Saturday, January 10, 2009

சென்னை புத்தக கண்காட்சி - 2009

கடந்த இரண்டு வருடங்களாக புத்தக கண்காட்சிக்கு போக முடியவில்லை. இப்போதைக்கு சென்னை தான் ஜாகை என்பதால், திறந்த மூன்றாவது நாள் சென்றிருந்தேன். இதற்கு முன் காயிதே மில்லத்தில் நடந்தது. இப்போதெல்லாம் செயிண்ட் ஜியார்ஜ் ஆங்லோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. முன்னதற்கும் இதற்கும் கட்டமைப்பு ஒன்றாகவே பட்டது. உள்ளே நுழையும் பாதையின் இரு பக்கத்திலும் இடைவெளியில்லாமல் பேனர்கள். நல்ல விஷயமாக ஒவ்வொரு பேனரிலும் எந்த ஸ்டால் எண் என்று போட்டிருந்தார்கள். மொத்தமாக ஒரு லே-அவுட் பேனர் வெளியே போட்டிருந்தால், குறித்துக் கொண்டு போக வசதியாக இருந்திருக்கும். பலர் எந்த பதிப்பகம் எங்கே இருக்கிறது என்று கேட்டு கேட்டு அலைந்து கடைசியில் கேண்டீனில் தஞ்சம் புகுந்தார்கள்.

கண்காட்சி நடக்கும் அத்தனை நாட்களின் மாலைகளிலும் யாராவது பேசுவதோ இல்லை நிகழ்ச்சி நடப்பதோ வழக்கம். நிகழ்ச்சி பட்டியல் கண்ணில் படும் வகையில் வைத்திருந்தார்கள். நான் போன நாள் வைரமுத்து வார்த்தை உதிர்ப்பதாக போட்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சி பட்டியல் BAPASI வலைப்பக்கத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருந்திருந்தால் பலருக்கு உபயோகப்படும்.

நான் பார்த்து புத்தகம் வாங்க உத்தேசப்பட்டது நான்கு பதிப்பகங்கள் மட்டும். காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு மற்றும் விகடன். மற்றவை எல்லாம் உள்ளே நுழைந்து ஒரு கழுகு பார்வை விட்டதோடு சரி. மற்றதில் என்னை கவர்ந்தது தீம்தரிகிட, நக்கீரன். தீம்தரிகிட ஒற்றை இலக்கத்திலேயே புத்தகங்கள் வைத்திருந்தார்கள். கூடவே வழக்கம் போல் poll. ஞானி கைவண்ணம். ஞானி உட்கார்ந்திருந்தால், பார்த்து ஏன் சார் இப்படி என்று கேட்க உத்தேசித்திருந்தேன்.

உயிர்மையில் நல்ல கூட்டம். எந்த பக்கம் நகர்ந்தாலும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிக்கொண்டோ இல்லை சிபாரிசு செய்துகொண்டோ இருந்தார்கள். நீக்கமற நிறைந்திருந்தவர்கள் சுஜாதா, சாரு மற்றும் எஸ். ராமகிருஷ்ணன். சாரு கொஞ்சம் நிறையவே இருந்தார். பல பேர், எச்ஸிச்டென்ஷியலும் ஃபேன்சி பனியனும் பார்த்தபடிக்கு இருந்தார்கள். நான் ராஸலீலா வாங்க நினைத்தேன். ஆனால், என்னமோ மறு எண்ணம். அதை வாங்குவதற்கு, என் மண்டைக்கு புரியும் நான்கு குட்டி புத்தகங்கள் வாங்க முடிவெடுத்தேன். ஜீரோ டிகிரி படித்த பாதிப்பு. பில் போடுபவரின் பக்கத்து சேரில் எஸ். ராமகிருஷ்ணன் நான்கைந்து பேருடன் என்னவோ பேசிக்கொண்டிருந்தார். அப்படியே புத்தகம் நீட்டுபவர்களிடம் கையெழுத்தும் போட்டுக்கொண்டிருந்தார். நானும் அவரின் சிறுகதை தொகுப்பை நீட்டி ஒப்பம் வாங்கி கொண்டேன். கொஞ்சம் தள்ளி மனுஷ்யபுத்திரன் மேற்பார்வையிட்டபடி இருந்தார். அவர் பக்கத்தில் யாருமில்லை. வாங்கிய சுஜாதாவின் நிலா நிழல் புத்தகத்தில் கையெழுத்து கேட்டு, என்னை அறிமுகபடுத்திக்கொண்டேன்.

கிழக்கு இந்த முறை அதன் குட்டி பதிப்பகங்களுடன் தனிதனியாக ஸ்டால்கள் போட்டிருந்தார்கள். நலம், வரம், ப்ராடிஜி, ஆடியோ புத்தகங்கள் இதெல்லாம் தனிதனி ஸ்டால்கள். நல்ல உத்தி. கூட்டத்தை குறைக்கும். கிழக்கில் நுழைந்தால், எதிர்பார்த்தபடி, தள்ளுமுள்ளு கூட்டம். இருந்தாலும் நுழைந்தேன். வழக்கமாய் இருக்கும் சுவாரசியம் எனக்கு இந்த முறை கொஞ்சம் குறைவாக இருந்தது. நிறைய அறிமுகமான புத்தகங்கள் (படிக்காவிட்டாலும்) இருந்த காரணமாக இருக்கலாம். ஆனால், அத்தனை புத்தகங்களும் பளிச் பளிச். அம்பானி புத்தகத்தை வாங்க அல்லோலகல்லோலபட வேண்டிய அவசியமில்லை. சோம வள்ளியப்பனின் அள்ள அள்ள பணம் மூன்று பாகங்களும் ராஜமரியாதையுடன் நீக்கமற நிறைந்திருந்தது. ஸ்டாக் மார்க்கெட் பக்கம் ஒதுங்கினால் அலுவலகத்தில் பஞ்சப்படி கேட்கும் இந்த நிலைமையிலும், அவரின் புத்தகங்கள் வாங்க பல பேர் இருந்தார்கள். இன்றைக்கு இல்லையேல் நாளை உயர்ந்தே தீரும் என்ற எப்போதும் போல் நம்பிக்கை. கிழக்கின் miniMAX ஒரு நல்ல அறிமுகம். புத்தங்களை சல்லிசாக 25 ருபாய்க்கு வாங்க பிரியப்படும் சரியான பொருளாதார நேரம். ஆயில்ரேகை தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. கேட்டால், இதோ கொண்டுவருகிறேன் என்று இரண்டுக்கும் மேற்பட்டோர் கால் தெறிக்க ஓடினார்கள். மற்ற பதிப்பகத்தில் குறைந்த ஒரு விஷயம் பாங்கான customer support. அது கிழக்கில் அள்ள அள்ள கிடைக்கிறது. எத்தனை தேடியும் ஆயில் ரேகை கிடைக்கவில்லை. சாரி சார், உங்க அட்ரஸ் குடுங்க, நாங்களே வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் என்றார்கள். வேண்டாமென்று, நாளைக்கு வருவதாய் சொல்லிவிட்டு, முஷாரஃப்பின் புத்தகம் வாங்கி கொண்டு என் இடத்தை காலி செய்து கொடுத்தேன்.

விகடனில் வழக்கம் போல் பிளாஸ்டிக் கவர் மினுமினுங்க அத்தனை புத்தகங்களையும் அடுக்கிவைத்திருந்தார்கள். விகடன் கொஞ்சம் வாரபத்திரிக்கை பேப்பரில் புத்தகங்கள் அச்சிடுவதை மாற்றிக்கொண்டால் உசிதமாய் இருக்கும். நாள்பட நாள்பட தாள்கள் வெளியே வர, கடைசியில் வீட்டில் கோலப்பொடி கொட்டிவைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அங்கே வைகோ எழுதிய ஒபாமா புத்தகத்தை வாங்கி நகர்ந்தேன்.

பெரும்பாலான பதிப்பகங்களில் காணக்கிடைத்த ஒரு விஷயம், அங்கே salesல் இருப்பவர்கள் பலருக்கு புத்தகங்கள் பற்றி தெரிந்திருக்கவில்லை. தன் பதிப்பகத்தில் இருக்கும் புத்தகங்கள் பற்றி அடுத்த பதிப்பகத்தின் இருக்கும் ஒரு விஷயம் தெரிந்த படிப்பாளியிடம் கேட்க சொல்லி சொன்ன ஒருவரை பார்த்தபோது திக்கென்று இருந்தது.

வெளியே வந்தபோது வெள்ளையும் சொள்ளையுமாக கவிப்பேரரசு விரைப்பாக தமிழ் பேசிக்கொண்டிருந்தார். ஆறு மணி விழாவிற்கு ஆறு மணிக்கே வந்தற்கான காரணத்தை சொன்னார். அடுத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சி துவக்க விழாவில் கலைஞரின் பேச்சை கேட்க போக வேண்டுமென்றார். அதற்கடுத்து அவரின் வழக்கமான உரையாடல். அந்தளவுக்கு சுவாரசியமில்லாததால் வண்டியெடுக்க நகர்ந்தேன்.

எதிர்ப்பார்த்த அளவுக்கு கூட்டமில்லை. ஆனாலும் வருடாவருடம் இந்த கூட்டம் வருவதே ஆரோக்கியம். நிறைய குழந்தைகளும் அங்குமிங்கும் அப்பா அம்மாவிற்கு தொல்லை கொடுத்தபடிக்கே ஓடிக்கொண்டிருந்தனர். அது இன்னுமொறு ஆரோக்கியம். படிக்கிறார்களோ இல்லையோ, உள்ளே சில நேரங்கள் பிடிவாதம் பிடிக்காமல் இருப்பதே போதும். புதிய புத்தக வாசனை என்னவெல்லாமோ பண்ணும். தானாகவே ஈர்க்கும். ஈர்க்கப்படட்டும். அறிவாகட்டும்.

கிளம்பும் போது பார்த்தால், கண்ணதாசன் பதிப்பகத்தில் கடும் கூட்டம். கூட்டத்தை பார்த்தால் புத்தகம் வாங்கும் கூட்டமாக தெரியவில்லை. கொஞ்சம் எட்டி பார்த்ததில், ராமதாஸ் நின்று கொண்டிருந்தார். ஜி.கே. மணியுடன். எதற்கு வந்தார்களோ தெரியவில்லை. வந்த வேகத்தில் கிளம்பியும் விட்டார்கள்.



2 comments:

MSV Muthu said...

jealous of you :(

Anonymous said...

Great Nanba!!

Note: Change the caption for "Sruthi".Unga wifekku theriyuma ithu!! :-)

Vj

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...