Friday, May 15, 2020

ஆறாயிரம்

அறிமுகம் என்ற சொல்லை, கடந்த 6 மாதங்களில், ஆறாயிரம் முறையாவது சொல்லி இருப்பேன் என நினைக்கிறேன். இப்படியே போனால், என்னை நானே அறிமுகம் செய்து கொண்டு தனியே பேசிக்கொள்வேனோ என்னவோ. அப்படி எதுவும் ஆகாமல் இருக்க, எல்லாம் வல்ல இயற்கை மழை கொண்டு என்னை காப்பாற்றட்டும்.

இதுவும் ஒரு அறிமுகம் பற்றிய கட்டுரை தான். எஸ். ராமகிருஷ்ணன் அவரின் தேசாந்திரி காணொளி வரிசையில் செய்வதெல்லாம் அறிமுகமே. யாவரும் மின்னிதழில் வந்திருந்த அ. முத்துலிங்கம் அவர்களின் நேர்காணலை குறிப்பிடும் போது, எப்பொழுது முத்துலிங்கம் அவர்களின் கட்டுரைகளையோ, நேர்காணலையோ பார்க்கவோ, கேட்கவோ இருக்கும் பட்சத்தில், ஒரு நோட்டு புத்தககத்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு குறிப்பு எடுத்துக்கொள்வேன் என்கிறார்.

அவருக்கு, அ. முத்துலிங்கம், எனக்கு இப்போது வரை எஸ். ராமகிருஷ்ணனே.

அவரின் இன்றைய காணொளி, நேர்காணலாக அமைந்திருந்தது.



கொட்டிக்கொடுத்தார். இன்னும் பல கேள்விகள் இருக்குமென்று நம்புகிறேன். அடுத்தது வருவதற்குள், என் நோட்டுப்புத்தகத்தை நிரப்பி வைக்கவேண்டும் என்றெண்ணியதாலே, இந்த பதிவு (இதை எப்போதும் பதிவு போட்டு, வெளிச்சத்தில் காட்டியதில்லை. ஆனால், படிக்க சிலர் இருக்கும்போது, இது ஒரு ஆறாயித்தி ஒன்றாக, இன்னொரு அறிமுகமாக இருந்துவிட்டு போகட்டும் என்பதே எண்ணம்.

கீழே கொடுக்கப்பட்ட அத்தனையும் எஸ்ரா அவர்கள் சொன்னது. அதில் ஒன்றைக்கூட நான் படித்ததில்லை. ஆனால், எப்போதாவது படித்து விடவேண்டும். இப்போதுள்ள புத்தகங்களே இன்னும் படித்து முடிக்கப்படவில்லை. அகரமுதல்வன் ஒவ்வொரு குறுநாவலையும் அழகாய் கொண்டுபோய்க்கொண்டிருக்கிறார். இப்போது நான் படிப்பது, உலகின் மிக நீண்ட கழிவறை. இப்பொது வரைக்கும் சித்தப்பா வெகுவாக கவர்த்திருக்கிறார்.

சோர்பா தி கிரீக் (சோர்பா என்னும் கிரேக்கன்)

கட்டவிழ்த்துவிடப்பட்ட மனநிலை கொண்ட சோர்பா என்பது போன்ற ஒரு தோற்றம் எனக்கு கிடைத்தது. பயணம் தொடர்பாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இரு நண்பர்கள், இல்லை, சூழ்நிலையால் நண்பர்களாக்கப்பட்டவர்கள் போல தெரிகிறது. இது அத்தனையும் தாண்டி, கோவில்பட்டியில் தம் நண்பர்களோடு கூடும் போது போதெல்லாம் சோர்பாவை பற்றி பேசாமல் இருந்ததில்லை என்கிறார். அந்த கோவில்பட்டியில் அப்படி என்னதான் மாயமோ தெரியவில்லை. நைனா, கிரா'வை சொல்லியே ஆக வேண்டும்.

அருண்மொழி நங்கை இந்த நாவலை பற்றி எழுதிய கருத்துக்கள், இங்கே.

கிண்டிலில் சொற்ப விலைக்கு கிடைக்கும் என அமேசான் சொல்கிறது. காகிதபுத்தகமும் சொற்ப விலையே.

கீழ்கண்டவற்றை சிறந்த இந்திய நாவல்கள் என்று சொல்லாமல், தனக்கு பிடித்தவை என்று சொல்லி இருக்கிறார்.

மலையாளத்தில், குர்அதுல் ஐன் ஹைதர் எழுதிய அக்னிநதி. கண்ணுக்கு முன் இருக்கும் சில காலங்களை எழுத்தின் மூலம் கடந்து போகிறது என்று நினைக்கிறேன். ஜெயமோகன் அக்னி நதி பற்றி எழுதிய கருத்துக்கள், இங்கே. இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு எழுதிய பதிவில் அக்னிநதி ஒரு முக்கிய படைப்பு என்கிறார். இதே பதிவில், இன்னும் எத்தனையோ இந்திய இலக்கிய படைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தாராசங்கர் பந்த்யோபாத்யாய எழுதிய ஆரோக்கிய நிகேதனம் (தமிழில் த. நா. குமாரசாமி), வங்கத்து நாவல். நாவலை பற்றி படிக்கும் போதே இழுக்கிறது. கதைக்களன் தானோ? மரபுக்கும், இக்காலத்திற்கு உள்ள சிக்கலை விளக்கும் போல் இருக்கிறது. ஆனால், கதைக்களன் மருத்துவத்துறை. கடைசி பெஞ்ச் பதிவில், ஆரோக்கிய நிகேதனம் பற்றி, இங்கே.

வங்காளத்து நீலகண்ட பறவை, பலரும் படிக்கச்சொல்லி கேட்டிருக்கிறேன். அதைப்பற்றி ஜெயமோகனின் ஒரு பதிவு.

தகழி சிவசங்கரன் பிள்ளையின், கயிறு மற்றும், செம்மீன்.

கேரளா பூமியில் இருந்து, கேசவதேவ் எழுதிய அயல்கார் (அண்டைவீட்டார்). ஜெயமோகனின் பதிவு இங்கே.

வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய, பால்யகால சகி. அது பற்றி ஒரு பதிவு இங்கே.

தனக்கு மிக நெருக்கமானதாக, வங்கத்து நாவல் சிப்பியின் வயிற்றில் முத்து நாவலை சொல்கிறார். விளக்கத்தில், ஏன் பிடித்தது என்பதற்கான காரணம் கேட்டால் நமக்கும் பிடிக்கிறது. ஒரு அமெரிக்க தாத்தா, தன் கொள்ளுத்தாத்தா இந்தியாவில் வேலை செய்தவர் என்று சொன்னால், எப்படி ஆர்வம் ஈர்க்கும். அப்படி இருக்கும் போலிருக்கிறது. அதை பற்றி எஸ்ராவே எழுதிய பதிவு, இங்கே.

தமிழில் தனக்கு பிடித்த சிறுகதையாக, கு. அழகிரிசாமியின் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனை குறிப்பிடுகிறார். கிராவின் அண்டைவீட்டார் கு. அழகிரிசாமி. சொல்லும்போது, கரிசல்காட்டின் இன்னொரு எழுத்தாளர் உதயசங்கரை பற்றியும், அவர் அங்கேதான் வேலை செய்தார் என்றும் சொல்லும்போது, ஒரு படைப்பு எங்கெல்லாம் செல்கிறது என்பது வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த படைப்பையும், படைப்பாளியையும் பற்றி உதயசங்கர் எழுதிய பதிவு.

இதற்கு பிறகு அமெரிக்க இலக்கியங்களை பற்றி ஒரு சிறுகுறிப்பை தூவி இருக்கிறார். அதற்கு ஒரு தனிப்பதிவு தேவைப்படும். அதற்கும் மேலாக, இந்த காணொளியில் அடுத்த பகுதியும் எப்போது வரும் என காத்துக்கொண்டிருக்கிறேன்.

இது வரை இந்த பதிவில் எத்தனை அறிமுகம் என்ற வார்த்தை வந்ததோ தெரியவில்லை. ஆனால், நான் இன்னும் சொன்ன நிலைக்கு போகவில்லை. 



Tuesday, May 12, 2020

ரெய்னர் மரியா ரில்கே

முதல் மொழிமாற்று முயற்சி. வெற்றி, தோல்வி என்பதை தாண்டி, எனக்கு பட்டதாய் தோன்றியதை எழுதியோ அல்லது கிறுக்கியோ இருக்கிறேன்.

மூலம் - எழுதியது ரெய்னர் மரியா ரில்கே

என் தமிழ்ப்பிரதி

எனக்கு
பாடி தூங்க வைக்க ஒருவர் வேண்டும் 
தோள் தொட்டு உட்காரவும், கூடவே இருக்கவும், 
தொட்டுணரவும், காதில் இசைக்கவும் 
பயணியாய் கனவிலும், எப்பொழுதிலும்...

கூதல் காற்று இரவை உனக்கு சொல்வதும்,
உன் சொல் இறங்குமிடமும் ,
அந்த சொல்லை காட்டில் இறக்கிவைக்கவும்,
மரத்திற்கு சொல்லவும்,
நான் மட்டுமே உனக்கு இருக்க வேண்டும்...

கடிகார முட்கள் மோதிக்கொள்கின்றன 
காலம் அதன் மிச்சத்தை காட்டிக்கொள்கிறது 
கதவுக்கு அப்பால் 
தெருநாய் குரைப்பை தாண்டி 
அந்த சத்தம் எழுப்பிய உறக்கத்தை தாண்டி
ஒரு மௌனம் நிரம்பிக்கொண்டு தான் இருக்கிறது...

என் கண்கள் உன் உடல்தோள் தொட்டிருக்கும் 
வேளையில் 
உன் நிழல் இருட்டில் வெளிவந்தால் 
சரிதான் போ என விட்டுவிடுவேன்...

ஏன், எப்படி, எதற்கு

எப்பொழுதும் ஒரு கேள்வி எழுகிறது. பல கேள்விகள் எனவும் சொல்லலாம். புத்தகம் ஏன் படிக்க வேண்டும். படித்து என்ன ஆகப்போகிறது. தூக்கம் வராமல் படிக்க என்ன செய்யவேண்டும். யாரை படிக்க வேண்டும். எப்படி படிக்க வேண்டும். படித்து தான் ஆக வேண்டுமா. படிக்காமலே இருந்து விடலாமா. சங்க இலக்கியமா, இக்கால இலக்கியமா. சுஜாதாவா, பாலகுமாரனா. யூடியூப் பார்த்தால் போதாதா. கதை சொல்லிகளை பின்தொடர்ந்தால் மட்டும் போதுமே. எந்த புத்தகம் படித்தால் சீக்கிரம் தூக்கம் வரும், என சரமாரியான கேள்விகள் எதிர்கொண்டுள்ளேன். அனைவருக்கும், ஒரு புன்முறுவலே கொடுத்திருக்கிறேன். ஆனால், சிலருக்கு பதிலும் கொடுக்க முயன்றுள்ளேன். அந்த பதில், அவர்களுக்கு போய் சேரும் என நினைத்தவர்களுக்கு மட்டும்.

இதன் தொடர்ச்சியாக, கொரோனா கொடுமைக்காலத்தில், படித்து தான் பார்த்தால் என்ன என்று பல பேர் முயல்கிறார்கள். ஆனால், புத்தகம் இல்லாத கொடுமை வேறு. ஆர்வம் இருக்கிறது, நேரம் இருக்கிறது, ஆனால் புத்தகம் இல்லை என்போருக்கு, நான் பகிர்ந்த சில தகவல்களை இங்கே பதிவிடலாம் என நினைக்கிறேன். எக்காரணம் கொண்டும் இருட்டுலக PDF சந்தைக்குள் போகாமல், ஆனாலும், தரமான படைப்புகளை படிப்பது எப்படி என்பது தான் சொல்ல நினைப்பது.

இவை அனைத்தும் நான் படித்து ரசித்தவை. உங்களுக்கு பிடிக்காமலும் போகலாம், பிடித்துவிட்டு விட முடியாமல் போனாலும் போகலாம். இல்லையென்றால், என்னது, காந்தி செத்துட்டாரா என்ற ரீதியில் என்னை கமெண்ட்டும் செய்யலாம். உங்கள் விருப்பம் எதுவோ, அதுவே என் பதில்.

இதன் ஒரு சாராம்சம், சொல்ல வருவது பலவும், இன்றைய படைப்புகளை அறிமுகப்படுத்தும்.

கனலி மின்னிதழ்

நான் தொடரும் மின்னிதழ். ஏன் எனக்கு பிடிக்கும்? இதில் ஒரு சுயசார்பு இருக்கிறது. நான் வளர்ந்த பகுதியில் இருந்து வரும் மின்னிதழ் என்பதால். ஆனால், சராமாரியான நல்ல படைப்புகளே அங்கு காணக்கிடக்கிறது. கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும். சமீபத்திய பெருந்தேவி கவிதைகள் வெகுவாக ரசித்தேன். அழகிய பெரியவரின் யூதா கதையையும் ரசித்தேன். க. விக்னேஸ்வரன் அழகாக தொகுக்கிறார். படிக்கவும் கண்களுக்கு உறுத்தாத, வண்ணங்களுடன், ஓவியங்களுடன், நன்றாக இருக்கிறது.

யாவரும் மின்னிதழ்

அகரமுதல்வனின் இந்த மின்னிதழ் பல வகையில் எனக்கு பிடித்தமான ஒன்று. பல சீரிய சிறுகதைகள் எனக்கு பிடித்திருந்தன. என் மனதிற்கு பக்கத்தில், வெஞ்சினம் இருக்கிறது. அத்தனைக்கும் மேல், அ. முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல். ஆழ்ந்து படிக்கும் பல பேருக்கு, இந்த பேட்டி ஒரு நல்ல பெட்டகம்.

தடம் மின்னிதழ்

இலக்கியம் என்ற ஒரு மெல்லிய கோட்டை இன்னும் கைவிடாமல் இழுத்துக்கொண்டே இருக்கும் ஒரே கடைசி மூச்சு (விகடனுக்கு). சமீபத்தில் நான் ரசித்தது, இலக்கியமும் பித்துநிலையும். இதை ரசித்தது என்று சொன்னால், ஆக்சிமோரோன் ஆகிவிடும். பிறழ்ந்த மனநிலைக்கான சில படிமங்களை புரியும்படி சொல்வதாக எனக்கு தோன்றியது. அதற்கும் மேல், இது சம்மந்தப்பட்ட சில படைப்புகளையும் அறிமுகப்படுத்துகிறது. ஆத்மாநாம் பற்றியும், ஜி. நாகராஜன் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

வலைப்பதிவுகள்

நான் அடிக்கடி முட்டி மோதுவது, எஸ்ராவிடமும், ஜெயமோகனிடம் தான். வலைப்பதிவுகளை பொறுத்தவரை அவர்கள் இருவரும் நாளேடுகள் போல வைத்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு நாட்கள் விட்டால், பின்தொடர சில நாட்கள் தேவைப்படுகிறது. எஸ்ராவின் தொடர் குறுங்கதைகள் இப்போதைய சூழலுக்கு பெரும் பொருத்தம். கிடைக்கும் ஒரு 20 நிமிடத்தில், நான்கு கதைகளை பிடித்துவிடலாம். எழுபதுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதிவிட்டார்.

ஜெயமோகனின் புனைவுக் களியாட்டு சிறுகதைகள் என்ற தொடர் பதிவுகளில் எண்ணிப்பார்த்தால் இது வரை 59 சிறுகதைகள். ஒரு கதை படித்து, அதை இறக்கி வைக்கவே, சில நாட்கள் தேவைப்படுகிறது. இதில் எப்படி 59. நான் படித்தவற்றில், இது வரை என் தனி விருப்பம், குருவியும், கூடும்.

இவை தவிர, எனக்கு பிடித்த, நான் படிக்கும் இன்னும் சில வலைப்பதிவுகள்,

பா. ராகவன் அவர்களின் எழுத்துக்கு இருக்கும் பல்வேறு விசிறிகளில் நானும் ஒருவன். ஒரு காலத்தில் இவரின் புத்தகங்கள் மட்டும் தான் வாங்கி இருக்கிறேன். பெரும்பாலும் அபுனைவு வகைகள். ரெண்டு என்ற நாவல் இன்றும் மனதில் நிற்கும் ஒன்று. ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆதியிலே நகரமும் நானும் இருந்தேன், சென்னையை பற்றியது. ஆதி (பிறந்து வளர்ந்தவர்கள்) சென்னைவாசிகளுக்கு சென்னை வேறு ஒரு உருவத்தில் காட்சி அளிக்கிறது.

சாருநிவேதிதாவின் zoom உரையாடலை (புதுவகை எழுத்தின் முன் உள்ள சவால்கள்) நேற்று கேட்டுக்கொண்டிருந்தேன். பல கதவுகள் திறந்தன. பல வருடங்களாக தொடரும் ஒரு எழுத்தாளர் என்றாலும், இந்த உரையாடல் செய்த விஷயம் தனித்துவமானது. அந்த வழியில் தொடர முயற்சிக்க வேண்டும். அவரின் வலைப்பதிவுகள், பல நல்ல படைப்புகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். எஸ்ரா அதை இடையற செய்வதைப்போல சாருவும் செய்து கொண்டே இருக்கிறார். எந்த உணவகத்தில் எந்த பிரியாணி நம்மை அசத்தும் என்பதை யாரேனும் ஒருவர் நமக்கு சொல்லித்தான் தெரியவேண்டும். அந்த அறிமுகம் தேவை.

பாரதி கிருஷ்ணகுமார். எனக்கு மய்யம் தொடக்க காலத்தில் இருந்தே இவரை பிடித்திருந்தது. அரசியல்வாதி என நினைத்தபோது தான் தெரிந்தது, இவரும் ஒரு தேர்ந்த இலக்கியவாதி என்பது. மிகவும் பிடித்த ஒரு தருணம், சஞ்சாரம் நாவலுக்கு பவா அவர்கள் எடுத்த உண்டாட்டு விழாவில் இவர் பேசிய உரை. அதுவே என்னை சஞ்சாரம் படிக்க உந்தியது. இந்த உரை இல்லையென்றால், நிதானமாக படித்திருந்திருப்பேன். இவர் எழுதும் வலைப்பதிவில், மிகச்சமீபமாக நா. முத்துக்குமார் தொடர்பான ஒரு தொடரை எழுதி இருக்கிறார். அவனை முதல் முறை பார்த்த போது. நான் ரசித்து படித்த ஒன்று.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...