Monday, May 04, 2020

சுஜாதா என்றார்!!!

மிக அழுத்தமான காலங்கள் அது. இரண்டாயிரத்தின் தொடக்கம். ட்வின் டவர் விழுந்தாலும் விழுந்தது, பலரின் வாழ்க்கையும் விழுந்த தருணம். பல நூறு கதவுகளை தட்டி, வேலை கிடைக்குமா, ப்ராஜெக்ட் கிடைக்குமா, இலவசமாக கூட வேலை செய்கிறேன், ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என ஏறாத படிகள் இல்லை. இத்தனைக்கும் நல்ல கல்லூரியில் முதுகலை. நல்ல மதிப்பெண். ஆனாலும், கைவராதது, சரளமான ஆங்கிலம். இத்தனைக்கும் மேல், கேள்வி பதில் மட்டும் இருந்தால் பரவாயில்லை, க்ரூப் டிஸ்கஷன் என்ற பெயரில் நடக்கும் அராஜகம். பேசுபவர்கள் மட்டுமே அடுத்த படி செல்வார்கள். குரல் உள்ளவர்கள் மட்டுமே அடுத்த படி செல்வார்கள். ஆங்கிலம் நன்றாக பேசுபவர்கள் மட்டுமே அடுத்த படி செல்வார்கள். நான் அடுத்த படி செல்லாததற்கு காரணம் சொல்ல வேண்டுமா என்ன... இது எதுவும் எனக்கு இல்லை... அவமானங்கள், அழுத்தங்கள் பக்கத்தில் டபுள் காட் போட்டு படுத்திருந்த காலங்கள்... ஆனாலும், என் பையில் ஒரு தமிழ் புத்தகம் இருக்கும். ஏதாவது படித்துக்கொண்டே இருப்பேன். மூன்றாவது காட்டில் புத்தகம் இருக்கும். மவுண்ட் ரோட்டில் இருக்கும் அதனை ஐடி கம்பெனியில் ஒரே பதில். ரெசுமே குடுங்க, பாத்து சொல்லுவாங்க...

ஒரு முறை தாம்பரத்தில் இருந்து பிரெஷர்ஸ் கால். ஒரு ஐநூறு பேர். வழக்கம் போல, அவமானமே மிஞ்சும். குரூப் டிஸ்கஷனில் மற்றவர் வாயை மட்டுமே பார்த்து விட்டு வெளியேற வேண்டிய நிலைமை தான் வரும் என்றே நினைத்தேன். அதுவே நடந்தது. ஆனால், ஒரு நல்ல விஷயம், அங்கே கடைசி கட்டம் வரை அனைவரையும் அழைக்காமல் இருந்தாலும், மதிப்பெண் அடிப்படையில் சில பேரை மட்டும் கடைசி கட்டம் வரை கொண்டு சென்றார்கள். அதனால், கடைசி கட்டமான, நேர்முகத் தேர்வு. கேள்விகள் கேட்டு திளைத்தார் ஒரு தாத்தா. பாதி சொல்லி பாதி சொல்லவில்லை. அடுத்த நேர்முகத் தேர்வில், நடுத்தரவயது பெண்மணி என்னை துளைத்தெடுக்க வந்தது போன்றே இருந்தார். சரி, சீக்கிரம் எனக்கான அழுத்தமான நொடிகளை கொடுத்து முடியுங்கள். போய் சேரலாம் என்று இருந்தேன். அவர் கேட்ட கேள்வி எதிலும், தகவல் தொழில்நுட்பம் இல்லை. என்னை பற்றியே தெரிந்து கொள்ள முயன்றார். கடைசியில் கேட்ட கேள்விக்கு மேல் அவர் பேசவே இல்லை. ஆனால், நான் பேசிக்கொண்டே இருந்தேன். கேட்ட கேள்வி, நீங்கள் கடைசியாய் படித்த புத்தகம் எது, ஏன் பிடிக்கும். நான் சொன்னது, ஸ்ரீரங்கத்து தேவதைகள். அதில் இரண்டு மூன்று எபிசோட் எடுத்து சரளமாக சொல்ல ஆரம்பித்து விட்டேன். அவரும் கேட்டுக்கொண்டே இருக்கிறார். கடைசியில் ஒரு புன்னகையோடு அனுப்பிவைத்தார். வேலைக்கு சேரும் படி கடிதமும் வந்தது.

ஒரு நாள், அவரை சந்தித்தபோது கேட்டேன், எப்படி என்னை தேர்ந்தெடுத்தீர்கள் என்று. சுஜாதா என்றார்!!!

1 comment:

ChellaVidya said...

சுஜாதாட்ஸ்!! மிக அருமை!

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...