Friday, April 20, 2007

அந்த நாள்

வெயில் கசகசக்கும் மதியத்தை கடந்த மாலையில், சிலர் மட்டுமே கூடியிருந்த பார்ட்டி. கடமைக்காக சிலரும், டீ காபி போண்டாவுக்காக சிலரும், வருத்ததுடன் சிலரும், சந்தோஷத்துடன் சிலரும் உலாத்தி கொண்டிருந்தார்கள்.
இவர் மகிழ்ச்சியும் வருத்தமும் பயமும் கலந்து கட்டிய முகத்துடன் பேசிக் கொண்டே, பழைய நினைவுகளை அசை போட கூடாது என்றே தன்னை எதாவது ஒரு விஷயத்தில் நுழைத்துகொண்டபடியே நேரத்தை கடத்திக்கொண்டிருந்தார்.
என்ன சார், நாளையில இருந்து என்ன பண்றதா உத்தேசம். காலம் காலமா எல்லாரும் பண்றா மாதிரி காலையில பால் பாக்கட், நியுஸ் பேப்பர், ரெகுலர் சாப்பாடு, சாயங்காலம் பார்க் பென்ச், இப்படித்தானா என்று கேட்டு விட்டு பதில் எதிர்பார்க்காமல் இடத்தை கலைத்தார்கள்.
பியூன் கூட்டணியும், டைப்பிஸ்ட் கூட்டணியும் வழிந்து கொண்டே, சார் நீங்க இல்லாம நாளையில இருந்து எப்படி சார் வேலை செய்வோம். அந்த ஆளு வேற உங்க சீட் கெடச்ச சந்தோஷத்துல தல கால் புரியாம ஆடறான். என்ன பண்ண போறோமோ. ஆனாலும் எப்படியாவது சமாளிச்சிடுவோம் சார். இன்னைக்கு பார்த்து எதாச்சும் செஞ்சீங்கன்னா, என்று நெளியவே, இந்தாங்க என்று சில ருபாய் நோட்டுகளை திணித்தார். நான் வரும்போதும் இதையே தான் முன்னவரிடம் சொல்லியிருப்பார்கள் என்பதெல்லாம் நினைக்கும் அளவுக்கு அன்று இல்லை அவர்.
ஜட்ஜ் வந்தது கொஞ்சம் தாமதம் என்றாலும், சம்பிரதாயத்துக்கு ஒரு காபி டம்ளர் மட்டும் எடுத்து கொண்டு, இவரிடம் அப்புறம் வேற என்ன சமாச்சாரம் என ஆரம்பித்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று சொல்லிவிட்டு, எடுத்த காபியை அப்படியே வைத்து விட்டு கிளம்பினார். மகனை கல்லூரியில் சேர்க்க இவரின் சிபாரிசில் பேங்க் லோன் வாங்கியதும் அவருக்கு நினைவில் வரவில்லை. சிடு சிடுவென திட்டிய தருணங்களும் நினைவில் வரவில்லை.
அப்புறம் நாளையில இருந்து நம்ம ஜோதியில கலந்துருங்க என்றார் சென்ற வருடம் ரிடையர் ஆன நண்பர். அவரின் பார்ட்டியில் கலந்து கொண்டு காபி குடித்த போன வருடம் நினைவுக்கு... வரவே இல்லை.
எல்லாம் முடிந்து, கசங்கிய மாலையை வீட்டுக்கு எடுத்து போகலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல், தேவையில்லாத குழப்பத்தில் தடுமாறிகொண்டே, கடைசியில் தூக்கி போட்டார். எப்போதும் டிவியெஸில் நேராக வீட்டுக்கு அடித்து விரட்டி செல்பவர், அன்றைக்கு ஏனோ ரோட்டுக்கு அப்பால் தள்ளிக்கொண்டே நடக்கிறார். சார் பார்த்து போங்க என்ற குரல் கேட்டு, ரோட்டின் மேல் வண்டியை தள்ளிகொண்டு வருவதை உணர்ந்து உடனே மறுபடியும் ஓரமாக வர, தன்னையும் அறியாமல் நுழைந்து கொண்ட கவலையை நொந்து கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
எப்போதும் பார்க்கும் விஷயங்கள், நாளை என்ற ஒரு கேள்வியை மட்டுமே கேட்கிறது. 35 வருட உழைப்பில் மனித வாழ்க்கையில் பார்க்க முடிகிற அத்தனையும் பார்த்திருந்தாலும், இந்த உணர்வை இதற்கு முன் சந்திக்காத ஒரு அன்னியம் அவரிடம்.
எழுதியுள்ள அனைத்தும் ஒரு கற்பனை மட்டுமே. வேலையில் இருந்து ஒய்வு என்பது எப்போதுமே சந்தோஷ நிகழ்வாக இல்லாத ஒரு சாதாரண அரசாங்க ஊழியரான அப்பாவின் ஒய்வு நாளை எதிர்கொள்ளபோகும் நேரத்தில் எழுதப்பட்ட பதிவு இது.

Thursday, April 19, 2007

மரிகொழுந்தே மதுர மல்லிகை பூவே..

இரு சேனல்களுக்கு இடையே நடந்த அப்பட்டமான மோதலை/போட்டியை காட்டிய நிகழ்ச்சி இது. அத்தனை சிக்கல்களையும் கொஞ்சம் மறந்து விட்டு பார்த்ததில் சிறிது லேசாகத்தான் இருந்தது. பல சமயம், மெல்லிய புன்னகை புரிய மட்டுமே சம்பவங்கள் இருக்கிறது. பக்கத்தில் இருப்பவர் அதிறும் அளவுக்கு சிரித்து பல நாளாகி விட்டது. இந்த நிகழ்ச்சியில் பலர் நாம் அப்படி மாற உத்திரவாதம் கொடுக்கிறார்கள்.




இந்த வடிவேல் கணேஷ் மற்றும் அவரின் நாட்டுபுற பாடலும் நிஜத்திலும் அசத்தல். கிண்டலும், கேலியும், பரிதாபமும் கலந்தே பல காமெடி இருக்கும் நேரத்தில், பாட்டாலும் நடனத்தாலும் (சில சங்கடபடுத்தினாலும்) நம்மை சில நிமிடங்கள் சிரிக்க வைக்கிறார். இப்படி ஒரு நாட்டுபுற பாடலை சமீபத்தில் கேட்ட ஞாபகம் இல்லவே இல்லை. இத்தனைக்கும் இது இவருடைய சொந்த சரக்கு. வடிவேலும் கூட ஜோதியில் ஐக்கியமாகிறார். கல்லூரி தினத்தில் மேடையில் இப்படி பாட, கீழே நம் இளவட்டங்கள் தப்பாட்டம் போடும் காட்சிகள் சட்டென சொடக்கிவிட்டு போனது.


...ஆமா ராசா ஆமா ராசா ஆமா ராசா...

Forward

எப்பொழுதும் forward மெயில்களை பார்த்து விட்டு delete செய்வது வழக்கம். இன்றைக்கு வந்த இந்த கவிதை (கவிதை நடையில் இல்லாவிட்டாலும்), அப்படியில்லாமல், இங்கே பதிய வேண்டும் என தோன்றியது.

கணிணி கனவாண்களே
கொஞ்சம் செவி கொடுங்கள்
இங்கே சில பேர் உங்களுக்காக
காத்து கொண்டிருக்கிறார்கள்.

இவன்(ள்) எங்க கிட்ட சிரிச்சு பேசியே பல நாளாகுது
உன் அப்பா, அம்மா இப்படி.
நாம பீச் எப்போ கடைசியா போனோம்னு மறந்தே போச்சு
உன் மனைவி.
அப்பா, நீ என் கூட வெளயாட வர வேண்டாம், என்க்கு சாதமாச்சும் ஊட்டி விடறயா
உன் மகனோ மகளோ

இத்தனையும் நீயாக இழந்ததா
இல்லை இழக்க பட்டதா?

கணிணி அதிகம் கலக்காத சில பேர் சொல்லுவதை கேள்.

தினமும் 8 மணி நேர கணிணி கலவி போதும்.
விட்டு விடுதலை பெறு, கணிணியும் இளைப்பாரட்டும்.
ஸ்மைலியில் மட்டுமே சிரிக்காமல்
உதடுகளில் சிரிப்பதை
உனக்குள் தேடியெடு.
யாகு மெஸஞ்சரில் காதல் செய்யாமல்
புல்வெளிகளில் காதல் செய்.
ஒரு முறையாவது இன்லேன்ட் லெட்டரில்
நண்பனுக்கு கடிதம் போடு.
ஈ-புக் தேடாமல்
பேப்பர் புக் தேடு.
கூகுள் துணையில்லாமல்
வேலை செய்ய பழகு.
மேட்ரிமோனியலில் ஜாதக பொருத்தம் பார்ப்பதை நிறுத்தி
உன் குடும்ப ஆஸ்தான ஜோஸியருக்கு கொஞ்சம் வேலை கொடு.
வெப் கேம் துணையில்லாமல்
நேரில் உன் துணையிடம் களி.
டவுன்லோட் செய்யாமல்
திரைபடம் பார்த்து பழகு.
வாரத்தில் ஒரு நாளாவது கணிணிக்கு
விரதம் அனுஷ்டித்து விடு.
வாழ்க்கை வெறுத்திருக்கும் உன் பக்கத்து வீட்டு
நூலகரை சந்தோஷபடுத்து.
மாதத்தில் ஒரு முறை
மளிகை கடைக்கு செல்
இன்டர் நெட்டில் ஆர்டர் செய்யாமல்.
கொஞ்சம் கொஞ்சமாக
இறந்து கொண்டிருக்கும்
செய்திதாள்களுக்கு உயிர் கொடு.
தினமும் ஒரு
பூ பார்த்து பழகு.
காலை சூரியனுக்கு
குட் மார்னிங் சொல்லி
கண் காத்து கொள்.
ஜிம்மில் மட்டும் உடல்வளைக்காமல்
சமையல் அறையில்
மனைவிக்கோ அம்மாவிற்கோ
பாத்திரம் கழுவி, காய் கறி வெட்டி கொடு.

இன்டர்நெட்டுக்கு அப்பால்
ஒரு நந்தவனம் பூத்து குலுங்குவது
தெரிய சாத்தியம் இல்லை தான்.

திருவிணையாக்குவது முயற்சி மட்டுமே
முயன்று பார்.

கணிணி நம் குழந்தைகள் விளையாடும் பலூன் போல
அளவாக ஊதி, அழகாக பாதுகாக்கலாம்.

பலவை உதைத்தாலும், சில விஷயங்கள் சரி தானோ?

Monday, April 16, 2007

Yuri Gagarin

யாரிது என்று சிலரை பற்றியே நமக்கு தெரிந்து கொள்ள தோன்றும். Google அவர்களுடைய லோகோவை ஏப்ரல் 12 அன்று இவருக்காக மாற்றியபோது, விக்கிபீடியா உதவியுடன் இவரை பற்றி தேடினேன்.

இப்போது சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் மராத்தான் ஒடி கொண்டிருப்பதை, அட இவ்வளவு தானா என நிறைய பேர் நினைப்பதில் ஆச்சரியமில்லை. சம்மருக்கு குளிர் பிரதேசங்களுக்கு போவதெல்லாம் அலுத்து விட்டது. நேராக வான்வெளிதான், இப்போதைய பணம் படைத்தவர்கள்.

1961, மனிதர்கள் பூமிக்கு அப்பால் என்ன என்பதை குறு குறுவென யோசித்து கொண்டிருந்த கால கட்டம். ரஷ்யா, சில மிருகங்களை அனுப்பி பரிசோதித்தது எல்லாம் போதும், அடுத்த கட்டம் மனிதன் தான் என முடிவெடுத்த வருடம். இவர், பூமியை தாண்டி எட்டி சென்று நம் உலக உருண்டையை, உருண்டையாக முதலில் பார்த்த முதல் மனிதன். சாதாரண மனிதன் கண்டம் விட்டு கண்டம் தாண்டினாலே ஜென்ம சாபல்யம் என்று நினைத்த காலத்தில், இவரை எல்லாம் ரஷ்யா தலை மேல் வைத்து கொண்டாடியது தவறே இல்லை. ஒரு ஊருக்கே இவர் பெயர், விண்வெளியின் கொலம்பஸ் என்ற பட்டம், இப்படி பல.
இந்த விஷயத்திற்கு பின் அலறி அடித்து கொண்டு மனிதனை விண்வெளிக்கென்ன, நிலாவுக்கே அனுப்புவோம் என கங்கனம் கட்டி கொண்டதெல்லாம் சரித்திரதில் அழுத்தி எழுதபட்டது. ஆர்ம்ஸ்ட்ராங் முதல் காலடி தடமும், இவரின் முதல் பூமி தரிசனமும் மனிதனின் சாதனைகளில் ஆச்சரியமான முதல்கள்

When I orbited the Earth in a spaceship, I saw [for the first time?] how beautiful our planet is. Mankind, let us preserve and increase this beauty, and not destroy it!" - Yuri Gagarin

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...