Thursday, May 21, 2020

நான்

எழுத்தாளனாய் இது ஒரு புது அனுபவம். நான் எழுத நேர்ந்ததே ஒரு துர்கனவு என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், என் கனவில் ஒரு பத்து ஸ்குயர் இடம் கேட்டு ஒருவன் வந்திருந்தான்.

ஒரு காலம் இருந்தது, எழுத்தின் பின் அலைச்சலாய் அலைந்து, எழுதியவரை பார்த்துவிட்டு, அவர் வீட்டில் ஒரு இரண்டு மணி நேரம் அளவளாவி விட்டு வருவேன். அப்போது ஒரு இருபத்தி மூன்று வயது இருக்கும். கவி சுகுமாரன் அவர்களின் கவிதைகளை குறிப்பிட்டு, அது குப்பை எனவும், தான் எழுதியது தான் காலத்தின் அளவுகோல் என்பது போலவும் எழுதி இருந்தார். அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடித்து சேர்வதற்குள், நான்கைந்து அமாவாசைகள் கடந்திருந்தன. பட்டு நூல் போல் அவர் வீட்டில் தனியே படுத்திருந்தார். வயதானவர் தான். நான் இளவயது இருக்கும், என நினைத்தேன் நாக்கை பிடுங்கி நாலு முதல் நாற்பது கேள்விகள் கேட்பதே என் எண்ணம். கூடவே சுகுமாரன் அவர்களின் கவிதை தொகுப்பையும் கொண்டு சென்றிருந்தேன். அவருக்கு அடுத்த அமாவாசை முடிவதற்குள் சுகுமாரன் என்பவர் இவர் நினைத்ததை எட்ட இருந்து பார்த்து அதற்கும் ஒரு கவிதை எழுதுவார். அதுவும் உங்களுக்கு புரியாது என சொல்லலாம் என்று தான் இருந்தேன். ஆனால், வயதான மனிதர்.

சார், நீங்க தான் கவிமேகம் அப்படின்ற அடைமொழியில எழுதறவரா?

ஆமா, வாங்க வாங்க.

எப்படி படிச்சீங்க. எங்க படிச்சீங்க. மொதல்ல உக்காருங்க. தண்ணி கொண்டுவா, தனம்.

இருக்கட்டும்ங்க... உங்க அடைமொழி ரொம்ப இனிமையா இருக்கு. நீங்களே வெச்சிக்கிட்டதுங்களா

ஆமா தம்பி, ஆனா நிறைய பேரு சொல்லுவாங்க. உங்க கவிதை எல்லாம் மேகத்துல இருந்து விழற தண்ணியில ஒரு துளி போல அவ்ளோ தூய்மையா இருக்குன்னு.

அய்யா, அவங்க சொன்ன வரியில கூட ஒரு அழகு இருந்தது. ஆனா, உங்க கவிதைகள்ல அதுவும் இல்லையே. சரி, அது இல்லைன்னாலும் பரவாயில்ல, நீங்க ஏன் சுகுமாரனை அப்படி விமர்சனம் செஞ்சீங்க.

நீங்க ஆறாவது தம்பி.

என்னது, ஆறாவது?

ஏன் சுகுமாரனை விமர்சனம் செஞ்சீங்கன்னு கேக்கற ஆறாவது ஆள்.

அந்த அஞ்சு பேருக்கு என்ன பதில் சொன்னிங்க.

சுகுமாரன் நம்பரை கொடுத்துட்டேன். அதுதான் பதில்.

அது எப்படி பதில் ஆகும்?

அத எழுத சொன்னதே அவர் தான் தம்பி...

கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன்.

அவர் ஏன் அப்படி எழுத சொன்னார். அப்படி சொல்ற மனுஷன் இல்லையே.

நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்க.

அவரோட கவிதைகள் அப்படிங்க. யாதுமாகி நின்றாய் காளி, அப்படின்னு ஒரு கவிதை முடியும். அதை படிச்சுட்டு, நான் கொஞ்ச காலம் தூங்கல.

இதான் தம்பி பிரச்சினையே. பல பேரு, எழுத்தையும் அதை எழுதறவனையும் ஒன்னுன்னு நெனக்கறீங்க. அது வேற இது வேற. மண்ணுக்குள்ள அழுக்கை தான் கொட்டறோம், ஆனா அது கொடுக்குறது அழகான பூ. என்னைக்காச்சும் பூவோட அது இருந்த மண்ணையும் கையில வெச்சிகிட்டே அலையறோமா என்ன? அது தனி, இது தனி. நாதஸ்வரம் வாசிக்கறவனோட வாய மோந்து பாக்கற மாதிரி தான். அதை யாருமே பண்றதில்லையே. ஏன்னா, அதை பண்ணா என்ன நடக்கும்னு தெரியும்.

நீங்க சொல்றது புரியுது. ஆனா, இதுக்கும், நீங்க என்னை சுகுமாரன் கிட்ட பேச சொல்றதுக்கும் என்ன சம்மந்தம்.

நான் கொஞ்சம் மேகத்தை தொட்டு பேசினேன். அவரு உங்களுக்கு பிரபஞ்சத்தை தொட்டு விளக்கி இருப்பாரு. அத்தனையும் கேட்ட கெட்ட வார்த்தையா விழுந்திருக்கும்.

நீங்க என்ன தொழில் செஞ்சீங்க. எப்படி கவிதை. எப்படி கவிமேகம்.

எனக்கென்ன தம்பி, தொழில்னு ஒன்னும் பெருசா இல்ல. பலவேலை பாத்தேன். ஒரு கட்டத்துல, பானிபூரி கூட வித்தேன். அதுக்கு என்ன வரவேற்புன்னு நீங்க கேக்கணுமே. கூட்டம் ஈயா மொய்க்கும். அதையே கொஞ்சம் பெருசா செஞ்சு, துணைக்கு நாலு பேர வெச்சிகிட்டு, தொழில் ஒரு மாதிரி முன்னேறிச்சு. நான் அத ஆரம்பிச்ச கட்டத்துல, எங்க அப்பா அந்த காலத்துல போட்ட சமோசா தான் எனக்கு ஆதாரம். அத கொஞ்சம் இந்த காலத்துக்கு மாத்தி பஜ்ஜி, வேர்க்கடலைன்னு மாத்திக்கிட்டு போனேன். எல்லாமே ஒன்னு சேர்ந்து தான் நடந்துச்சு. இதுக்கு நடுவுல தான், அதே அப்பாவை பின்தொடர்ந்து, அவர் படிச்ச கவிதைகளை எல்லாம் நானும் படிச்சு, சின்ன வயசுலயே கடனெல்லாம் வாங்கி, நான் எழுதின கவிதைகளை, எங்க அப்பா பதிப்பிச்சாரு. ஆனா பாருங்க, பஜ்ஜி வித்த காசு கூட நெறய வந்துச்சு. கடைசியில, எழுதின கவிதை பேப்பர் எல்லாம் கடைசியில எங்க போயிருக்கும்னு உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல. பஜ்ஜியை நசுக்கி எண்ணையை பிழியறதுக்கு என்னோட கவிதை பொஸ்தகத்த தவிர வேற எதையும் கொடுத்த, அதையே குடுங்கன்னு கேட்டு வேற டிமாண்டு. அவன் எண்ணையை பிழியும் போதெல்லாம், நான் உள்ள இறங்கி முத்து மாதிரி எடுத்த வார்த்தை எல்லாம், என்னை கெட்ட வார்த்தையிலே திட்டி போட்டுட்டு, கடைசியில எண்ணெயில தற்கொலை பண்ணிக்கிற மாதிரி இருக்கும்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோங்க. ரொம்ப நேரம் பேசிகிட்டு இருக்கீங்க.

அதெல்லாம் இல்ல தம்பி. இது மாதிரி என்னை தேடி வந்து திட்டின அஞ்சு பேரு கிட்டயும் இந்த கதையை மொதல்ல இருந்து சொல்ல ஆரம்பிக்கும்போதே என்னை நிறுத்திட்டு, அவங்க என்ன பேச நெனச்சாங்களோ அத பேசிட்டு போய்கிட்டே இருந்தாங்க. நீங்க மட்டும் தான் என்னை நிறுத்தாம இருந்தீங்க.

இல்ல, ஆனாலும், எனக்கு கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்குங்க.

இருக்குறது தப்பில்ல. கொஞ்ச நாள் இன்னும் ஆழமா படிங்க. கசடெல்லாம் நீங்கும். தெளிவான ஊத்து தண்ணி ஊரும். அதுக்கப்புறம் எல்லாம் புரியும்.

அவரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பி வந்து இருவது வருடங்கள் ஆகி இருந்தன. தெளிந்து தான் இருந்தேன். தெளிந்ததின் உன்னதத்தையே பெற்றிருந்தேன். நானே எழுதுகிறேன். எழுதித்தள்ளுகிறேன். சரியோ தவறோ, எல்லாமே எழுதுகிறேன். ஆனால், நல்ல ஒரு தொழிலை எனக்காக கொண்டுவிட்டு, மீதி நேரத்தை என் கனவில் முதலீடு செய்திருந்தேன். அதன் பலனே, பல இடங்களில் என் எழுத்துக்கள் படிக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும், சில இடங்களில் அதற்கான அங்கீகாரத்தை பெற்றும் இருந்தன.

அப்படி ஒரு நேரத்தில் தான் அந்த பத்து ஸ்குயர் தம்பி என் வீட்டிற்கு வந்திருந்தான்.

அவன் என்னிடம் ஒரு கேள்விக்கு பதில் கேட்டு வந்திருந்தான். ஆனால், அதற்கு நான் பதில் சொல்வதற்கு திணற, அந்த இடைப்பட்ட காலவெளிக்குள், ஒரு நான்கு முறை இரவுகள் கடந்து சென்றிருந்தன. வீட்டிலேயே தங்க சொல்லி இருந்தேன். அதற்குள் பதில் தேடிக்கொண்டும் இருந்தேன்.

அவன் கேட்ட கேள்வி இது தான். நான் இல்லாமல், ஒரு படைப்பு சாத்தியமா?

எழுதும் நான் இல்லாமல், என் படைப்பு இருக்க முடியுமா? ஒரு கவிதையோ, கதையோ, நாவலோ, கட்டுரையோ, எப்போது எழுதினாலும் அதில் நான் தான் இருக்கிறேன். இல்லை என் எண்ணம் தான் இருக்கிறது. இல்லை, எங்கோ ஒரு நியாபகபள்ளத்தில் இருக்கும் மனிதர்களோ, அவர்களுடன் உண்டான சம்பவங்களோ, இல்லை பார்த்தவையோ, படித்தவையோ தான் இருக்கின்றன. அது இல்லாமல் எழுதுவது சாத்தியமா? நீங்கள் எழுதியதில் ஏதாவது ஒன்றில் நீங்கள் இல்லாமல் இருந்திருக்கீர்களா?

என் படைப்புகளை நான் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்தேன். எழுதிக்கிழித்தால் இது தான் நிலை. எனக்குள் தேங்கி இருக்கும் படைப்பு நியாபகங்கள் இப்போது குறைந்திருந்தன. அதனால், இந்த ஆழ்நிலை ஆதாரங்களை தேடுவது கடினமாகவே இருந்தது.

காலம், நேரம் கடந்து சென்றாலும், அதற்கான பதில் கொடுக்க முடியுமா என தெரியவில்லை.

அந்த பத்து ஸ்குயர் இளைஞன், கொஞ்சம் விஸ்தாரமாக என்னுள் விளைந்து கொண்டிருந்தான்.

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...