Monday, June 04, 2007

கமலின் அப்பாக்களில் யாரை எனக்கு பிடித்திருந்தது...

என்னவோ தேவை இல்லாமல், கமலின் அப்பாக்களில் யாரை எனக்கு பிடித்திருந்தது, என யோசனை. வெட்டி யோசனை தான். ஆனால், யோசித்து பார்த்ததில், பிடித்தவர்கள் இதோ,

பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை: வீட்டு சாமரத்தில் (சரியான வார்த்தையா தெரியவில்லை, நடு வீட்டில் மாடியை பார்த்தார் போல இருக்கும் கம்பி) மகனை தொங்கவிட்டு பார்க்கும், அழகான அப்பா. சங்கீதம், இதோ இவர்களுக்கு மட்டும் தான் என நினைக்கும் சாதனையாளர். மகன், சாஸ்திரிய சங்கீதத்தை, மரத்தை உடைப்பவர்களிடம் சொஷலிசத்துடன் தந்தன்னானா பாடினால் கண்ணாடியை தாண்டி கண் சிவப்பு காட்டும் BPகாரர். பிள்ளைவாள், இதற்கு அப்புறம் தான், உதயமூர்த்தியின் தந்தை. சுத்த தன்யாசி எங்கெங்கே பாட வேண்டும் என்று தியாக ப்ரம்மம் சொல்லாததை, தன் மகனுக்கு சொன்னவர். இத்தனையும் தாண்டி உங்களுக்கு ஜெமினி கணேசன் தெரிந்தால், நிறைய சினிமா பார்ப்பவர் இல்லை நீங்கள்.

பூர்ணம் விஸ்வநாதன் - வருமையின் நிறம் சிவப்பு: இவரின் பாத்திரபெயர் சுத்தமாக நியாபகம் இல்லை. ஆனால், கமல் இவரின் வீணையை விற்று விட்டு வந்து அல்வா குடுக்கும்போது, பார்க்கும் பார்வையும் பேச்சும், இன்னும் மறக்கவில்லை. 'இப்போ சொல்றதுக்கு பாரதி பாட்டு எதுவும் இல்லயோ?' என சொல்லி, மகனின் வாயில் பாரதி வார்த்தைகளை போட்டு வாங்கியவர். பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளைக்கும் இவருக்கும் பெரிய வித்தியாசமில்லை. பிள்ளைவாளும், பூர்ணம் சாரும் மகனை மகனாகவே பார்த்தவர்கள். தனி ஒருவன் அவன் என நினைத்துபார்க்கும் சரியானதை செய்யவில்லை. கடைசியில் ஷேவ் செய்ய மகனிடமே போய் நிற்கும் நிலை. கடைசி வரை, நான் சொன்னது போல் இவன் வரவில்லையே என ஏங்கும் அப்பாக்களின் சுத்தமான நகல்.

பாலக்காடு மணி ஐயர் - காமேஸ்வரனை சமையல் கட்டிற்குள்ளே வளைத்து போட்டு, வரதுகுட்டியை துணைக்கு அமர்த்திய, அக்மார்க் மாமா (ஐயராத்து மாமா). கையை பிடித்து இழுத்துவிட்டான் என்பதற்காக, திரிபுரசுந்தரியை மகனுக்கு கைகோர்த்துவிட்ட அப்பா, திருட்டுபாட்டி கூட இருப்பது தெரிந்தும். செல்லபெட்டியை மகனுக்கும் மேலாக தூக்கி கொஞ்சியவர். மகனுடன் சேர்ந்து, சாம்பாரில் கலந்துவிட்ட மீனை எல்லா இலையிலும் தேடிய சமையல்காரர். ஏ பாலகாட்டு மணி ஐயரே, கிரேஸி மோகனோட பாலகாட்டு காமெடியை நன்னாயிட்டு நடிச்சேளாக்கும். இன்னொரு தடவை, இவரே நினைத்தாலும் அப்படி ஒரு சாம்பார் செய்ய முடியாது.

பெரிய தேவர் -
'அதான், சொல்றாக இல்ல. டிக்கெட்ட மாத்தி போடுங்க.'
'இந்த காட்டுமிராண்டி கூட்டத்துல உங்கொப்பனும் ஒருத்தந்தேன்றத மறந்துறாத'
'தீடீர்னு அவன வேல் கம்ப தூக்கி போட்டுட்டு விஞ்சானம் பேச வாடான்னா எப்படி வருவான்.'
'போ, செத்து போ, நான் தடுக்கமுடியுமா. எல்லா பயபுள்ளயும் ஒரு நாளக்கி சாக வேண்டியதுதேன்.'
'ஆனா, வெத, நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா, கடம ஒவ்வொருத்தனோட கடம'
'என் பேத்திக தான்பா எனக்கு மருந்து'
'குட்டி கழுத, அம்மா பாட்டுதேன்'.
தெலுங்கு பெண்ணை பட்டாசு வெடிக்கும்போது எதேச்சையாக கை பிடித்த மகனை, ஒரு பார்வையால் அதட்டியவர். அப்பளத்தை கறமுறவென கடிக்கும் பானுவை, மறுபடியும் பார்வையில் நிறுத்தியவர். தேவர் காலடி மண்ணே பாட்டை பெருசுகள் பாட, நாந்தேன் பெரியதேவன் என்ற அழகான கம்பீரத்தை அமைதியாக பரப்புவார். சுரம் ஏற்றி கொள்ளும் பெரிய மகனை என்ன செய்வதென தெரியாமல், விட்டுவிட்ட பெரிய மனுசன். சின்னதேவரை நேரில் பார்த்து பேசாமல், தேவையான அளவு கோபத்தை கொட்டிவிட்ட பெரியதேவர். கொஞ்சமும் மதிக்காத, மாயனை எப்படி மாற்றுவது என யோசித்து யோசித்து பேத்திகளிடம் சொர்க்க வரம் வாங்கியவர். மிரட்டும் உடல் வாகு இல்லை, ஆனால், இவரின் ஊர் மொத்தமும் அடங்கியே நடக்கும். மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங் ஆரம்பிக்க இருந்த மகனை, வேப்பென்னை தடவும் பஞ்சவர்ணத்துக்கு கணவனாக மாற்றிய பெரியதேவர்.

தசாவதாரத்தில் இப்படி ஒரு அப்பாவை ஒரு அவதாரத்திற்காவது உருவாக்கி இருக்கிறாரா என தெரியவில்லை. கையும் மூளையும் நமநமவென அரித்ததால், இப்படி ஒரு பெரிய சினிமா அப்பா பதிவு. வெட்டியாக இருப்பதாக நினைத்துகொண்டால், நான் பொறுப்பில்லீங்கோவ்.

2 comments:

ராஜா said...

Good one :) Missed the Patriotic Indian

Lakshman said...

Thanks.
The Patriotic India is definitely a planned miss. He is more of a heroic thatha, than Kamal's Dad. Better say is good Dad to Kasthuri. :)

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...