Wednesday, December 31, 2008

2009

இந்த வருடமாவது தொடர்ந்து எழுத ஆசை. ஆனால் இதை புத்தாண்டு உறுதிமொழியாக எல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் நடக்கபோவதென்னவோ ஒன்று தான்.

கடந்த ஆண்டு, அப்பப்பா. பலத்த திருப்பங்களும், அதிரடி சண்டை காட்சிகளும் நிறைந்த படம் பார்த்த உணர்வு. 2008 தூவிவிட்ட சில கடின விதைகள் 2009ல் தான் முளைக்கவே போகின்றன என்று பல நிபுணர்கள் வேறு குறி சொல்கிறார்கள். அடுத்த வருடம் கரடுமுரடாக இருக்கபோவதென்னவோ நிஜம். தட்டுதடுமாறி விழாமல் இருந்தால் சரி, நாடாக இருந்தாலும், நாமாக இருந்தாலும்.

நாட்டுல ஏழை ஏழையாவே இருக்கான், பணக்காரன் பணக்காரனாகிட்டே வர்ரான். இப்படி ஒரு படத்தில் வசனம் வரும். இப்போதைய நிலை நிற்காமல் தொடர்ந்தால் அந்த வசனம் சீக்கிரமாகவே பொய்யாகும்.

என் வாழ்க்கையிலும் சில மாற்றங்கள். கல்யாணமாகிவிட்டது. எப்போதும் தெரியாத தக்காளி, வெங்காய விலைகளெல்லாம் இப்போது தெரிகிறது. கூடவே விம் பார் போட்டால் பாத்திரங்கள் பளிச்சென ஆகுமென்ற பிரம்ம ரகசியம் வேறு தெரிந்து தொலைத்திருக்கிறது. சில விஷயங்களை வாழ்க்கையில் ரொம்ப நாள் தள்ளி போட முடியாதென்பதென்னவோ உண்மை.

2008 களேபரங்களுக்கு நடுவே Global Warming கொஞ்சம் தூரமாக நிற்கவைக்கபட்டுள்ளது. இப்போதைய Global Recession எல்லாம் 1 வருடமோ 2 வருடமோ இல்லை குறைவாகவோ தன் கோர முகத்தை காட்டிவிட்டு நம்மையெல்லாம் பழைய பாதையில் விட்டுவிடும். ஆனால் GW, slow எமன். சீக்கிரமாக Global Recession முடித்துவிட்டு, நல்ல செய்திகளோடு தொடர 2009 முதல் புள்ளி வைக்கட்டும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Monday, June 30, 2008

WALL-E

Pixar studios எடுத்திருக்கும் அடுத்த படமிது.

2 வருடங்களுக்கு முன், நான் கலிபோர்னியாவில் இருந்த போது என் அலுவலகம் இருந்த இடம் Pixar studios இருந்த தெருவிற்கு இரண்டாவது தெரு. பஸ்ஸில் போகும் போதெல்லாம், Pixar அனிமேட்டர்கள் பயணம் செய்வது வழக்கம். அப்படி பயணம் செய்த ஒருவர் 2 வருடங்களுக்கு முன் சொன்ன விஷயம், ‘நாங்கள் இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் project பெயர் WALL-E'. கிட்டதட்ட எனக்கு தெரிந்தே 2 வருடங்களுக்கு மேல் உழைக்கபட்ட ஒரு படம்.

படம் ரிலீஸ் ஆன முதல் நாளே (கூட்ட நெரிசலில்லாமல்) பார்த்தேன். தமிழ் பட வாசனை குழைத்த ஒரு அமெரிக்க ஆங்கில (hollywood) படம். மனிதர்களில்லாமல், வரைபடங்கள் சினிமாவாக்கபட்டிருந்தது. புதிதொன்றுமில்லை. ஆனால், பழக்கபட்ட அனிமேஷனை எப்படியாவது ஜனரஞ்கமாக்கபடவேண்டிய அவசியம் இப்போது. முற்காலம் போல், வெறும் சின்ரல்லா வைத்து பிலிம் ஓட்டமுடியாத காலமிது. The Enchanted அப்படி ஒரு படம்தான். ஆனாலும், அதில் real-life vs animation-life வித்தியாசம் காண்பிக்கபட்டது.

Wall-E. கொஞ்சம் கூட குறை சொல்ல முடியாத ஒரு படம். வேண்டிய அளவுக்கு Hollywood மசாலா தெளிக்கபட்டு, ஒழுங்காக வார்த்தெடுக்கபட்டுள்ளது. சமீப காலமாக, சினிமா தீவிர ரசிகனாக இருந்த நானே, பல படங்களை பார்க்க போய் தூங்கி வழிந்தேன் (தசாவதாரம் உள்பட). Wall-E அந்த குறையை கொடுக்கவில்லை. முதல் முப்பது அல்லது நாற்பது நிமிடங்களில் இருந்த மெலிதான தொய்வை தவிர, படம் சரியான விர்ர்ர்ர்.

முதலில் ஒரு இயந்திரத்தை (Robot) பேச வைத்து, அதற்கு மனிதர்களுக்குண்டான பாவங்களை (காதல் கூட விடபடவில்லை) கொடுத்ததெல்லாம், சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தால், சின்ன பிள்ளைதனமாக கண்டிப்பாக படும். ஆனால் Pixar வரலாற்றை திரும்பி பார்த்தால், அதற்கு பலமான அஸ்திவாரம் போடபட்டுள்ளது தெரியும். இவர்களின் Toy Story, A Bugs Life, Monsters Inc., Finding Nemo, Cars, Ratatouille எல்லாமே பெரும்பாலும் மனிதர்கள் கம்மியாகவும், non-மனிதர்கள் அதிகமாகவும் வைக்கபட்ட படங்கள் தான். அதில் கைகொடுத்த வெற்றி formula தான் Wall-E.

இதில் (அப்பாவி)ஹீரோ இயந்திரத்தின் பெயர் தான் Wall-E (Waste Allocation Load Lifter Earth-Class). ஹீரோயின் இயந்திரத்தின் பெயர் Eve (Extraterrestrial Vegetation Evaluator). இவர்களுக்கிடையே காதல் மலர்ந்து, பல பல கோள்/வாண்வெளி இடையுறுகளுக்கு மத்தியில் ஒரு சின்ன செடியை (படத்தின் மிக முக்கியமான விஷயம் இந்த செடி. இதன் பின் இன்றைய கால பயங்கரம் கொஞ்சமாக சொல்லபட்டுள்ளது) பூமிக்கு கொண்டுவந்து சேர்க்கும் வேலையை ஜோடியாக செய்து முடிப்பது தான் கதை.

கதை ஒரு வரியாக இருந்தாலும், அதன் திரைக்கதை அசத்தலோ அசத்தல். பூமியில் துவங்கும் கதை, வான்வெளிக்கு பறந்து, அங்கே சில பல action block, romance block, comedy block எல்லாம் போட்டு, மறுபடியும் பூமிக்கே திரும்பி u-turn அடிக்கும் திரைக்கதை.

படத்தை பார்க்கும் போது, சில தமிழ் படங்களின் காட்சிகள் உங்கள் கண் முன் வர ஏகபட்ட சாத்தியங்கள் உண்டு. எனக்கு கண் முன் வந்தது, மூன்றாம் பிறை மற்றும் பல நூறு மசாலா படங்கள்.

Sunday, March 02, 2008

வாத்தியார்

கொஞ்ச நாளாய் தமிழ் தெரிந்தவர்களிடம் எல்லாம் ‘சுஜாதா இறந்துட்டாரே தெரியுமா' என்று கேட்டபடிக்கே இருந்தேன். சொன்னவர்கள் அத்தனை பேரும் சுஜாதாவை ஏதோ ஒரு ரூபத்தில் பரிச்சயபடுத்திக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் கரையெல்லாம் செண்பகப்பூ சொல்ல, இன்னொருவர் ரோபோ பற்றி சொல்ல, மற்றொறுவர் நகரம் பற்றி சொல்ல, எங்கும் பாரபட்சமில்லாமல் நிறைந்திருந்தார்.

எனக்கு முதன் முதலில் சுஜாதாவை அறிமுகபடுத்தியது, அப்பா. அப்போது வந்திருந்த ரத்தம் ஒரே நிறம் தொடர். வாரபத்திரிக்கையில் வந்த தொடரை எல்லாம் மொத்தமாக பைண்ட் செய்து வைத்திருந்தார். படிக்கும்போது கிட்டதட்ட 14 வயதிருக்கும். வெறும் ஆனந்த விகடன் படித்த நேரத்தில் முதல் நாவலாக படித்தது இந்த ரத்தம் ஒரே நிறம். அப்போதைய படித்ததின் மனநிலை இப்போதைக்கு நியாபகம் இல்லை. இருந்தாலும், அப்பாவின் TVS Champன் மீது உட்கார்ந்து கொண்டு ஆடிகொண்டே பல மணி நேரம் படித்தது நிழலாடுகிறது. சுஜாதா ஈர்ப்புவிசை அப்போது ஆரம்பித்தது. பிறகு நீண்ட காலம் தொடரவெல்லாம் இல்லை. ஆனால் சுஜாதா என்ற அறிமுகம் இருந்தது.

பிறகெல்லாம் எல்லாரும் போல நானும் கற்றதும் பெற்றதும், சீரங்கத்து தேவதைகள், சில சிறுகதைகள், சில நாவல்கள் படித்ததுண்டு.
எந்த வார்த்தையிலும் அல்லது படைப்பிலும் மிதமிஞ்சிய செண்டிமெண்ட் இருக்காது. எதையுமே maturedஆக பார்க்கும் ஒரு எழுத்து. இவரின் எழுத்துக்களில் பெரிதாய் மேதாவித்தனம் இருக்காது. ஆனால், அதை லேசாக தொட்டுவிட்டு போகும் பலம் இவருக்கு உண்டு.
வைரமுத்துவில் தொடங்கிய என் மெலிதான புத்தக பழக்கம், அடுத்ததாக நகர்ந்தது இவரின் பக்கம் தான். சுற்றி சுற்றி எல்லாரும் இவரையே பரிந்துரை செய்தால் வேறேன்ன செய்துவிட முடியும்.
ஓரளவுக்கு விபரம் தெரிந்த நேரத்தில் நான் படித்தது “ஆ” நாவல். இதன் ஆதாரம் எல்லாம் ஒரு சின்ன வியாதி. மூளைக்குள் நடக்கும் சில விஷயங்கள். ஒரு எழுத்தாளராக இவருக்கு அதில் இருந்த கதைக்களன் இது மட்டுமே. அதன் அறிவியலை விளக்காமல், கதையோடு கொஞ்சம் கொஞ்சமாய் ஒட்டி வெட்டி பரபரப்பு கூட்டி இருப்பார். அதன் பிறகு, இவரின் எந்த நாவலாக இருந்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் படித்திருக்கிறேன்.
கமல், அவரின் சுஜாதா இரங்கலில் சொல்லி இருந்த விஷயம் சத்தியமானதாக பட்டது. சினிமாவில் சுஜாதா, என்பது ஒரு சமரசம் மட்டுமே. எழுத்தில் இருந்த அத்தனை பட்டாசுகளும் திரையில் வெளிபட்டதாக எனக்கு தெரியவில்லை. சில படங்களை பார்த்த பின்பு, இது சுஜாதா என்று சொன்னபின்பே தெரிந்தது. இவருக்கான களம் இல்லை சினிமா, எனக்கு தெரிந்தவரை. அல்லது, இவருக்கு தீனி போடும் அளவுக்கு நம் சினிமா இன்னமும் நகர்ந்து விடவில்லை.
எழுத்தாளனுக்கு எப்போதும் தேவை கவனம். ஒவ்வொரு விஷயமும் கவனிக்கபட்டால் மட்டுமே எழுத்தாக்க முடியும். இந்த பதிவாளரின் சுஜாதா பற்றிய பதிவு அதை தெளிவாக சொல்லும்.
அவரின் உடல்நிலை சரியில்லாத விஷயத்தையே நகைச்சுவையாக சொன்ன மனிதர் இவர். ரொம்ப கஷ்டப்படாமல் சுவாசம் நிறுத்தி இருப்பார்.
மரணித்தவர்கள் ஒரே ஒரு முறை எழுத ஒரு வாய்ப்பு அமைக்கபட்டிருந்தால், இவருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கபட்டு எழுதப்படும் அந்த இரண்டு பக்க கட்டுரை படிக்க கண்டிப்பாக ஆவலாயிருப்பேன். இவரை விட மரணத்தையும் போகிற போக்கில் சொல்லிவிட யாராலும் முடியாது.

Thursday, January 03, 2008

ஆதி

(கொஞ்சமே (பெரிதாகிவிட்ட)சிறுகதை முயற்சி)
ஆடி மாதத்திலும் அந்த கல்யாண மண்டபம் களை கட்டியிருந்தது. கல்யாண களை தான். எல்லாம் ரகுவின் பிடிவாத தனத்தால். எப்போதும் பர பர குணம் அவன். சொல்வதை கேட்காத குணமும் சேர்ந்து கொண்டது. நல்லவிதமாய் NASAவில் (ரகு செல்லமாக Rug அமெரிக்காவில்) வேலை செய்வதால் அவன் அப்பாவும் இவனிடம் பெரிதாய் அலட்டிகொள்வதில்லை. ரகுவை அரட்டி புரட்டினால் எதிரில் இருப்பவர் நிலைமை பரிதாபம் தான். இப்போதைக்கு சஷ்டியப்த பூர்த்தி செய்யறதெல்லாம் பழசாகி போச்சு என்று சொல்லியும் கேட்காமல், அப்பா பிறந்த நாளிலேயே ஏற்பாடு செய்தான். அவன் சொன்ன காரணம் கொஞ்சமாய் பயமுறுத்தினாலும், இவன் நினைத்ததை யாரும் தடுத்தாட்கொள்ள முடியாத நிலை. கல்யாணமும் முடிந்திருக்கவில்லை. ரகு மெத்த படித்ததை நினைத்து இப்போது அப்பாவுக்கு கவலை. இல்லையென்றால் ஏதோ Nano technology, Energy technology என்று சொத்தை வேலையில் மிதமான சம்பளத்தில் காலம் தள்ளியிருப்பான். அதிகமாய் படித்து, அதிகமாய் வேலை செய்து நல்ல பெயர் வாங்கி, அமெரிக்க குடியுரிமை பெற்று, இப்போது Voyager Mars Programல் பணி.

60ம் கல்யாணம் அமோகம். ரகு பெரும்பாலும் 'நன்னா செஞ்சுட்டேள். உங்க அப்பா, அம்மாவுக்கு மனசெல்லாம் நெறஞ்சு போயிருக்கும். எனக்கும் தான் வந்து பொறந்திருக்கே ஒரு திராபை' போன்ற டயலாகுகளை கேட்டவாறே ஓடி ஓடி களைத்து போனான். நடுவில் மேடையில் பாடிகொண்டிருந்த பாடகர் வேறு, இவனை பாட அழைக்க, 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்' பாட்டை தப்பு தப்பாக முச்சிரைக்க பாடி விட்டு, மறுபடியும் வேகபடுத்தி வேலை செய்தான்.

ரகுவின் அப்பா இப்போது வழக்கம் போல கண்ணீருடன், போகாத இங்கயே இருந்துடேன். ரகு - இல்லப்பா, உங்களுக்கு தெரியும். Voyager சாதாரண விஷயமில்ல. எனக்கு பெருசா பேச நேரமில்ல. நான் Houston போய்ட்டு உங்கள கூப்பிடறேன். நான் டிசம்பர் 30 கெளம்பறேன். அப்பாவும் அம்மாவும் மறுபடியும் அவன் செய்ய போகும் பயணத்தை நினைத்து பார்க்க விரும்பவில்லை. இவர்கள் இருக்கும் வருடம் 2080. கலாச்சாரங்கள் பெரிதாய் மாறுபட்டுவிடவில்லை, எல்லோரும் எதிர்பார்த்தது போல்.

டிசம்பர் 30. ஆனமட்டும் உலக ஜனங்கள் எல்லோரும் அவர்களுடன் உள்ள தொலைகாட்சியை பார்த்து கொண்டிருந்தார்கள், ரகுவின் அப்பா அம்மா தவிர. காரணம் Voyager பல முறை Nasaவில் தோல்வி அடைந்த, கிடப்பில் போடபட்டு திரும்ப பல முறை எடுக்கபட்ட ஒரு முயற்சி. இந்த முறை கண்டிப்பாய் Marsல் கால் பதிக்கும் சாத்தியம் உண்டு. இதற்கு முன்னால் unmanned mission & animal based missionம் வெற்றி பெற்ற நம்பிக்கை. ஆனால் மொத்தமாய் 4 வருட கால ஆராய்ச்சி. ரகு பூமியின் இலக்கில் இருந்து பல தூரத்தில் இருக்க வேண்டிய கட்டாயம். 10 பேர் அடங்கிய கூட்டணி என்றாலும், போகும் இடம் Mars என்பதால் இத்தனை சிந்தனைகள்.

(பூமியில் இப்போது தேதி, டிசம்பர் 31 2081) ரகு இப்போது இருப்பது Mars. அலட்டிகொள்ளாமல் எல்லோரும் வேலையை பார்த்தார்கள். இவர்களின் ஆராய்ச்சி 5 பூமி மாதங்கள். மனிதனின் உடனடி தேவைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யபட்டு, கன கச்சிதமாக ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. ரகுவின் தேடல் உச்ச கட்ட நிலைக்கு போக, அவனின் ஆராய்ச்சி சொன்ன நிலையை தாண்டி போய்கொண்டிருந்தது. அவனின் ஒரே கோட்பாடு, Mars முன்பே மனித இனம் அல்லது அது போன்ற ஒன்றை கொண்டிருந்தது என்பது தான். இதை விளக்கி சொல்லி பல நேரங்களில் கஷ்டபட்டிருக்கிறான். இப்போது சொல்லாமல் அதற்கான வேலைகளில் இறங்கி விட்டான். Marsல் சுற்றி திரிய சூரிய வெளிச்சத்தை எனர்ஜியாக பயன்படுத்தும் வாகனம் எல்லோருக்கும் கொடுக்கபட்டிருந்தது.

ரகுவின் மனது சொன்னதெல்லாம், முதலில் தண்ணீர் இருக்கும் இடத்தை தேடு, பிறகு மனித இனத்தின் சுவடை தேடலாம் என்பது தான். சுற்றி திரிந்து கண்டுபிடித்துவிட்டான். அங்கே தன் கூட்டாளிகள் இருந்திருக்கவில்லை. அவனுக்கு தண்ணீரின் குணம் சற்றே பயமுறுத்தியது. இதுவரை வரையறுக்கபடாத ஒரு நிறத்தில் இருந்தது. பயத்தின் உணர்வால், தண்ணீரை தொட யோசித்தபடியே, தன் ஆராய்ச்சியின் போது படித்த Mars minerals தன்மை பற்றியெல்லாம் தேவையில்லாமல் யோசித்தபடி, நேரம் ஓடிகொண்டே இருந்ததால், வேறு வழி இல்லாமல் அதை experiment'காக கைகள் படாமல் எடுத்து வைத்த அடுத்த நிமிடம், இடது பக்கத்து காது சுத்தமாய் அடைக்கபட்ட ஒரு உணர்வு.

கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை இழக்கும் நிலை. சில நிமிடங்கள் தான். அவன் இப்போது கண்கள் திறந்தபடிக்கே மயங்கினான். ஆனால், இது எப்போதும் வரும் மயக்கமில்லை. கண் முன் மஞ்சள் வண்ணங்களோ, தலை சுற்றலோ இல்லாத மயக்கம். Mars வேலையை காட்ட ஆரம்பித்து விட்டதோ, ஆனாலும் மூளை எப்போதும் போல் சிந்திப்பதில், மொத்தமாய் குழம்பி போனான். இப்போது அதிலும் நிசப்தம். தன்னுள் ஏதோ ஒன்று இயங்கியது மட்டும் தான் அவன் நினைவில் இப்போது இருப்பது. எப்போதும் நம்பாத அசிங்கமான alien பற்றியெல்லாம் நினைக்க அவன் மூளை இடம் கொடுக்கவில்லை.

கண் மட்டும் இயங்க, இப்போது அவன் முன் எந்த மாற்றமும் இல்லாத ஒரு மனித உருவம். உருவம் மட்டுமே மனிதத்தனமாக இருக்க, தோலின் நிறம் அதே வரையறுக்கபடாத தண்ணீரின் நிறம். பெரிதாய் கிழியாத உதடு. மொத்தமாய் ஒரு சின்ன O. கைகள் சமானமில்லாத நிலை. கால்களும் கைகளும் கீழே ஊனிகொண்டு, சற்றே குரங்கின் வாடிக்கைகள். ரகு எதை எதையோ முடிச்சு போட்டுகொண்டிருந்தான். எண்ணங்கள் ஒரு சீராக இல்லை. ஆனாலும் அதன் சைகைகள் புரிந்து கொள்ளும்படியாக இருப்பது போல் உணர்ந்தான். அது இவன் முன் சிறிது இடைவெளியில் வந்து நின்றபோது, தேவை இல்லாமல் புளித்து போன தோசை மாவின் வாசனை நியாபகம் வந்து தொலைத்தது. அது இவனை தொட முயற்சிப்பது இவனுக்கு புரிந்துவிட்டது. ஓட முயற்சிக்கவில்லை இவன். தொட்ட நிமிடம், தீடீரென சிறு உருவமாக தண்ணீரில் நீந்தும்படிக்கு ரகு மனநிலை. பாதி குழம்பிய அவன், இப்போது முழுதாய் குழம்பி போனான். ஆனால் எங்கோ மூலையில் நான் நினைத்தது சரி என்று அடித்துகொண்டிருந்தது.

இப்போது அது இவனை விட்டு தூரத்தில். பெரிதாய் நகர்ந்துவிட முடியாத நிலை. அப்போது தான், குரல் எழுப்பி இருக்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது. ஆனாலும், அது இவனிடம் எதையோ சைகை காட்டிய லேசான நியாபகம். கையை கீழே முட்டு கொடுத்து எழுந்திருக்கும் போது, உள்ளங்கையில் சில்லிட்டது. அங்கே, மஞ்சளும் சிவப்பும் கலந்த வடிவமில்லா பெரிய கல். அப்படிபட்ட வெப்பநிலையில் கல் சில்லிடுவது வித்தியாசபட்டது. கொஞ்சமும் யோசிக்காமல் எடுத்துவிட்டான். எடுத்தவுடன் தான், scan செய்ய மறந்தது உறைத்தது. இருந்தாலும், என்ன தான் இருக்கிறது என பார்க்க அதில் பல கிறுக்கல்கள்.

(பூமியில் இப்போது தேதி, மே 31 2082) ரகுவுக்கு இப்போது பல பட்டங்கள். Mars மண் தொட்ட சில யுக புருஷ புருஷிகளில் இவனும் ஒருவன். இந்தியாவில் இவன் பெயரில் NH திறந்துவிட்டிருந்தார்கள். ரகுவுக்கு மட்டும் அந்த கல்லின் ஆராய்ச்சி முடிவு பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. மேலும் அதன் கிருக்கல்கள்.

3 மாத இடைவெளி. ரகு இப்போது மொத்தமாய் வெளியே விடபட்டான் (Mars கதிர்வீச்சுக்கள் பூமியில் பாய்ந்துவிடாமல் இருக்க, 3 மாத observation period). அப்பா, அம்மாவிற்கு தன் குரலை deliver செய்துவிட்டு, லேபிற்கு ஓடினான். சம்பிரதாயங்கள் முடிக்கபட்டு, அவன் இப்போது கண்ணாடி பெட்டிக்குள் இவன் கண்டெடுத்த கல்லின் முன் நின்று கொண்டிருந்தான்.

இக்பால் அந்த கல்லை உருட்டி புரட்டி கொண்டிருந்தவன். இராக்கில் இருந்து digitial archaeology படித்த award winning விஞ்சானி இவன். ரகுவிற்கு நல்ல நண்பனாகி விட்டிருந்தான். 1 மாததிற்கு பின், ரகுவிற்கு கிடைத்த செய்தி, அந்த கல் இப்போது இருப்பது சென்னையில், ஆராய்ச்சிக்காக.

சென்னை ஆராய்ச்சி மையம். மெலிதாக oxygen கலந்த குளிர் எல்லோர் முகத்திலும் அறைந்து கொண்டிருந்தது. இக்பாலும் ரகுவும் இப்போது ரகுவின் அப்பா முன். ரகுவின் அப்பா அந்த காலத்து தமிழ் ஆராய்ச்சி செய்தவர். கொஞ்சம் கொஞ்சமாய் கல்லின் கிருக்கல்கள் தமிழ் படுத்தபட்டு கொண்டிருந்தன. Oxygen நிரப்பபட்டிருந்த்தும் முவரின் மூச்சு சில நேரங்கள் பெருத்த இடைவெளியில் வந்து கொண்டிருந்தன. மொத்தமாய் இப்போது கல்லின் கிருக்கல்கள் தமிழ்படுத்தபட்டிருந்தது.

"இந்த கிரகத்தின் கடைசி நிமிட பதிவு. இந்த பதிவு எழுதபட்டிருப்பது எங்கள் மொழியில். எழுதியது ஒரு கடைசி உயிரினம். எழுதபட்ட விதம் - எங்களின் விஞ்சான வளர்ச்சியில் உருவான அழியாத எழுத்து பதியும், எதிலும் எழுதும் கருவி. இந்த கிரகம், இப்போது அழிந்து போக போகிறது. சுற்றிலும் இறந்த வாசனைகள்.

நாங்கள் வளர்த்த விஞ்சானம் எங்களை பால்வெளிக்கு அப்பால் பயணிக்க வைத்தது. எங்கள் கிரகத்தை சந்தோஷபடுத்தியது. ஆனால், பின்னாலேயே அதன் அடங்கா கோபம் எங்களுக்கு தெரியவில்லை. இப்போது நாங்கள் உருவாக்கிய விஞ்சானம், எங்கள் வாழ்க்கையில் ஒன்றாகி, இயற்கை குலைத்து, கிரகம் அழிக்கபட்டு விட்டது. கடல் மட்டங்கள் உயர்ந்து அழிந்து கொண்டிருக்கிறோம்.

எங்களின் பல நூற்றாண்டு வாழ்க்கையும், வான்வெளி பயணத்தின் வளர்ச்சியும், பருவ மாற்றங்களும் எங்களை அடுத்த பக்கத்து கிரகங்களை வாழ்வதற்காக பார்க்க வைத்தது. அதன் பலன், எங்கள் ஜீவன்களில் இரண்டு பேர், சுரியனுக்கு மூன்றாவது இடத்தில், எங்களுக்கு பக்கத்தில் இருக்கும் கிரகத்தில் (பால்வெளியில் உயிரினம் வாழ, எங்கள் கிரகத்திற்கு அடுத்து தகுதியான இரண்டாவது கிரகம் அது) கொண்டு போய் விடபட்டுள்ளார்கள்.

அவர்களுக்கு நாங்கள் இட்ட பெயர் Adam & Eve"

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...