Wednesday, July 01, 2020

தீ

அந்த ஒரு இரவில் சாம்பசிவம் அந்த கேள்வியை ஆசானிடம் கேட்டே விட்டார். ஏன் இப்படி மாறிவிட்டீர்கள்? நாமெல்லாம் இப்படி செய்யக்கூடியவர்கள் இல்லையே என்றெல்லாம் கேட்டு துளைத்துவிட்டார்.

ஆசானுக்கு ஒரு நற்பழக்கம் உண்டு. கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு புன்முறுவல் பூப்பார். கேள்வி கேட்டவர்கள் தலையில் அடித்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். கேள்வி கேட்ட என்னை சொல்லணும் என்பார்கள். இந்த மனுஷனுக்கு பதில் நாக்குல இல்ல, உதட்டுலயும் பல்லுலயும் தான் இருக்கு. என்ன ஒரு நெஞ்சழுத்தம் என்பார்கள். அவருக்கோ, இந்த பதில் போதும் என்றே நினைக்கிறார். மனதிற்குள் கேள்வியை ஏற்று, தனக்கான தர்க்கத்தை நிரப்பி, பின் பதில் ஒன்றை திரும்ப அனுப்பி, அதற்கு எதிர் மனிதன் என்ன கேள்வியை கேட்டு தொலைப்பானோ என யோசிப்பதற்குள் தான் பாதி ஆயுள் தீர்ந்து விடும் என நினைப்பார்.

ஆசான், வட தமிழகத்தின் தலை சிறந்த கல்யாண பந்தி நிபுணர். இவரிடம் கான்டராக்ட் விட்டுவிட்டால் போதும், கல்யாணம் தொடங்கி தொட்டில் தொட்டு தகனம் வரை சுவை நிற்கும்படி செய்துவிடுவார். போகும் வழியில் புண்ணியம் சேர்த்துக்கொண்டு போ என்பார்கள், அந்த புண்ணியத்தை சமைக்கும் வித்தகர் இவர்தானாம் என்று எங்கள் ஊர் பாட்டிகள் சொல்லி கேள்வி.

ஆசானுக்கு வித்தை எல்லாம் கைப்பக்குவத்தில் இல்லை, நாக்குக்கு ஏற்ப சமைப்பதில் தான் இருக்கிறது. அதற்கு அவர் உபயோகிக்கும் உத்தியை சார்க் நாடுகள் நான்கு நாட்கள் கருத்தரங்கு போட்டு விவாதிக்கலாம். கல்யாண கோஷ்டி அவர் வீட்டு வாசலில் நின்றாலே, அவர் கேட்கும் கேள்விகள் வந்தவர்களை உலுக்கிவிடும். என்ன இந்த மனிதன் என்ன சமைக்கவேண்டும் என்று கேட்காமல், கண்ட கருமாந்திரம் எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று காதுக்கு பக்கத்தில் வசனம் பேசிக்கொள்வார்கள். இத்தனைக்கும் இவர் கேட்கும் கேள்விகள் எல்லாம் திரும்ப திரும்ப கேட்பவையே, ஆனாலும், இப்படி சொல்லிக்கொள்வதில் ஒவ்வொருவருக்கும் ஆனந்தம்.

கேட்ட கேள்விகள் தான் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? சொல்லாமலா போவேன். அதற்குத்தான் உங்களை ஐந்தாவது பத்தி வரை இழுத்து வந்திருக்கிறேன்.

முதல் கேள்வி, பெண்ணுக்கும் மாமியாருக்கும் பூர்வீகம் என்ன?

இரண்டாவது கேள்வி, தேன்நிலவிற்கு எங்கே செல்கிறார்கள்?

மூன்றாவது கேள்வி, எத்தனை நாள் செல்கிறார்கள்?

நான்காவது கேள்வி, இது நாள் வரை குடும்ப சூழ்நிலையில் எத்தனை முறை அகால மரணங்கள் நிகழ்ந்துள்ளன?

ஐந்தாவது கேள்வி, கல்யாணம் நடக்கும் நாளின் தட்பவெப்பநிலை?

இதெல்லாம் எதற்கு என கேட்டால், கதவை காட்டி புன்முறுவல் பூப்பார். சரி சொல்லித்தொலையலாம் என்று தொலைப்பார்கள். சாம்பசிவம் அப்போதெல்லாம், ஏன் இதெல்லாம் கேட்கிறீர்கள் என கேட்டதில்லை. ஆனால், ஒவ்வொரு கல்யாணத்திற்கும் ஒவ்வொரு முறையை கைப்பிடிப்பார். மார்க்கெட்டுக்கு சென்றாலே, சாம்பசிவத்தை பார்த்து மளிகைக்கடைக்கார்களும், காய்கறி கடை காரர்களும் வாய்க்கும் வானத்திற்கும் சிரிப்பார்கள்.

வாப்பா, உனக்கென்ன ஆசான் கிட்ட வேலை!!! அவர் செய்யறதும் புரியாது, சொல்ல நினைக்கிறதும் புரியாது, உனக்கு மட்டும் எப்படி புரியுதோ?

எனக்கு புரிஞ்சதுன்னு என்னைக்காச்சும் சொல்லி இருக்கேனா? இதான் லிஸ்ட். குடுக்கற வேலைய மட்டும் பாரு. மத்த கேள்வி எல்லாம் கேக்காத.

உங்க ஆசான் ஒரு முறை, சைனால கிடைக்கிற ஒரு மிளகாயை கேட்டு வெச்சிருந்தார். கேட்டா, அதுவும் கல்யாணத்துக்குன்னு ஒரு பதில் இன்னொருத்தர் கிட்ட இருந்து வந்தது. கல்யாணமோ நம்ம அரக்கோணத்து ஜவுளிக்கடை ஆளுங்களுக்கு. அவங்களுக்கு எல்லாம், ஆந்திரா மிளகாயே பெருசு, இவரு இதுல சைனா மொளகாயை வெச்சு கல்யாண சாப்பாடு செஞ்சாரு... குழப்ப சமையல்யா உங்க ஆசானுக்கு.

ஒன்றும் பதில் சொல்லாமல் நடையை கட்டிக்கொண்டு சென்றுவிட்டார். அன்றைய லிஸ்டில் தக்காளி விதைகளை மட்டும் கிலோ கணக்கில் வாங்கி வர சொல்லி இருந்தார். அதெல்லாம் விவசாயி வாங்குறது என்று கேட்டால், மறுபடியும் புன்முறுவல் தான் வரும்.

எப்படியோ, எல்லா கல்யாணங்களையும் பார்த்தாகி விட்டது. ஆசானுக்கு இப்போதெல்லாம் கேள்வி கேட்பதும் அலுத்து விட்டது, புகை மூட்டமான கல்யாண மண்டப சமையல் அறைகளும் அலுத்து விட்டது. பெரும்பாலும் எந்த கல்யாணங்களையும் ஒத்துக்கொள்ளவில்லை. வீட்டுக்குள்ளேயே முனங்கி இருந்தார்.

அந்த ஒரு நாள், மறுபடியும் என்னை தொலைபேசியில் அழைத்தார்.

சாம்பு, மறுபடியும் தொழிலை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.

என்ன ஆசானே? என்ன ஆச்சு. உங்களால முடியுமா?

மறுமுனையில் புன்முறுவல் பூத்திருப்பார்.

முடியும். நீ வாயேன், பேசலாம் என்றார்.

வீட்டிற்கு சென்று பேசியபோது தான் பெரிய அதிர்ச்சியை தூக்கிப்போட்டார். அவரின் முடிவு, இனிமேல் சாவு வீடுகளுக்கு சமைப்பது என்கிறார். அங்கே மட்டும் தான் சமைப்பேன் என்கிறார்.

அப்போது தான் கேட்டேன், என் கேள்விகள் அவரின் பதில்களை துழாவி, புன்முறுவலை அகத்தே தள்ளி, என்னிடம் பறந்து வந்தது.

ஏன் செய்யக்கூடாதா?

செய்யலாம் ஆசானே, ஆனா, நமக்கு அது பழக்கமில்லையே? நம்ம குருவம்சத்துலயும் இப்படி செஞ்சதா எனக்கு நியாபகம் இல்லையே.

குரு வம்சம் எல்லாம் சும்மா பேச்சுக்கு தாண்டா. அது உனக்கு சொல்லிக்கொடுக்குறது, எப்படி சமைக்கணும் அப்படிங்கறது மட்டும் தான். எங்க சமைக்கணும், எதுக்கு சமைக்கணும்னு எல்லாம் ஒன்னும் சொல்லலை. அதெல்லாம், நடுவுல வந்த குரு அப்படின்ற பேருல பல பேர் விளையாடின சூதாட்டம். அதுல அவனுக்கு மட்டுமே வெற்றி.

சரி, கேள்வியை இப்படி கேக்கறேன். மங்கள நிகழ்ச்சிக்கு தானே, தடல்புடலா சமையல் எல்லாம். கூட்டம் கூட்டமா வருவாங்க, மனசு நிறையனும். அதுக்கு முதல் படி, நாக்கு நிறையனும். மண்டப வாசல்ல இருக்குற ரோஜா கூட்டத்தோட வாசத்தை தாண்டி, மூக்கை துளைக்கிற காபி வாடை தானே அவங்களோட மனச நிறைக்குது. அதுக்கு மேல காலையில கிச்சடி, பூரி, தோசை, இட்லி, பொங்கல், வடை, பாயசம் அது இதுன்னு போட்டு அவங்கள சூறையாடினா தானே நமக்கு செஞ்ச திருப்தி கிடைக்கும்.

அவங்களுக்கு திருப்தி இருந்ததான்னு நீ கேட்டிருக்கியா?

ஆமா, எத்தனை பேர் சொல்லி இருக்காங்க... உங்களுக்கு நியாபகம் இல்லியா? பத்து வருஷத்துக்கு முன்னாடி ஆற்காடுல நடந்த  கல்யாணத்துல, ஒரு குடும்பமே வந்து உங்க கால்ல விழுந்து, இன்னைக்கு எங்க எல்லாருக்கும் கடவுளை மனசுக்குள்ள காமிச்சிட்ட. நீ உருவாக்கின ருசி, எங்க பாட்டன் பூட்டன் எங்க மனசுக்குள்ள தூவி வெச்சிருந்த ருசி. இது வரைக்கும் எங்க பரம்பரை யாருக்கும் அதை தோண்டி எடுத்து திரும்ப அனுபவிக்க முடியல. அப்படி ஒரு ருசி யாருக்கும் கைவரல. உனக்கு வந்திருச்சேய்யா. நீயெல்லாம் பல குடிக்கு அரசனா இருக்க வேண்டியவன், அப்படின்னு சொன்னது இன்னைக்கு எனக்கு நியாபகம் வருது.

அதே குடும்பத்தை இன்னைக்கு போய் கேட்டுப்பாரு. அதையே திரும்ப சொல்லுவான். ஆனா, அவனோட குடும்பத்துல நடந்த ஒரு துர்மரணத்தை பத்தி கேட்டுப்பாரு, பேசக்கூட மாட்டான். ஏன்னா அது மனசோட வலி. அந்த வலி இவனை ஒரு வார்த்தை கூட எடுக்க விடாது. அப்படியே போட்டு அழுத்தும். எத்தனை வருஷம் ஆனாலும் அப்படியே இருக்கும், மலைக்கு உள்ள இருக்குற யாருக்கும் தெரியாத கல்லு மாதிரி.

ஆமா, அது இருக்கத்தானே செய்யும்...

அந்த மரணத்தோட அவன் அன்னைக்கு பக்கத்துல இருந்தானே, அப்போ என்ன சாப்பிட்டு இருப்பான்?

அதெல்லாம் நியாபகமா இருக்கும். அப்போ அது முக்கியம் இல்லையே.

ஆமா, அது முக்கியம் இல்ல. ஆனா, அதை முக்கியமா ஆக்கிப்பாரு. இவன் அந்த மரணத்தை இந்த ருசியோட சேர்த்து வெச்சு பாப்பான். வலியோட ருசியும் சேரும் போது, உன்னோட உடம்புல மீட்டாத அந்த நரம்பு மீட்டி இருப்ப... அது ஒன்னும் இவனை சிரிக்க வைக்காது. ஆனா கொஞ்சம் ஆத்துப்படுத்தி இருக்கும்.

அது அவ்வளவு முக்கியமா? சாவு வீட்டுக்கு வந்தவங்களுக்கு எதுக்கு ருசி. பாதி பேருக்கு மேல சாப்பிடாம தான் இருப்பாங்க..

நீ கவனிச்சது அவ்வளவு தான். ஒவ்வொரு சாவுக்கு பின்னாடியும், பல வேலைகள் உருவாகுது. அதுல முதல் வேலை, வீட்டுக்கு வர்றவங்கள எப்படி கவனிக்கிறது. வர்றவன் கல்யாணத்துல சுவாசிச்ச அந்த ரோஜாப்பூவை சுவாசிக்க மாட்டான். பிணத்தோட மேல படர ரோஜா வாசத்தை தான் சுவாசிப்பான். அது அவனை முறுக்கும். அவனை எப்படி கவனிக்க முடியும்?

எதுக்கு கவனிக்கணும்?

எதோ ஒரு சோகத்துல ஒருத்தர் உங்க வீட்டுக்கு வர்றார், அவரை நீ ஒரு காப்பி குடுத்து ஆசுவாசப்படுத்த மாட்ட? அது தான் இது. அந்த ஆசுவாசம் தான் இந்த ருசி.

என்னமோ போங்க. இது ஒன்னும் சரிப்பட்டு வர்ற மாதிரி எனக்கு தெரியல.

சரிப்படும் சாம்பு... கல்யாணத்துல வாடுற வயிறை விட, சாவு வீட்டுல வாடுற வயித்துக்கு வெப்பம் அதிகம். தகிக்கும். வெளியில சொல்லாது. சொல்லாம தன்னையே அரிச்சு சாப்பிடும். அத்தோட கோரப்பல்லால குடலை உரிச்சு தின்னும். உள்ள ரத்தம் சிந்தும். ஆனா, வெளிய அதை விட ஒரு சோகம் பரவலா இருக்கும். அதுக்கு தான் மனசையும் உடம்பையும் கொடுக்கணும்னு நமக்கு எழுதி வெச்சிருக்கு. அதை நான் தீத்து வைக்கிறேன்னு சொல்றேன்.

எத்தனை பேருக்கு தீத்து வைப்பீங்க...

நான் தீந்து போற வரைக்கும், தீத்து வைப்பேன்.


சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...