Saturday, June 13, 2020

கருப்பு

இந்த இரவிற்கு தனிப்பெயர் இருந்தது
பெயருக்கேற்ற அழகு
அட்டைக்கரி நிறம்
அள்ள அள்ள அன்பை
தொப்பை நிறைய வைத்திருந்தது
மெல்லிய இசையையும்
கசிந்து கொண்டிருந்தது
கதவுகளைத் தாண்டி
தூங்கும் ஒவ்வொருவரையும்
எழுப்ப முயன்றுகொண்டிருந்தது
சிலர் எழுந்தனர்
கழிவறை சென்றனர்
சிலர் எழவில்லை
அவர்களுக்கு இரவின்
கரிநிறம் பிடிப்பதில்லை
சிலர் கனவுக்குள் பகலை
வரைந்து கொண்டிருந்தனர்
ஒருவன் மட்டும் இப்படி
அல்லாடிக் கொண்டிருந்த
இரவின் ஓட்டத்தை
ரசித்துக்கொண்டிருந்தான்
மூச்சிரைத்தபடி இவனிடம்
கேட்டது
என்னை இப்படி குறுகுறுவென பார்க்காதே!!
நான் வெட்கி பகலாகிவிடுவேன்..
நீ என்னவானாலும் ஆகிப்போ,
ஆனால் நீதான் அன்றொரு நாள்
என் கண்ணீரை வரவழைத்தாய்
முதன்முதல் அழுதேன்!!
உன் கருப்பு நிர்வாணம்
எனக்கான கனத்த ஆடை....

Tuesday, June 09, 2020

நினை

மதிய வெயில் மண்டையை பிளந்தது
வட துருவத்தை நினைத்துக்கொண்டேன்
நாக்கு வறண்டு போனது
மீனை நினைத்துக்கொண்டேன்
தலை சுற்றியது
திருவிழா என்னுள் வந்தது
கண் இருட்டியது
வானத்தை வாங்கிக்கொண்டேன்
நினைவு தப்பித்தது
தொட்டில் பிள்ளை ஆகிக்கொண்டேன்
இதயம் நின்று கொள்ளவா எனக்கேட்டது
இரு,
அம்மாவை நினைத்துக்கொள்கிறேன்

உதிர்

உதிர்த்துப்போடு என்றான்
எதற்கு என்றேன்
அப்போது தான் உன்னை நீ
உணர முடியும்
சரி, உதிர்த்தேன்
என்னுள் இருந்த குழந்தை
உதிர்ந்தது
ஒரு ஆடவன் உதிர்ந்தான்
பெண் உதிர்ந்தாள்
அடுத்து என்ன...
மாணவன்
பணியாளன்
பொதுப்பணித்துறை அதிகாரி
அப்பா
தாத்தா

முடிந்ததா என கேட்டான்
ஆம், முடிந்தது
இப்போது நீ யார் என்றான்
உன் சீடன் என்றேன்
அதையும் உதிர்த்துப்போடு என்றான்

உதிர்த்தேன்

இப்போது நீ யார் என்றான்
நீ என்றேன்

Monday, June 08, 2020

நீயாக்கப்பட்ட நான்

நான் எதுவாக ஆகக்கூடாது
என நினைத்தீர்களா
அதுவாகவே ஆனேன்..

நான் எதுவாக ஆகக்கூடாது
என நினைத்தேனோ
அதுவாகவே ஆனேன்..

Sunday, June 07, 2020

நொடி

ஒரு நாள் மன்னிப்பு கேட்பீர்கள்
அந்த நாளில்
நான் என்னையே உரித்துப்போட்டிருப்பேன்
என்னை பிய்த்து பிய்த்து
தோண்டி தெரிந்து கொள்வீர்கள்
அங்கொரு நாள்
உங்களை மன்னித்திருந்தேன்
இன்னொரு நாள்
உங்களுக்கு உதவியிருந்தேன்
மற்றுமொரு காலையில்
குட் மார்னிங் சொல்லியிருந்தேன்
ஏகாந்த மாலையில்
கண்ணிழந்த உங்களுக்கு
கைபிடித்து பூ இதழ்
காண்பித்தேன்
ஒரு நாள் பத்து மணி
பசித்திருந்தீர்கள்
நான் உணவிட்டிருந்தேன்
தேடிவிட்டீர்களா, அந்த நொடியை?
நீங்கள் என்னை உடைத்துப்போட்ட
அந்த மரண நொடியை?
இருந்தாலும் அந்த கேள்வியை
கேட்டிருக்க வேண்டாம்

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...