Thursday, December 05, 2019

தவமாய் தவமிருந்து

சில நேரங்களில் தமிழ் சினிமாவின் மீதுள்ள அதீத காதல் பெரும் சங்கடமாய் போய்விடுவதும் உண்டு. சங்கடமாய் போய்விடுவது என்பதை விட, சங்கடப்படுத்தி பார்த்து விடுவது என்பதே சரியாக இருக்கும். தமிழ் சினிமாவின் சில படங்களை நான் ரசித்தேன் என சொல்வதோ, இந்த இயக்குனரின் ரசிகன் என சொல்வதோ, மற்றவர்களுக்கு கேலியாக தோன்றும். இத்தனைக்கும் நான் சொல்லும் அனைத்தும் ஆழ்மனதில் இருந்து எழுந்த படைப்புகள், சினிமாவை திரையில் தோன்றும் வண்ணங்களாக மட்டும் பார்க்காமல், அதை கனவு கடத்தியதாக பார்க்கும் அறிவார்ந்த படைப்பாளிகள், திரைப்படத்தை வியாபாரமாக மட்டும் பார்க்காதவர்கள், உள்ளிட்ட இன்னும் பல பேர்.

தவமாய் தவமிருந்து அப்படி ஒரு திரைப்படமாகவே இருந்தது. நான் இன்று வரை ஒரு படத்தை பார்க்கும் முன் தயாராகிறேன் என்றால் அது இந்த திரைப்படம் மட்டுமே. அதென்ன, தயாராவது என்றால், உள்ளதை இழந்து ஒரு கவலை குழிக்குள் தள்ளிவிடப்படும் செயலை ஒவ்வொரு முறையும் செய்யும் இந்த படைப்பு. பயந்தே பார்ப்பேன். பார்த்த அடுத்த நாள் வரை தங்கி விட்டு போகும் கவலைகள். ஆனால் கவலை மட்டுமா சொல்கிறது இந்த படைப்பு. ஒரு மனிதனின் வரலாறு, அதனினும் பெரிதாக அவனின் சின்ன வாழ்க்கை. அதனுள் இருக்கும் மெல்லிய மனத்தின் மக்கள்.

எந்த ஒரு படைப்பும், சாகாவரம் பெறுவது, பார்க்கும் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு வடிவத்தை கட்டமைப்பது. 2005ல் இந்த படம் வந்த போது கொடுத்த அழுத்தம், இப்போது 2019ல் வேறு ஒரு அழுத்தத்தை கொடுக்கிறது.

அப்பா, இன்று வரை தமிழ் சினிமாவில் கைவிடப்பட்ட முயற்சி, தவமாய் தவமிருந்து தவிர. எவ்வளவோ வந்திருக்கிறதே, அப்பா என்று பெயர் கொண்ட திரைப்படமே வந்திருக்கிறதே என்றெல்லாம் சொல் வரும். ஆனால், அப்பனை, அனைத்துமாய் இருப்பவனை, அள்ளி அனைத்து பார்க்காமல், கண்களாலேயே வாழ்க்கை நடத்துபவனை, சிறுக சிறுக மண் சேர்த்து கட்டிய கோட்டை இந்த திரைப்படம்.

சரியாய் சொல்லப்போனால், பெரும்பாலான அப்பன்சாமிகள் கடைசியில் தவித்துக்கொண்டு தான் இறக்கிறார்கள். என்ன தவிப்பு என்பதிலேயே வித்தியாசம் உண்டு. அம்மாக்களுக்கு இல்லையா என்றால், இருக்கும். ஆனால், அம்மா பேசிவிடுவாள். வாழ்வின் பெரும்பாலான நொடிகளை பேசியே அவள் வாழ்ந்திருப்பாள், அதில் சோகமும் அடக்கம், சகலமும் அடக்கம். 2000த்தின் அப்பாக்கள் வித்தியாசமாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால், என் காலத்து அப்பா, ராஜ்கிரண் போலவே. அப்படி மிகைநடிப்பில் ஒருவரும் இருப்பதில்லை என வாதாடலாம். அழுத்தம் கொடுக்கும் வாழ்க்கையிடம், ஒவ்வொருவரும் மிகை முகத்தை காட்டியே இருக்கிறோம். சரியென ஒத்துக்கொள்ள மாட்டோம். அதே போல, இல்லாத ஒன்றை உருவகப்படுத்த சேரன் ஒன்றும் வேற்று கிரகத்தவர் இல்லை.

ஒரு பேட்டியில், கதை சொல்லும்போது, ஹீரோ பிரஸ் வெச்சிருக்காரு. ஹீரோ கடன் தொல்லையில மாட்டிகிட்டு, இக்கட்டான சூழ்நிலையில பசங்க முன்னாடியே அவமானப்படறாரு. ஹீரோ, இளையமகனோட ஏற்ற இறக்கத்தை இப்படித்தான் சரி செஞ்சாரு, என்றெல்லாம் சொன்னரென்றும், ஹீரோ யாரென்று கேட்டால் அது ராஜ்கிரண், அவர் தான் அப்பா என்றாராம். சந்திரமுகி, சச்சின், கஜினி, சிவகாசி, சண்டக்கோழி எல்லாம் வந்த 2005ல் இப்படி ஒரு கதை எடுக்கப்பட்டிருந்தது என்றால், சேரன் என்றொரு மனிதனின் அசாத்திய நம்பிக்கை மட்டுமே. இந்த கதை தோற்கும் என்று அவர் கண்டிப்பாக கணக்கிட்டு இருப்பார். ஆனால், அவரின் வெற்றி, என் போன்ற சிலர் மனதினில் இன்று வரை, 15 ஆண்டுகள் கழித்தும் இந்த திரைப்படம் கொடுக்கும் அதிர்வுகள்.

நான் முதலில் சொன்ன சங்கடத்தை சொல்கிறேன். ஒரு இயக்குனராக சேரனை பிடிக்கும் என்று சொன்ன போதும், தவமாய் தவமிருந்து பிடிக்கும், ஆட்டோகிராப் பிடிக்கும் என்று சொன்னபோதும், எனக்கு வந்த விமர்சனங்கள் அவரை மட்டுமில்லாமல், அவரின் படைப்பை மட்டுமில்லாமல், என் ரசனையையும் கேலியாக்கியது. நான் மட்டுமல்ல, நிறைய பேர் இந்த அனுபவத்தை அடைந்திருக்கலாம். அதற்காக, சேரனின் ரசிகன் என சொல்லாமல் இருக்கும் பல பேர் உண்டு. தவமாய் தவமிருந்து எல்லாம் ஒரு படமா, இவ்வளவு நீண்ட 2000த்தின் பாசமலரை எல்லாம் யார் பார்ப்பார்கள், நீ வேண்டுமானால் பார்க்கலாம் என்றவர்கள் பல பேர் உண்டு. இத்தனையும் உடைக்கும் ஒரு காட்சி, இளைய மகன் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடி போய், அலைக்கழிக்கும் வாழ்க்கையின் இடையில், அப்பா வீட்டின் மத்தியில் உட்கார்ந்திருக்கிறார். எதிர்பார்க்காத மகன், அழுது தீர்க்கிறான். அப்பா, ஒரு சொட்டு கண்ணீர் விடாமல், உனக்கு நான் செய்யவேண்டிய கடமையை என்றும் ஒரு அப்பனாக, உன் காப்பனாக, ஒரு போதும் செய்யாமல் விடமாட்டேன் என்பதை கண்ணாடியின் பின் இருக்கும் கண் வழியே மட்டுமே சொன்ன அந்த அப்பன் போதும். என் கண்களில் அந்த காட்சிக்காக, எப்போதும், ஒரு துளி கண்ணீர், இறக்கும் வரை இருக்கும்.

Thursday, October 31, 2019

என்றென்றும்!!!

இன்னொரு ஜென்மமுன்டெனில்
அது ஒரு நொடி
மட்டுமிருந்தால் போதும்,

‘தாலாட்டு கேட்க நானும்
எத்தனை நாள் காத்திருந்தேன்’

வார்த்தைகளை என்
முன் ஜென்மத்து
கருப்பசாமி
வாயில் இருந்து கேட்க!!!

Monday, October 28, 2019

நீ பிழைத்திருக்க வேண்டுமே...

பத்தடியில் உன்னை பார்த்த
உன் கிராமத்து மனிதனை
உன் ஓலத்துடன்
இருக்க வைத்திருக்கிறாய்

இருவதடியில்
உன் இரு கைகளை
பிடிக்க நினைத்த
கயிறை பிடித்திருந்த
சித்தப்பனை பைத்தியமாக்கி இருக்கிறாய்

முப்பத்தடியில்
உனக்கு தெரிவதெல்லாம்
மண்ணும் தூசியும்
என புரிந்த உள்ளூர்காரனை
பித்தனாக்கி இருக்கிறாய்

நாற்பதடியில்
உனக்கு பசித்திருக்குமே
கொடுக்க நீ விரும்பிய
தோசை கூட கொடுக்க வழி இல்லையே
என கழிவிரக்கம் கொண்ட
பாட்டி இன்னும் மயங்கி கிடக்கிறாளே

ஐம்பதடியில்
நீ விளையாட நினைத்த
வானவில் நிறத்து பொம்மை
வந்து நின்று காப்பாற்றும் என
நீ நினைப்பாய் என நினைத்த
பக்கத்து வீட்டு மாமாவை
நிலை கொள்ள வைத்திருக்கிறாய்

அறுவதடியில்
தண்ணீர் தவித்த நாவினில்
ஒரு துளி தண்ணீரை
தொட்டு வைக்க நினைத்த
உன் இன்னொரு இரண்டு வயது கூட்டாளி
அழுது கொண்டிருக்கிறானே

அப்படியே
நூறடியில் நீ இருக்கும்போதும்
சொன்னாளே அவள்
அவனுக்கு வேர்க்குமே...
அடுத்த நொடியில் அவளுக்கு வேர்த்து
இந்த நொடியில் எழுந்தாளே

யாருக்கு தெரிந்திருக்க முடியும்
27ம் அடியிலேயே
நீ
ம்மா, தூக்கு என்றதை... 

Sunday, July 07, 2019

மண்ணுயிர்


இத்தனை இருள் பழகவில்லை. நான் தேவைப்படாத ஒரு இடத்தில் சிக்கி கொண்டுள்ள உணர்வு ஓங்கியிருந்தது. தலைக்கு மேல் அடர்த்தியான ஈர்த்துபோன கயிறுகள். தொட்டுப்பார்த்து உணர்ந்ததில் கயிறாகவும், ஓங்கி வளர்ந்த மரத்தின் வேராகவும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. எவை எப்படியோ, நான் இருக்கும், இருந்த இடமில்லை. என் துணை எவருமில்லை. பேச முடியவில்லை. உடல் உணரப்படவில்லை. நினைப்பது சரியில்லை என்றாலும், அது தான் நடந்திருக்கிறது. காலம் கடந்திருக்கிறேன்

வலியின்றி இருக்கும் உலகு இப்படித்தான் இருக்குமென்றால் இவை இருந்து விட்டு  போகட்டும். ஆனால், ஏன் சிந்திக்கிறேன்? என் இனம் சொன்னது, இறந்த பின் நான் மேலுலகம் செல்ல வேண்டும் அல்லது கருந்துளைக்குள் வட்டமிட வேண்டும். நான் இருக்குமிடம் (இல்லாமல் இருந்தாலும், இருக்குமிடம் என்றே சொல்ல முடியும்), இவற்றின் எதிலும் சிக்கவில்லை. சிந்தித்துக்கொண்டே, கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும் நிலை, எத்தனை நாள் தாக்கு பிடிக்க முடியும்? இறவா நிலை இப்படி ஒரு சிக்கலை கொண்டிருக்கும் என நினைக்கவில்லை. செய்து தான் பார்ப்போமே என்று செய்தது, எனக்கு நன்மை பயந்தது. யாராவது இருக்கிறீர்களா என ஆழ்ந்த மனநிலையை மட்டும் கொண்டேன். கடும் மௌனம், பாலைவன இருட்டு, ஆனால் உணர்வில் மட்டும் தலை மேலும் பக்கவாட்டிலும் கயிறுகள். இவை எங்கோ எனக்கு பரிச்சயம். கேள்விகளின் மத்தியில், இந்த உண்மை மட்டும் இருண்டு கிடந்தது. பதில் வந்தது, பல மணி - இங்கே எது மணி - பல கேள்விகளின் பின் என் காலுக்கு கீழே இருந்து ஒலி.

வருகைக்கு நன்றி, என்றது குரல்.

நான் எங்கே வந்தேன். என்னை இழுத்து வந்தாகி விட்டது, என்றேன்.

நீ இங்கே வர வேண்டியது அவசியம், வந்தாகி விட்டாய்.

கேள்வி கேட்கிறேன், பதில் சொல்ல முடியுமா?

நான் பதில்கள் மட்டுமே. கேள், நீயே அறிவாய்.

என் அறிவுக்கு எட்டியவரை மனிதர்கள் காலமாகி விடுவது வழக்கம். நான் காலமாகி விட்டேனா?

இல்லை. நீ இப்போது உயிராகி இருக்கிறாய்.

உயிராகி, உடலுமாகி, அந்த உடல் சிதிலமாகி தானே இங்கே வந்துள்ளேன். ஒரு வேளை, நான் இப்போது கருவாய் ஒரு பெண்ணுக்குள் சென்று கொண்டிருக்கிறேனா? அதை தான் நான் உயிராகி இருக்கிறேன் என்கிறீர்களா?

இல்லை. நீ உயிராகி இருக்கிறாய், ஆனால் நீ நினைக்கும் உயிரில்லை. நீ பார்த்த உயிர்

புரியவில்லையே.

நீ விதை.

நான் விதையாகி விட்டேனா? விண்ணுலகம் எல்லாம் பொய்யா? மண்ணுலகம் தான் நாங்கள் நினைத்த விண்ணுலகமா? மண் வாழ்க்கை பெயர்த்தால் விண் வாழ்க்கை தானே அடுத்த படி. அது தானே எங்கள் மறை சொன்னது. அது தானே எங்கள் கடைசி புள்ளியாய் இருந்தது.

அது தவறு. அது புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் இறக்க வேண்டும். இறந்து பிறக்க வேண்டும். அடுத்த பிறவி உனக்கு உண்டென்றால், அது மண்ணுலகில் தான். விண்ணுலகில் சுயம் பெற நீ விண்ணுலக பிறவி இல்லை. உன் ஆதி, இந்த மண்ணில் தரித்தது. ஆதியின் அத்தனை வித்துக்களும், மண் மீதே உடல் பெறும், மண் மீதே அறம் கொண்டும் அறம் கிளைத்தும் அறம் திரித்தும்வாழும். இத்தனையும் மண்ணில் நடந்து, கடைசி பகுதி மட்டும் எப்படி விண்ணுக்குள் போகும்? நீ மண். மண்ணில் தான் உன் முதல், முடிவு, மறுபடியும் முதல்.

சரி, அப்படியே இருக்கட்டும். நான் மட்டும் ஏன் பேசுகிறேன். பதில் பெறுகிறேன். மற்ற, மனிதர்கள், மன்னிக்கவும் விதைகள், ஏன் பேசவில்லை?

உன் விளைவு, உன் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது. உன் போல் பலர் உள்ளனர், அவர்கள் அவர்களின் பதில் பெற்று கொண்டு தான் இருக்கிறார்கள்.

எப்படி விதையானேன்?

உன் சக உயிரினங்கள், நீ சுமந்த உடலை என்ன செய்தார்கள் என எண்ணிப்பார். உனக்கு புரியும். நீ புதைக்கப்படுவாய், அல்லது எரிக்கப்படுவாய். எது செய்தாலும், மண் உன்னை உள்கொள்ளும்.  உட்கொள்ளப்பட்ட நீ, விதையாவாய். உன் அடுத்த கேள்வி எனக்கு தெரியும். அதன் பதில் இதோ. நீ என்ன விதையாவாய் என்பதை மண் தாண்டி முளைத்த இன்னொரு மரம் தேர்ந்தெடுக்கும். உன் அறம் அத்தனையும் நிறுத்தல்கோலில் நிறுத்தப்பட்டு, முடிவெடுக்கப்படும்.

என்னை என் வீட்டு தோட்டத்தில் அல்லது பக்கத்தில் உள்ள மண்ணில் சூல் கொள்ளவைக்க முடியுமா?

உன் வீடு உனக்கு இப்போது தெரியாது, எங்களுக்கும் தெரியாது. இங்கே உள்ளதெல்லாம், உயிர் சுமக்கும் தாவரங்கள். மனிதர்கள் அல்ல.

இப்போதெல்லாம் மின்சார மயாணங்கள் வந்து விட்டதே. நானும் அப்படித்தானே முடிந்திருப்பேன். இதில் எங்கே மண், எப்படி நான் விதை?
அதன் பதில் உனக்கே தெரியும். அதனால் தான் என்னுடன் உன்னால் உரையாட முடிகிறது. பலர் விதையாகி, உயிராகி, மண் கொண்டு, மண் தின்று தினசரி வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் நீ அவர்கள் இல்லை.

புரிந்தது. என்னை கடல் கொண்டிருந்தாலும், ஆறு கொண்டிருந்தாலும், ஏரி கொண்டிருந்தாலும், நீர் மண்ணின்றி அமையாது, இருக்காது. என் துகள், நீரின் வழியே மண் சேர்ந்திருக்கிறது. இன்னொன்றும் புரிகிறது, ஏன் அத்தனை மண்ணுயிர்கள் இருக்கின்றன என்று. மரித்த பின், இப்படியானால், அத்தனை பச்சை உயிர்கள் இல்லாமல் இருந்தால் எப்படி.

நீ இப்போது நீயாகி விட்டாய். உன் கடன் இனி உயிர்த்து கிடப்பதே. உன் அறம் விளைந்து இருப்பதே.

எல்லாம் முடிந்தது. நான் விதையானேன். கேள்விகள் மட்டுப்பட்டன. நானும் பதில்கள் ஆனேன். மண் விரித்து, வெளிவந்தேன். என் உடலை மரமாக்கினேன். மௌனித்து இருந்தேன். அவன் வந்தான். ஆட்கொண்டேன், பின் புத்தன் ஆனான். நான் போதி ஆனேன்.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...