பது தான். சில சமயம், அனைத்து வேலைகளும் முடிந்த பின்னர், சில நாட்களில், முதல் காரியமாகவே அங்கே தான் காலையே ஆரம்பிக்கும். அப்படி என்னதான் அங்க பொதச்சு வெச்சிருக்காளோ தெரியல. முன்னொரு காலத்துல அவுங்க தாத்தாவோட கொள்ளுத்தாத்தா இங்க கொஞ்சம் பெரிய குடும்பமா இருந்திருக்காங்கன்னு சொல்லுவா. அவங்க பொதச்சு வச்ச புதையலா இருக்குமோ என அப்பா இன்னும் கொஞ்சம் இழுத்து விடுவார். எதற்கும் அசர மாட்டாள், அடுத்த நாள் அவள் பார்வையின் ஆழம் இன்னும் நான்கு அடி கீழே சென்றிருக்கும். சில சமயங்களில், அம்மாவுக்கு புத்தி பேதலித்து இருக்குமோ என்று கூட அனைவரும் பயந்திருக்கிறோம். அப்படி வெறித்திருப்பாள். பெரும்பாலும் ஒரு பகுதியில் தான், மற்ற பகுதிக்கும் பார்வைகளையும் நேரத்தையும் ஒரு சேர கொடுத்திருப்பாள். ஆனால், இந்த ஒரு இரண்டுக்கு மூன்று இடம், பீன்ஸ் செடிக்கும், ரோஜா செடிக்கும், நந்தியாவட்டை செடிக்கும், தக்காளி செடிக்கும் அக்கம் பக்கத்தினராக இருக்கும் மண் மேடு. மேடு என்று சொல்வதற்கும் தகுதி இல்லை தான். கொஞ்சம் சேறு தட்டிப்போனது போல் இருக்கும்.

ஒவ்வொரு வாரம், வெள்ளிக்கிழமையும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில், அடித்து பிடித்து ஏறி, ஒரு இரண்டு மணி நேரம் பல்லைக்கடித்துக்கொண்டு உட்கார்ந்தால், என் பஸ் ஸ்டாப் வந்துவிடும். நிலவு பாதி வேலையை முடிந்திருக்கும் பொழுதாகி இருக்கும். இன்னும் ஆறு மணி நேரத்தில், சூரியனுக்கு வேலையை கொடுத்துவிட்டு, தூங்க செல்லும். அப்படி ஒரு பொழுதில், ஆட்டோ பிடித்து, கதவை தட்டினால், புன்னகையுடன் வரவேற்பாள். தூக்கம் பிடித்திருக்காது. ஆனால், படுத்துக்கொண்டே நேரத்தை கடத்துவாள். அப்பா, ஒரு குட்டித்தூக்கம் போட்டிருப்பார். வந்தவுடன், அவரின் வேலை, பாதுகாப்பாக கதவை திறந்து, எனக்கும் அம்மாவுக்குமான அந்த நிமிடங்களை கடன் கொடுத்துவிட்டு தூங்க சென்றுவிடுவார். அம்மா, நான் குளித்துவிட்டு வந்தபின், மதிய நேரத்தில் சேர்த்தே செய்துவிட்டிருந்த, குழம்பையும், கூட்டையும் நெய்யுடன் சேர்த்து போட்டு, நான் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருப்பாள். சகல விசாரிப்புகளும் அங்கேயே முடிந்து விடும். ஏனென்றால், அடுத்த இரண்டு நாட்கள், அவளின் தோட்டக் கதைகளை சொல்ல வேண்டும்.

ஒரு முறை, கருவேப்பிலை கதை சொன்னாள். இன்னொரு நாள், பக்கத்து வீட்டு கட்டுமானப்பணி நம் வீட்டு கொடி ஒன்றை சிதைத்ததை சொன்னாள். இன்னொரு நாள், நர்சரி சென்று சம்பங்கி செடி வாங்கி வந்து முகர்ந்து பார்த்ததில், அது தன் பால்யத்தை நினைவுபடுத்தியதை சொன்னாள். அம்மாவுக்கு அந்த தெருவில் பெயர் வைத்திருந்தனர். தோட்டாக்காரவுங்க. எது பிடிக்கிறதோ இல்லையோ, அம்மாவுக்கு இந்த பெயர் பிடித்திருந்தது. அப்படி ஒரு உலர்ந்த மனங்களின் மத்தியில், வெயில் நான்கு அடுக்குகளை தனக்குள் தைத்து தைத்து போர்த்தியிருந்த அந்த இடத்தில், அவளுக்கு மட்டும் ஈரமான அடைமொழி.

கருவேப்பிலை கதையை அடிக்கடி சொல்லச்சொல்லி கேட்பேன். சொல்லும்போதே அவள் வேறு ஒரு பெண்ணாகி இருப்பாள். சாராம்சம் என்னவோ, ரொம்ப சாதாரணம் தான். ஆனால், அவள் சொல்லும்போது வேறு மனுஷி ஆவாள். கதையின் முக்கிய அம்சமே, அம்மா செடி எப்படி பிள்ளைச்செடி முளைத்து வந்த அடுத்த நொடி, தன் உயிரை விட்டது என்பது தான். அந்த கருவேப்பிலை செடி, அவளுக்கே அம்மாத்தனத்தை சொல்லிக்கொடுத்தது என்றாள். இதை எப்படி கேட்டுக்கொள்வது என்று பல நாள் யோசித்ததுண்டு.

பல மாதங்கள் ஓடிப்போக, ஒரு வெள்ளி இரவில், அம்மாவிடம் அந்த கேள்வியை கேட்டுவிட்டேன். ஏன்மா, அந்த மணல் மேட்டை அப்படி வெறிச்சு பாத்துகிட்டே இருக்க. அப்பா வேற அத பத்தி ஒரு முறை காமெடியா பேசறாரு, இன்னொரு முறை, அத வெச்சே உன்ன திட்டறாரு. என்னன்னு தான் சொல்லிடேன். நாளைக்கு சொல்றேன் என்றாள்.

அடுத்த நாளின் இட்லி, தோசைகளை முடித்துவிட்டு, முதல் வேலையாக அம்மாவை அந்த இடத்துக்கு இழுத்துக்கொண்டு போய், இப்போ சொல்லு என்றேன்.

அங்க பாத்தியா?

ஆமா, பாக்கறேன். ஒன்னும் பெருசா இல்லையே.

நீ மண்ணை பாக்கற, ஆனா நான், அதுக்கு கீழ இருக்குற உயிரை பாக்கறேன். அது என்னவோ ஒவ்வொரு நாளும் ஒரே விஷயத்தை, மாத்தி மாத்தி சொல்லிகிட்டே இருக்கு. அத புரிஞ்சிக்கற மனநிலை எப்போ வரும்னு யோசிக்கிறப்பயே பல நிமிஷங்கள் ஓடிப்போயிடுது.

கீழ என்ன இருக்கு? பக்கத்து செடிகளோட வேரெல்லாம் இருக்கும். அதுல என்ன இருக்கு?

அங்க மட்டும் தான், ஒரு மண்புழு கோட்டையே கட்டிவெச்சிருக்கு.

மண்புழு கோட்டையா? அது என்ன, எறும்பு கூட்டமா, நீ சொல்ற மாதிரி செய்ய? அதுக்கு வீடு கூட இல்ல.

வீடு இருக்குடா.. எறும்பு போலவே.

நீ பாத்தியா?

ஆமா, பாத்திருக்கேன். எல்லாரும் தான் பாக்கறோம். அத வீடா நாம எடுத்துக்குறதில்ல.

நீ சொல்லு, நான் எடுத்துக்குறதா வேணாமான்னு சொல்றேன்.

அதோட வீடு வேர் தான்.

வேர் எப்படி வீடாகும்?

பல வருஷங்களுக்கு முன்னாடி, இந்த செடி எல்லாம் வெச்ச தருணத்துல, மண்ணெல்லாம் நோண்டினப்போ, இந்த ஒரு இடத்துல மட்டும், அவ்ளோ மண்புழு. ஏதோ பல யுகங்களா அதுக்கான ஒரு தேடலை தேடிகிட்டு இருக்குற மாதிரி. இதுக்கும் அந்த நேரத்துல இங்க வெறும் புல்லு கூட பெருசா இல்ல. அப்படி ஒரு இடத்துல, ஈரப்பதம் இல்லாத நேரத்துல, மண்புழு இருந்திருக்க வாய்ப்பே இல்ல. அந்த கூட்டமே கொஞ்சம் மெலிஞ்சு தான் போயிருந்தது. சரி, அத நான் பெருசா எடுத்துக்கல. செடி எல்லாம் வெச்சிருந்தோம். அதுக்கு செய்யற வேலை எல்லாம் செஞ்சிட்டு இருக்கும்போது தான் புரிஞ்சது.

என்னன்னு?

ஒவ்வொரு மண்புழுவும் அதுக்கான வேரை தேடிபுடிச்சு அங்க மட்டுமே இருந்தது.

இதுல என்ன அதிசயம்?

அதிசயம் இல்ல. ஆனா, வேர் பிடிக்கிறதுல இருந்த ஆவேசம். இத்தனை கால தவம். எதுக்காக, ஏன், எப்படி, நிலையில்லாத தன்மைன்னு இருந்தபோதும், என்னைக்கோ ஒரு நாள் நான் வருவேன், விதை போடுவேன், அதோட வேர் பூமி முழுசா பரவும், அதுல ஒரு வேர்க்கற்றையை தனக்கானதா மாத்திக்கணும்னு இருந்திருக்கு.

நீ சொல்றது எல்லாம் சாதாரண விஷயம் தானேம்மா.

இல்ல டா. இயற்கையிலே எப்பவுமே ஒரு பாண்டித்தியத்தன்மை இருக்கும். அது அதுவா இருக்குறது மட்டும் இல்ல. நான் சொல்லித்தரேன், நீ கத்துக்கோ அப்படின்னு காலகாலமா சொல்லுது இல்ல. அதுல நான் என்னமோ, எனக்கு நெறைய சொல்லித்தர மாதிரியும், அது சொன்னதை எல்லாம் கேக்குற மொதல் பெஞ்ச் பொண்ணு மாதிரியும் எனக்கு தோணுச்சு. அதுக்குப்பின்ன, என்ன நான் சொன்னதை கேட்டியா, அடுத்து என்ன வேணும்? நான் சொல்லித்தறேன்னு, சொல்லும்.

அம்மா, நீ அப்பா சொல்ற மாதிரி, கொஞ்சம் ரொம்பவே இதை எல்லாம் யோசிச்சிருக்க. இது ஒரு தோட்டம், உனக்கு சந்தோஷத்தை குடுக்குது. நீ என்னை வளர்த்த மாதிரி, அத  இப்போ வளர்த்துட்டு வர. அப்படி சிம்பிளா முடிச்சிக்கயேன்.

அப்படி எல்லாம் முடியாது. அதோட இறுக்கம், ஒவ்வொரு வேர் மேலயும் இருக்குற மையல், அது இல்லாம அந்த வேர் வளராதுன்னு ஒரு நம்பிக்கையோட கூடவே சேர்ந்திருக்கிற அன்பு, இதெல்லாம் எனக்கு என்ன சொல்லும் தெரியுமா. இதெல்லாம் நீ தான், நான் இல்ல, அப்படின்னு சொல்லும்.

நீ இப்படி எல்லாம் பேசாம, ஒழுங்கா உக்காந்து சீரியல் பாரு. இல்ல, நியூஸ் பேப்பர் படி.

சரி சரி, மதியம் ஆயிருச்சு, சாப்பிடலாம்.

பல மாதங்கள் கழிய, ஒரு நாள், அம்மா தனக்கான உத்தரவை வாங்கிக்கொண்டாள்.

அம்மா கேட்டுக்கொண்ட வரத்தை நான் நிறைவேற்றும் தருணமும் வந்துவிட்டது. அப்பா முதற்கொண்டு, எவருக்கும் இது நடக்கின்ற சாத்தியம் இல்லை. வேண்டாம் என்றனர். இது தேவை இல்லாமல், உனக்கு தலைவலி மட்டுமல்ல, சட்டசிக்கலில் கொண்டு போய் விடும் என்றனர்.

கேட்க நேரம் இருந்தாலும், அவளுக்காக இதை செய்யாமலிருந்தால் எப்படி.

அம்மா, தோட்டத்திலேயே அடைக்கலம் ஆனாள்.

தோண்ட தோண்ட வந்த புழுக்கள், அம்மா உள்செல்ல காத்திருந்தன. அவள் உள்செல்ல, இவைகளும் பின்சென்றன. அம்மா பேசினாள், தாத்தா எப்படி இருக்கீங்க.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...