Thursday, February 06, 2020

மிச்சிகன் வேள்பாரி

அப்பாடா என்றிருந்தது. நினைப்பில் கூட வந்ததில்லை, என் பெயர் ஒரு  படைப்பில் வந்து போகும் என்று. மூளையை அடித்து துவைத்த சம்பவம் கடந்த 5 மாதங்களில் நடந்தேறியது.

புத்தகங்களுடன் மட்டுமே இருந்த வாழ்க்கை, 2008 முதல் அகலப்பட்டு போனது. புத்தங்களையும், வார்த்தைகளையும், தமிழையும் என் இரண்டு பெண் மக்கள் மொத்தமாய் குத்தகைக்கு கொண்டு சென்றார்கள். இலக்கிய வாசகனாகியது போதுமென்று, நானும் டையாப்பர் மாற்றியும், பள்ளிக்கு அனுப்பியும் இலக்கியத்திற்கு பிரிந்த விடை கொடுத்திருந்தேன். பத்து வருடம் முடிந்த கணத்தில் எல்லாம் மாறியது. என் புத்தக அலமாரியை கண்ட நண்பர், நீங்கள் ஒரு குழுவில் கண்டிப்பாய் இணைய வேண்டும் என்கிறார். இணைத்தும் விட்டார். அனைத்தும் மாறியது. காகித ஸ்பரிசம் மறுபடியும். இம்முறை மிக வேகமாக. 10 வருட பசியை தீர்க்க, புத்தகங்கள் வாங்கி குவித்தேன். ஆனால் மொத்தமாய் மறந்தது, இன்னும் குடும்பஸ்தன் என்பதை. ஒரு புத்தகம் படிக்க நினைக்க 1 மாதம். அதே புத்தகத்தின் முதல் பக்கம் புரட்ட 2 மாதம். அதை முடிக்க 36 மாதம் என பல அரசியல் சிக்கல்கள். ஆனாலும், குழு எனக்கு அளித்த உத்வேகம் இதுவரை கண்டிறாதது. கூடும் போதெல்லாம், 10 வருடத்திற்கு முன் மறந்த அத்தனையையும் ஆசையாய் அசை போட யாரோ ஒருவர் கிடைத்தனர். அப்போது சக ஆர்வலரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன், எனக்கு கதை படிக்க பிடிக்கும், அதை பற்றி பேச மிகவும் பிடிக்கும், கதை எழுத அறவே பிடிக்காது, ஆனால், காதலோடு செய்ய காத்திருப்பது திரைக்கதை எழுதுவது. காதலி கிடைக்கவில்லை என்று ஆதங்கத்தில் இருப்பதாய் சொல்லியிருந்தேன்.

செவி வழி செய்தி, நிற்க வேண்டிய இடத்தில் நிற்க, வந்தது, வேள்பாரி நாடகத்தை மேடைக்காக எழுதும் பணி. காதலி இப்போது காதின் பின் ரீங்காரம் இட்டுக்கொண்டிருந்தாள். பின் என்ன, காதலி கிடைத்த மோகம், குடும்பம் காத தூரத்தில் விடப்பட்டது (அதற்கான பாவகணக்கை இப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறேன்). முதலில் நான் செய்ய ஒப்புக்கொண்டது, வசனம் எழுதுவது. இரண்டு காட்சிகளுக்கு எழுதினேன். அதோடு நிற்கும், அதற்கு மேல் இவனையெல்லாம் சேர்த்துக்கொண்டால், ஒன்றும் எடுபடாது என்று நினைப்பார்கள் என நினைத்தேன். ஆனால், நேர்மாறாக, அத்தனை காட்சிகளையும் மேடைக்காக திருத்தி எழுதும் பணி  வந்தது. காதலி, இப்போது கண் முன் வந்தாள். கவிதை வடிக்கலாம், காதல் வடிக்கலாம். இரவெல்லாம் உட்கார்ந்து உட்கார்ந்து, காதலி கண் முன் மேடைக்காக வடிவெடுத்தாள். என்னுடன் தலைமை இயக்குனரும் இருந்ததை சொல்லாவிட்டால், காதலி கோவித்துக்கொள்வாள். அவர் தலைமை, நான் தொண்டு புரிந்தேன். காதலி எங்கிருந்தாள், யாருடன் இருந்தாள் என்றெல்லாம் கேள்வி வந்தால் நான் பொறுப்பில்லை.

திருத்தங்கள் முடிவடைந்தது. இப்போது மேடை நடிகர்கள் தேர்ந்தெடுக்கும் பணி. பின்னிருந்து மட்டுமே இயங்கலாம் என நினைத்தவனுக்கு பொங்கல் வைக்கலாம் என நினைத்தார் தலைமை இயக்குனர். என்னையும் நடிக்க சொன்னார். நான் வேண்டாமென மறுத்தேன். நாடகத்திற்காக ஆட்கள் தேவை என கேட்டபோது, நான் அனைத்து துறைகளிலும் உதவி செய்கிறேன் என சொன்னேன். ஒரு துறையில் மட்டும் உதவி செய்ய மாட்டேன் என சொல்லி இருந்தேன். ஆட்கள் இல்லாத நிலைமை, மேடையில் என் முகமும் இருந்தே ஆக வேண்டிய அவல நிலை. காதலி கொஞ்சம் முகம் சுழித்தாள்.

மனைவியாரும், குழந்தையாரும் என்னை வேள்பாரியின் அரண்மனை காவலாளி என்றெண்ணி, என்னை துன்புறுத்தாமல் என் சேவையை பாரிக்கு செய்ய பணித்தார்கள் (பின் நடந்ததெல்லாம், ஒரு வலைப்பின்னலில் அடங்காது). திரை அலங்காரத்தில் சேர்ந்தேன். காதலி கொஞ்சம் கொஞ்சமாய் கொஞ்ச ஆரம்பித்தாள். அவளின் அரங்கேற்றத்திற்கு அவளே ஏங்கினாள்.

நடிகர்கள், பாத்திரங்கள் ஆனார்கள். ஒத்திகைகள் ஒத்தி வைக்காமல் நடந்தது. பனி விடாமல் பெய்யவில்லை. பாரிக்காக காத்திருந்தது.

இயக்குனரின் ஒரு இந்திய பயணத்தில் பாத்திரங்கள் அனைவரையும் நாயக நாயகிகளாக மாற்றும் உடை அணிகலன்கள் வந்தது.

ஒலிக்கோர்வை சேர்ந்தது. பாடல்கள்  பாடப்பட்டு, இசைக்கப்பட்டு, முழு இசையானது. மொத்தமாக ஒன்றரை மணி நேர கோர்வையும் ஒரு .WAV ஆனது.

நாளும் வந்தது. வேள்பாரி கண் முன் பிரமாண்டமாய்  நின்றான். அவன் மக்களை அரவணைத்தான். அரவணைத்த மக்களை அச்சுறுத்தும் மூன்று வேந்தர்களை, ஓடி ஓடி, ஓட ஓட விரட்டினான்.

நினைத்தது நடந்தது. காதலி அரங்கேறினாள். மொத்தமாய் காத்திருந்த பனி, கொட்டி தீர்த்தது.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...