Thursday, February 15, 2007

ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ்

வெகு நாட்களாகவே ஜேபி எக்ஸ்பிரஸ் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இங்கு வந்தபின் BARTல் போகும் போது, அடிக்கடி ஜேபி நியாபகம் வந்தது. அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை, வேறு வேறு நாட்டில் உள்ளது என்பது மட்டுமே வித்தியாசம்.
ஆனாலும், ஜேபி ஏற்படுத்திய பாதிப்பை கொடுக்கவில்லை BART.
அப்பொழுதெல்லாம், அதிகம் ரயிலில் போய் பழக்கம் இல்லை. ஆனால், 3 மாதத்திற்கு தினமும் காட்பாடியில் இருந்து சென்னை சென்று வர வேண்டும், அதுவும் ரயிலில் என்ற போது, மனதிற்குள் மகிழ்ச்சியே. அதிகம் கேள்விபட்டதில்லை, இந்த ஜேபி பற்றி. காலை, 6:20க்கு காட்பாடி ஸ்டேஷனிற்கு வரும், ஜோலார்பேட்டையில் இருந்து. ஒரு வாரம், எழுந்து போய்விட்டு வந்ததிற்கே, தாவு தீர்ந்து விட்டது. காலை, 5 மணிக்கு ஸ்டேஷனை பார்க்க வேண்டுமே, எங்க இருந்துடா வந்தாங்க என்ற மலைப்பே மிஞ்சும். இதை போன்று பல வருடங்களாக போய் வருகிறோம் என்று அவர்கள் கூற, சற்று வாழ்க்கையை பற்றிய கவலை வந்தது, நானெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு.

எல்லோரிடமும், இரண்டு உணவு மூட்டை இருக்கும். ஒன்று, அரக்கோணம் தாண்டியவுடன் சாப்பிட வேண்டிய காலை உணவு. இரண்டு, வழக்கம் போல, மதியம். அரக்கோணம் நெருங்கும் போதும், தாண்டிய பின்னரும், எல்லா கோச்களிலும், கண்டிப்பாக இட்லி, தோசை, பொங்கல், பழைய சாதம் சாம்பார், உப்புமா வாசனை வீசும். அதிலும் சிலர், காலை உணவு மட்டும் எடுத்து கொண்டு வருவதில்லை. நடுவில் பொட்டலம் கட்டி, இட்லி தோசை விற்கும் ஒருவரின் சமையல் ருசி கண்டவர்கள் இவர்கள். சில சமயம், அதை சாப்பிட்டு பார்த்ததும் உண்டு. சொல்வதற்கு குறை ஒன்றும் இல்லாத பொட்டலங்கள் அவை.

கீழே இந்த பக்கம் 5 பேர், அந்த பக்கம் 5 பேர். மேலே இந்த பக்கம் 3 பேர், அந்த பக்கம் 3 பேர். வார நாட்களில் போனீர்களானால் உங்களுக்கே தெரியும். தாங்கள் வாங்கிய வீட்டை யாராவது அபகறித்தால் கூட இப்படியெல்லாம் கோபம் வருமா என்று சொல்வதிற்கில்லை. அவர்கள் வழக்கமாக உட்காரும் இடத்தை தெரியாமல் புதிதாக வரும் யாரவது பிடித்தால், கண்டிப்பாக அந்த கோச்சில் குருஷேத்திரம் தான். தூக்கம் தொலைந்த அத்தனை கோபத்தையும், புதியவரின் மேல் காட்டாமல் விட மாட்டார்கள். இவர்கள் அத்தனை பேரும் நிச்சியமாக கல்லூரி மாணவர்கள் கிடையாது. ஒன்று, இரண்டு குழந்தைகள் பெற்று, தொந்தி விழுந்து, வழுக்கையில் வாடும் நடுத்தர அரசாங்க ஊழியர்களே. இவர்களின் இந்த இரண்டரை மணி நேர பயணங்கள் இல்லாவிட்டால், பேனா இல்லாத கவிஞர்கள் போலாகி விடுவார்கள்.

சென்னை சென்ட்ரலில் இறங்கியவுடன் முதலில் இருக்கும் மகளிர் கோச் கடந்து தான் செல்ல வேண்டியிருக்கும். பலர், கண்ணாடி பவுடர் சகிதம் மேக்கப் போட்டு கொண்டிருப்பதை எல்லாரும் தரிசனம் செய்து விட்டு செல்லலாம். பாவம், இவர்களின் பிழைப்பு. பெரும்பாலும், ஒரு வழிசல் மேனேஜரிடம் மாட்டி கொண்டுள்ளவர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சொல்ல நிறைய இருக்கிறது. பலரின் தூக்கத்தையும், கவலையையும், சீட்டு கச்சேரிகளையும், சிரிப்புகளையும், கிண்டலையும் சுமந்து இன்றும் ஒடிக்கொண்டு தான் உள்ளது என்று நினைக்கிறேன், இந்த ஜேபி. ரயில்வே அதிகாரிகள், இந்த ரயிலை நிறுத்தினால் பலருக்கு இருதய ஓட்டம் சிறிது நின்று ஓடும்.

Wednesday, February 14, 2007

பூவின் மொழி மணமா, நிறமா

இது என்ன, இசை வெளியீட்டு விழாவா, இல்லை, வெள்ளி விழாவா என்ற சந்தேகமே வந்தது, இந்த வீடியோ பார்க்கும்போது.

எனக்குள் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக இருந்தது தமிழ் சினிமா. இப்போது அது கொஞ்சம் மாறி சினிமா மட்டுமாக உள்ளது. மற்ற உலக சினிமாக்களை பார்க்கும் போது, 'அட, நம்ம ஆளுங்க எப்போ இதெல்லாம் எடுக்க போறாங்க' என்று தோன்றும். மிக சிறிய கால கட்டத்திலேயே, இந்த உலக சினிமா எல்லாம் தமிழ் சினிமாவை மறக்கடித்தது. இப்படி இருந்தபோது தான், ஆனந்த விகடன் என்று நியாபகம். ஜோதிகா பேட்டி, மொழி படத்தை கண்டிப்பாக முடித்து கொடுத்து விட்டேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத படம் என்றார். கூடவே பலவையும் சொல்லியிருந்தார். சரி, வழக்கமாக எல்லாரும் சொல்வது தானே என்று நினைத்தேன். ஆனாலும், ஏதோ ஒன்று, இந்த ராதா மோகனும், பிரகாஷ் ராஜ்ம் ஏமாற்ற மாட்டார்கள் என்ற எண்ணம்.

அப்படித்தான் இருக்கும் போல என்பது போல், இந்த இசை வெளியீட்டு விழா. வழக்கம் போல இசையை கொஞ்சமாக பேசி, மற்றவற்றை அதிகம் பேசினார்கள். ஈர்த்தது கனிமொழியும், வைரமுத்துவும். மாறுபட்ட சினிமா என்றார்கள். இப்போது வரும் எல்லா சினிமாவையும் அதை உருவாக்குபவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். அதையும் மீறிய பலவற்றை இவர்கள் கூற தவறவில்லை. பார்த்தால் உங்களுக்கே தெரியும். வைரமுத்து, எப்போதும் போல, உணர்ச்சியை உருக்கி, தமிழை பரப்பி பேசினார். பல நேரங்களில் அது அலுப்பே தட்டும், ஆனால், இதில் அல்ல. ஜோதிகா பாவம், கொஞ்சம் (கொஞ்சம் என்ன நிறையவே) நெகிழ்ந்தும், நெளிந்தும் இருப்பார்.

மொத்தத்தில், மொழி, நான் பல நாட்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் சினிமா. இந்த படம், மசாலா நெடியை கொஞ்ச நாளைக்கு நிறுத்தும் என்ற நம்பிக்கையில் ஒரு பழைய தமிழ் சினிமா ரசிகன்.

Monday, February 12, 2007

I'm the greatest thing that ever lived. I'm so great I don't have a mark on my face. I shook up the world.

இவரை பற்றிய படம் ஓடிக்கொண்டிருந்தது. உலகின் அத்தனை பேருக்கும் தன்னை அடையாளம் காட்டி கொண்டவர். கொஞ்ச நேரத்திலேயே, இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமே என்று விக்கிபீடியாவை அணுகினேன்.

அந்த பதிவு, படத்தை விட சுவாரசியமாகவே இருந்தது. புகழை தன் காலடியில் இட்டு அடிபணிய வைத்த ஒரு மனிதனின் வாழ்க்கை ஓட்டம், அவரின் சண்டை முறையை போலவே படு வேகமாகத்தான் இருந்துள்ளது. புகழின் ஒரு புள்ளியை தொட்டவுடன் சரசரவென பல படிகள் பறந்துள்ளார், ஆனால், கீழே அதல பாதாளம் ஒன்று கண்ணுக்கு தெரியாமல் உண்டாவதை அறியாமல்.

அவர் வாழ்ந்த காலத்தில் உச்சத்தில் இருந்த பல குத்து சண்டை வீரர்களை வீழ்த்தியும், 6 முறையே குத்து சண்டை போட்ட ஒரு இளைஞனிடம் தோற்றும், வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து சண்டை போட்டு பார்க்கின்சன் நோய் பெற்றும், நாலு மனைவியரை கட்டி மேய்த்தும், பெண்கள் இதற்கெல்லாம் வர கூடாது என்று சொல்லி, தன் மகளை வர விட்டும், வாழ்க்கை சதுரங்கத்தை தன் போக்கில் வாழ்ந்துள்ளார்.

இப்பொழுது 22 மில்லியன் பேருக்கு உணவளித்து அவர்களின் பசியை போக்கி, உலகம் முழுவதும் தன்னால் முடிந்தவற்றை செய்து வரும்
இவரை பார்க்கும் போது புகழ் மட்டுமே தேடும் பலர் நியாபகம் வருகிறார்கள்.

முடிந்தால் இவரை நேரில் பார்க்க ஆசை.

I never thought of losing, but now that it's happened, the only thing is to do it right. That's my obligation to all the people who believe in me. We all have to take defeats in life.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...